Skip to main content

மோடியின் பிரச்சனைகளை தீர்க்க வந்த கரோனா வைரஸ்?

Published on 14/03/2020 | Edited on 20/03/2020



கரோனா வைரஸுக்கு கோவிட் – 19 என்று பெயரிட்டதற்கு காரணம், CO என்றால் கரோனாவின் முதல் இரண்டு எழுத்துகளாம். VI என்றால் வைரஸ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாம். D என்றால் டிசீஸ் என்ற வார்த்தையை குறிக்குமாம். 19 என்றால் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 2019 டிசம்பர் 31 ஆம் தேதியை குறிக்குமாம். 

 

Corona virus to solve Modi's problems?

 



சரி, இந்த வைரஸ் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகமே பெரிய அளவில் பதறியது. ஆனால், சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் மாநிலத்தையே வெளியுலகத்தின் பார்வையில் படாமல் தடைசெய்துவிட்டது. அதன்பிறகு போர்க்கால அடிப்படையில் அந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி உடனடியாக சிகிச்சை அளிக்க மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்த வைரஸால் சீனாவில் இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரம் என்று கூறப்படுகிறது. சீனாவின் அவசர கால நடவடிக்கையை மீறி இந்த வைரஸ் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. அவற்றைத் தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் பரவிய கரோனா, சமீபத்தில் இந்தியாவுக்கும் வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

முதலில் டெல்லியிலும், கேரளாவிலும் அச்சுறுத்திய கரோனா, இப்போது மேலும் பல மாநிலங்களிலும் காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது, மொத்தத்தில் 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 85 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

 

Corona virus to solve Modi's problems?

 



அதற்குள் இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் மூடப்படுகின்றன. திருப்பதி உள்ளிட்ட பிரபலமான ஆலயங்களுக்கு வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். வழக்கமாக 2 ரூபாய்க்கு கிடைக்கிற முகமூடிகள் இப்போது 15 ரூபாய் என்று விலை உயர்ந்திருக்கிறது. மீன்கள், கோழிகள் சாப்பிட தடை விதிக்கப்பட்டு அந்த வியாபாரம் படுத்துவிட்டது. அதைக்காட்டிலும் கொடுமை என்னவென்றால், பழங்களைக்கூட சாப்பிடக்கூடாது என்று வதந்தியை பரப்பி, பழ வியாபாரமும் படுத்துவிட்டது.

இதற்கிடையே, வழக்கமாக நாற்றமெடுத்த குப்பைகளை சுத்தம்படுத்துவோர்,  எந்த முகமூடியும் அணியாமல், தங்கள் வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். குப்பைகளைக் கிளறி கிடைக்கிற உணவைத் தேடுகிறவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், கரோனா பாதிப்பை கண்டுபிடித்த தென்கொரியா அரசு, இதுவரை எந்த பதற்றத்தையும் மக்கள் மீது திணிக்கவில்லை என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது. ஆம். இதுவரை தென்கொரியாவில் எந்த ஒரு நிறுவனத்தையும் அரசு மூடவில்லை என்கிறார்கள். முகமூடி அணிந்து தங்களுடைய அன்றாட வேலைகளை இயல்பாக செய்ய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

 

Corona virus to solve Modi's problems?

 



புதிதாக ஒருவர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டால், அவரை உடனடியாக அதிகாரிகள் தனிமைப்படுத்துகிறார்கள். அவருக்கு தேவையான சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. மார்ச் 13 ஆம் தேதி நிலவரப்படி தென்கொரியாவில் கரோனா வைரஸால் தாக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 979 என்றும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 67 என்றும் அரசு அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரில் நோய்த் தொற்று நீக்கப்பட்டோர் எண்ணிக்கை 177 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியா அரசின் ஆக்கப்பூர்வமான இந்த நடவடிக்கைகள் உலகிற்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த நாட்டில் இந்த நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியும் கிட்டத்தட்ட வெற்றிபெறும் நிலையை தொட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இந்தியாவில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மாடுகளுக்கு முகமூடி அணிவிக்கிறார். காசி விஷ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கக் கல்லுக்கு முகமூடி அணிவிக்கிறார்கள்.  

 

Corona virus to solve Modi's problems?

 



உலகம் முழுவதும் 114 நாடுகளில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. உயிர்ப்பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 200 ஆகிவிட்டது. இந்தியாவில் 85 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2 பேர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், தேசியப் பேரிடராக அறிவித்திருக்கிறார்கள். அதாவது, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, பங்குச்சந்தை சரிவு, வங்கிகள் திவால் போன்ற பிரச்சனைகளில் இருந்து மோடியை மீட்கவந்த மீட்பராக கரோனா வைரஸ் கிடைத்திருக்கிறது. 

 

 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.