Skip to main content

கரோனா! தன்னைத் தானே  ஏமாற்றிக்கொள்ளும் அரசு!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

chennai

 

கரோனா விவகாரத்தில் சிறப்பாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு, அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறது. ஆனால் நிலைமையோ வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தின் தொற்று எண்ணிக்கை ஜூலை 6-ஆம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆகிவிட்டது. இறப்பின் எண்ணிக்கையும் 1,571 ஆனது பெரும் துயரமாகும். கரோனா விவகாரத்தில் தன்னைத் தானே ஏமாற்றி வருகிறது அரசு.

 

மார்ச் 5-இல் தான் தமிழகத்தில் முதன் முதலில் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இடைப்பட்ட இந்த 4 மாதத்தில் தொற்றின் வேகம் பலமடங்காகிதே தவிர குறையவில்லை. இப்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மட்டுமல்லாது, மீண்டும் ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது சென்னை மண்டலம். 5-ஆம் தேதியுடன் முழு ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவந்த அரசு, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஏகப்பட்ட தளர்வுகளை அறிவித்துச் சிக்கலை அதிகரித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமலே மக்கள் போய்வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

 

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்றுகளுக்கெல்லாம் தலைமை கேந்திரமாகத் திகழ்வது சென்னைதான். அதன் தாக்கத்தில்தான் செங்கை, காஞ்சி, திருவள்ளூர் சிவப்பு மண்டலமாயின. இந்தச் சிவப்பு மண்டலத்தில் இருந்துதான் தமிழகம் முழுக்க தொற்று விநியோகம் வேகமெடுத்தது. நிலைமை இவ்வாறு இருக்க, சென்னை உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களைச் சரிசெய்வதற்கு முன்பே, இப்போது பெருமளவு தளர்வை ஏற்படுத்திவிட்டார்கள்.    

 

chennai


 
சென்னையில் கரோனா தடுப்பில் விறுவிறுப்பாகச் செயல்படுவது போல் காட்டிக்கொண்ட அரசு, முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் துறை ஆணையருமான ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை, மே 1-ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிகைக்கான சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அவருக்குத் துணையாக 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அப்போது சென்னையில் தொற்று எண்ணிக்கை 1,082-தான். ஒட்டுமொத்த தமிழகத்திலும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அப்போது 2,526-ஐ தாண்டியிருக்கவில்லை.

 

இதன் பிறகாவது கரோனாவின் வேகம் கட்டுபட்டதா என்றால், முன்பை விடவும் வைரஸின் வேகம் பல மடங்கானதுதான் மிச்சம். அதுவரை சென்னையில் 50, 100 என்ற கணக்கில் அதிகரித்த  தொற்று, நாளொன்றுக்கு 500, 1000, 1500, 2000 என்று எகிறி அது 3,000 வரை நெருங்கியது. சென்னையில் 6-ஆம் தேதி நிலவரப்படி மொத்த தொற்று எண்ணிக்கை  70, 017 ஆக உயர்ந்திருக்கிறது.

 

chennai

 

இதை, ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சின் கவனக் குறைவு என்று  சொல்ல முடியாது. இவரைப் போன்ற அதிகாரிகள் களமிறக்கப்பட்டும் கரோனாவின் வேகம் குறையவில்லை என்றால், அரசு கையாளும் நடைமுறையில்தான் கோளாறு என்று பொருள். முதல் குறைபாடு, ஊரடங்கை அறிவித்துவிட்டு அதில் ஆயிரத்தெட்டு தளர்வுகளை அறிவிக்கும் அரசின் வேடிக்கை டெக்னிக்தான். 

 

chennai

 

கரோனா இப்போது சமான்ய மக்களை மட்டுமல்லாது இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் அலுவலகத்திலேயே இருக்கும் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பிரபல மருத்துவர்கள், செவிலியர்கள், வட்டாட்சியர்கள், தொழிலதிபர்கள், ஊடகத்துறையினர் என அனைவரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. அதேபோல் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனில் தொடங்கி, விஜயா மருத்துவமனை டைரக்டர் சரத் ரெட்டி, பாடகர் ஏ.எல்.சீனிவாசன், டி.வி.எஸ். குழும பாஸ்ட்னர்ஸ் நிறுவனத் தலைவர் நாராயணசாமி பாலகிருஷ்ணன்  என பிரபலங்கள் பலரையும் அது மரணத்தில் ஆழ்த்திகொண்டே இருக்கிறது.  

 

chennai

 

இப்படிப்பட்ட நெருக்கடி மிகுந்த நிலையில்தான், சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கை பலவீனப்படுத்தி, தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் நாளான 6-ஆம் தேதியே சென்னை உள்ளிட்ட பல பகுதிகளிலும் டிராஃபிக்கைத் திணறவைத்திருக்கிறார்கள். 

 

http://onelink.to/nknapp

 

இரண்டொரு நாட்கள்  சென்னையின் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்திற்குள் வந்ததையே பெரிய சாதனையாகக் கருதி, கரோனா  குறைந்து வருவதற்கான அறிகுறி இது என்று தமுக்கடிக்கிறார்கள். இதே நிலை தொடர்கிறதா? என்று இன்னும் சிலநாள் அவதானிக்கக் கூட அவர்களுக்குப் பொறுமை இல்லை. தளர்வை ஏற்படுத்துவதிலேயே அவசரம் காட்டுகிறார்கள். 

 

இதைப் பார்க்கும் போது, சென்னையில் தொற்றின்  எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதற்காக, தாங்கள் விரும்பும் எண்ணிக்கை வரும் வரையில் மட்டும் பரிசோதனையைச் செய்கிறார்களோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. 

 

கரோனா தொற்று இல்லாத நிலை என்று அவர்கள் இப்போதைக்கு அறிவிக்க வேண்டுமானால், கரோனா பரிசோதனையை முழுதாகக் கைவிட்டால்தான் சாத்தியம். பரிசோதனை செய்தால்தானே கரோனா தென்படுகிறது என்று பரிசோதனைகளை அவர்கள் கைவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எது எப்படியோ, மறுபடியும் ’முதல்ல இருந்து...’ என அவர்கள் ஊரடங்கு விளையாட்டை ஆரம்பிக்காமல் இருந்தால் சரிதான்.

 


படங்கள்: அசோக், ஸ்டாலின், குமரேஷ்

 

 

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.