Skip to main content

தடுமாறும் தமிழ்நாடு அரசு! ஒவ்வொரு நிகழ்விலும் இரட்டை முடிவு... -ஆளூர் ஷா நவாஸ் கட்டுரை

Published on 14/04/2020 | Edited on 15/04/2020

கட்டுரை: ஆளூர் ஷா நவாஸ்

கரோனா நோய் தொற்று, நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஜனவரி இறுதியிலேயே வந்துவிட்டது. பிப்ரவரி 3-ஆம் தேதியே கரோனாவை  மாநிலப் பேரிடராக கேரளா அரசு அறிவித்துவிட்டது. அதன்பிறகு ஒரு மாதம் கடந்த நிலையில், மார்ச் இரண்டாவது வாரம் வரையில்கூட இதை ஒரு பெரிய பிரச்சனையாக தமிழ்நாடு அரசு கருதவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நடந்து வந்தது. கரோனாவின் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிய போதும், அரசு அதை மேம்போக்காகவே அணுகியது.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



கரோனா தொற்று குறித்து அச்சம் தெரிவித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியபோது, ''கரோனா குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. வயதானவர்களை எளிதில் தாக்கும் என்பதால், 70 வயது கடந்துவிட்ட துரைமுருகன் அச்சப்படுகிறார் போல!'' என்று கிண்டல் செய்து சிரித்தபடி பேசினார் முதல்வர். பின்னர், அதே முதல்வர் அடுத்த வாரமே ஊரடங்கை அறிவிக்க வேண்டிய நிலை வந்தது. 

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



ஊரடங்கை அறிவித்த பிறகும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஊரடங்கிற்கு ஒரு வாரம் முன்பே, சட்டமன்ற கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தன. ஆனாலும் பிடிவாதமாக நடத்தியது அரசு. வேறு வழியின்றி கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்தன எதிர்க்கட்சிகள். எனினும், தொடர்ந்து நடந்தது சட்டமன்றம். பின்பு ஓரிரு நாளிலேயே தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கூட்டத்தொடரை முடித்து வைத்தது அரசு.
 

 nakkheeran app



ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், +2 தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. தேர்வு நடந்தே தீரும் என நடத்தியது அரசு. ஆனால், பேருந்துகள் இல்லாததாலும், கரோனா அச்சம் காரணமாகவும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதவே வரவில்லை. வராதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று வேறு வழியின்றி அறிவித்தது அரசு. நடத்தப்பட்ட தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தவும் முடியாத நிலையில் அந்தப் பணியையும் ஒத்தி வைத்தது அரசு. ஊரடங்கு தொடர்ந்தாலும் 13 வகையான தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று திடீரென அறிவிப்புச் செய்தது அரசு. பின்பு சில மணித்துளிகளிலேயே அந்த அறிவிப்பு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



''தன்னார்வலர்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் என யாரும் பொதுமக்களுக்கு நேரடியாக உதவிகள் செய்யக்கூடாது'' என்று தடை விதித்தது அரசு. அரசின் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றது திமுக. இதையடுத்து, தமது அறிவிப்பை திரும்பப் பெற்று விளக்க அறிக்கை கொடுத்தது அரசு. இதற்குமுன் வந்த பேரிடர்களிலிருந்து பெருமளவில் மக்களை மீட்டது தன்னார்வலர்கள்தான். அப்படியிருக்க, இதுவரை வந்த பேரிடர்களிலேயே மனித சமூகம் கண்டிராத பேரிடராக உள்ள கரோனாவிலிருந்து மக்களை மீட்க அரசால் மட்டுமே முடியுமா? தன்னார்வலர்களை அனுமதித்தால், அதன்மூலம் கரோனா பரவிவிடும் என்று அரசு அச்சப்படும் எனில், காய்கறி கடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் என்று லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே களத்தில் தானே நிற்கின்றனர்.

அவர்கள் மூலமும் பரவ வாய்ப்பு உண்டே? அதற்காக மனித இயக்கமே இல்லாமல் அனைவரும் முடங்கியா உள்ளனர்? இயங்க வேண்டியவர்கள் இயங்கினால்தான் ஒட்டுமொத்த மக்களையும் காக்க முடியும். அந்த வகையில், தன்னார்வலர்களின் இயக்கம் இந்த நேரத்தில் முக்கியமானது. அதை தடுப்பது மனித விரோதச் செயல். நோய் தொற்று பரவாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணிபுரிய அரசு ஊழியர்களுக்கு என்ன வழிமுறையோ அதே முறையில் தன்னார்வலர்களையும் அனுமதிக்க வேண்டும்.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



அதுபோல், அத்தியாவசிய பொருள்களை மக்களுக்குச் சேர்ப்பதில் வணிகர்களின் பங்கு முதன்மையானது. வணிகர்களுக்கு சரக்குகள் தடையின்றி வருவது முக்கியமானது. இதில், வணிகர் அமைப்புத் தலைவர்களை அழைத்து தமிழ்நாடு அரசு கலந்தாய்வு செய்யவே இல்லை. விக்கிரமராஜா தொடர்ந்து வேண்டுகோள் வைத்த நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் மட்டும் அழைத்துப் பேசியுள்ளார். அதுவும் இரண்டுவாரங்களுக்குப் பிறகு. ஆனால், தலைமைச் செயலகத்தில் இத்தகைய சந்திப்பே இல்லை. மதத் தலைவர்களை அழைத்துப் பேசிய அரசு, வணிகர் சங்க தலைவர்களையோ, தொழிலாளர், மாற்றுத் திறனாளிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளையோ அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களைக் கேட்டு முடிவுகள் எடுக்கவில்லை.

டில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களை 100 விழுக்காடு கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் பகுதிகளையும் தனிமைப்படுத்தி, அனைவரையும் பரிசோதித்ததனால் அவர்களில் யாருக்கு நோய்த் தொற்று என்பது தெரியவந்தது. அவர்களை முழுமையாக சோதித்ததுபோல், தமிழ்நாட்டில் வேறு எங்கெல்லாம் எப்படியெல்லாம் யாருக்கெல்லாம் பரவியுள்ளது என்பது பரிசோதித்தால்தானே தெரியவரும்? அப்படி ஒரு பரந்து பட்ட அளவில் பரிசோதனை நடத்தப்படாமல், இவ்வளவுதான் கரோனா எண்ணிக்கை என்று சொல்வது அபத்தம். அப்படி பரந்த அளவில் பரிசோதனை செய்ய வேண்டுமெனில், பரிசோதனை கருவி அவசியம். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தருவதாகச் சொன்ன அல்லது தந்துவிட்டதாகவே எச்.ராஜா சொன்ன அந்த பரிசோதனை கிட்கள் எங்கே? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய கருவிகள் வேறு இடத்துக்கு திருப்பி விடப்பட்டன என்றால் அது ஏன்? மத்திய அரசை நோக்கி இது குறித்து கேள்வி எழுப்பாமல் மாநில அரசு கள்ள மெளனம் காப்பது ஏன்? 

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி வேண்டுமென்று முதல்வர் கடிதம் எழுதி பல நாட்கள் ஆகியும் மோடி அரசு உரிய நிதியை வழங்கவில்லை. கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதியை கொடுத்து, தமிழ்நாட்டுக்கு சோளப்பொரி போட்டு வஞ்சித்த பின்பும், அதை கண்டிக்கவோ; எதிர்த்து குரல் எழுப்பவோ; குறைந்தபட்சம், ஏன் இப்படி என்று கேள்வி எழுப்பாவோகூட இந்த அரசால் முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கைவைத்துள்ளது மத்திய அரசு. இதனால், தமிழ்நாட்டைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலம் நம் மாநிலத்திற்கு செய்யப்படவிருந்த மேம்பாட்டுப் பணிகள் தடைபடும். இதைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை எடப்பாடி அரசு. அதிமுக என்னும் கட்சியும் இதை கண்டிக்கவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடைசிவரை எதிர்த்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொண்டது இந்த அரசு. ஜி.எஸ்.டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் அதற்கு ஒப்புக்கொண்டதாக காரணம் சொன்னார் ஓ.பி.எஸ். ஆனால், அதே ஓ.பி.எஸ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது, ஜி.எஸ்.டி இழப்புத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்று வருந்தினார். ஆக, மத்திய அரசால் ஏமாற்றப்பட்டு, ஜி.எஸ்.டி தொகையும் வழங்கப்படாமல் சந்தியில் நிறுத்தப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு. ஜி.எஸ்.டி இழப்புத் தொகையை தராமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கேள்வி கேட்க துணிவில்லாமல், எதிர்க்கட்சிகளிடம் கோபத்தைக் காட்டுகிறது எடப்பாடி அரசு.

பிற மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை வெளியிட்ட பிறகும், தமிழ்நாடு அரசு மத்திய அரசு அறிவிக்கட்டும் என காலம் கடத்தியது. ''இவ்வளவு எஜமான விசுவாசமா?'' என பலரும் கேள்விகளால் துளைத்த பிறகு, கடைசி நேரத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்புச் செய்யப்பட்டது. ''இது, ஒரு மாநிலப்  பிரசச்னை அல்ல; ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை. எனவே, பிரதமர் அறிவிப்பார்!'' என்று சொன்ன தமிழ்நாடு அரசு, பின்பு தான் சொன்ன கருத்தை தானே மாற்றிக் கொண்டு அறிவிப்பு வெளியிட்டது. எல்லாவற்றிலும் ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

''மருத்துவ உபகரணங்களை மாநில அரசு நேரடியாக வாங்கக் கூடாது. மத்திய அரசிடம் இருந்து தான் வாங்க வேண்டும்; மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு நிதியளித்தால், அது கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ளப்படாது!'' என்றெல்லாம் மத்திய அரசு சொல்கிறது. 

இப்படி மத்திய அரசு தொடர்ந்து மாநில அதிகாரங்களை பறித்துக் கொண்டிருப்பதை பற்றி மூச்சு விடுவதில்லை தமிழ்நாடு அரசு. நெருக்கடி நிலையின்போது, மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்குப் போனதுபோல், இப்போது கரோனா பேரிடர் காலத்தில் பல முடிவுகளை மத்திய அரசு எடுக்கிறது. மாநில சுயாட்சியின் பிறப்பிடமான தமிழ்நாடோ அமைதியாய் இருக்கிறது.

 

 Corona virus issue - Tamil Nadu  Government inco-ordination



''கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட எவ்வித அடையாளங்களையும் வெளியிடக்கூடாது'' என்னும் மருத்துவ நெறியை மதித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் அன்றாடம் ஊடகங்களிடம் வெளிப்பட்டு வந்தார். அப்படியிருக்க, திடீரென அவர் அமைதியானது ஏன்? சுகாதாரத் துறை செயலாளர் ஊடகங்களில் பேசும் போது, முதலில் டெல்லி மாநாடு என்று பிரித்துச் சொன்னது ஏன்? பின்பு அதே செயலாளர் டெல்லி மாநாடு என்ற பதத்தை தவிர்த்து, ஒரே தொற்று என்று சொன்னது ஏன்? அந்த ஒரே தொற்று என்ற வார்த்தையையும் தலைமைச் செயலாளர் தவிர்த்தது ஏன்? ஒரு அறிவிப்பில் கூட ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ள நிலையில், இனியேனும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும் அரசு.

 

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.