Skip to main content

ஊரடங்கு போட்டும் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு... அதிர வைத்த ரிப்போர்ட்!

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

bus


ஆசிய நாடுகளிலேயே அதிக கரோனா நோயாளிகள் உள்ள நாடாக மாறியுள்ள இந்தியா, உலக நாடுகளின் டாப் டென் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. மே மாதம் 11ஆம் தேதி 70,768 பேர் இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை மே 25ஆம் தேதி ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 15 நாட்களில் 106 சதவிகிதம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளின் பரவலுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதே வேகம் நீடித்தால், ஆகஸ்ட்டில் 15 லட்சம் பேர் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இறப்பு எண்ணிக்கையும் லட்சத்தைத் தாண்டும் அபாயம் உள்ளது என உலகளாவிய மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 


இந்தியாவில் 8 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்தே தங்களது ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கேரளாவுக்குச் சென்றவர்கள் மூலமாக கேரளாவில் 415 கரோனா நோயாளிகள் முளைத்திருக்கிறார்கள். அதேபோல் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு நடந்தும் டிரக்குகளிலும் சென்றவர்கள் 8 கோடி பேர். இவர்களுக்கு முறையான பரிசோதனையும் இல்லை. நோய் எதிர்ப்புத் திறனுக்கான உணவும் இல்லை. அதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு அறிவிக்கும்போது இந்தியாவில் இருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 564. அப்பொழுது வெறும் 10 பேர்தான் கரோனா நோயால் மரணமடைந்தார்கள். இந்தியா முழுவதும் ஊரடங்கு 60 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட மே மாதம் 26ஆம் தேதி மொத்தம் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.45 லட்சம். அவர்களில் மரணமடைந்தவர்கள் 3867 பேர். இந்தியாவில் ஊரடங்கு சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
 

 


தமிழகத்தில் மே 26 நிலவரத்தின்படி 17,728 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 11,640 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டை கரோனா காலத்தில் இயங்க அனுமதித்ததும், ஊரடங்குக்குள் ஒரு ஊரடங்கு போட்டு மக்களை இடைவெளியின்றி கூடச் செய்ததும் நோய்த் தொற்று தடுப்பில் மிகப்பெரிய தோல்வி என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.
 

flight


கரோனாவோடு வாழ்வது எப்படி என தமிழக அரசு ஒரு பிட் நோட்டீஸை அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் கேரளாவில் கரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அடுத்த 15 நிமிடத்தில் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடும். அவர்களுக்குப் பல்வேறு மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். மரண எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அதேநேரத்தில், பத்துக்கு பத்து பரப்புள்ள குடிசையில் 10 பேர் படுத்துத் தூங்கும் மும்பை தாராவியிலும் குடிசைப் பகுதிகள் நிறைந்த சென்னை ராயபுரம் பகுதிகளிலும் நோயாளிகளுக்குச் சோதனை செய்வதும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதும் இயலாத செயலாகிவிட்டது.

சென்னையிலும், மும்பையிலும் கரோனா ஏறத்தாழ சமூகத் தொற்றாக மாறிவிட்டதால், கட்டுப்படுத்தத் தெரியாமல் அரசுகள் விழிக்கின்றன. மே 31ஆம் தேதி ஊரடங்கு தமிழகத்தில் முடிவடைகிறது. மத்திய அரசு, மாநில அரசுகள் வேண்டாம் எனச் சொன்னாலும் நோய் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து ரயில்கள் மற்றும் விமானங்களை இயக்க ஆரம்பித்துவிட்டன. மும்பையில் இருந்து கேரளாவிற்கு கேரள அரசின் அனுமதியே இல்லாமல் இரண்டு ரயில்கள் அனுப்பப்பட அதை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இப்படி நிலைமைகள் போவதைக் கண்ட தமிழக அரசு மருத்துவ வல்லுநர்களைக் கூப்பிட்டு மே 31ஆம் தேதி ஊரடங்கை நீக்குவதா வேண்டாமா, இமாச்சலப் பிரதேச அரசு போல இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாமா என ஆலோசனை செய்தது.
 

http://onelink.to/nknapp


தமிழகத்திலேயே கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி போன்ற மேற்கு மண்டலப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. அதனால் அதன்படி மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளைக் காட்பாடியில் இருந்தும், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளைச் செங்கல்பட்டில் இருந்தும் இயக்கலாமா என ஒரு ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசோ அதிக நோய்த்தொற்றுள்ள சென்னையைக் குறிவைத்து விமானங்களையும், ரயில்களையும் அனுப்ப முடிவு செய்திருக்கும்போது நாம் எப்படிச் சென்னை நகரில் பேருந்துகளை அனுமதிக்காமல் இருக்க முடியும் என அரசு அதிகாரிகள் மருத்துவர்களிடம் வாதம் செய்திருக்கிறார்கள்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் சமூகத்தொற்றாக மாறிவிட்ட கரோனாவைக் கட்டுப்படுத்துவது சவால்தான் என அரசு அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி முன்னிலையிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.


 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.