Skip to main content

அரியலூர் மாவட்டத்தை கைகழுவுகிறதா எடப்பாடி அரசாங்கம்? அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றச்சாட்டு

Published on 06/05/2020 | Edited on 07/05/2020
S. S. Sivasankar




கை கழுவுங்கள், கை கழுவுங்கள் என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை என கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிக்கப்பட்டோர் பட்டியலில் அரியலூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்த இடத்தை பிடித்து,  இரண்டாவது இடத்தில் இருப்பதை பார்த்து, வெளியூர் நண்பர்கள் தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளார்கள். உள்ளூரில் எல்லோரும் பதட்டத்தோடு உள்ளார்கள். இன்றைய எண்ணிக்கை 188. 


காலையில் தொலைக்காட்சியில் வந்த செய்தி ]தான் பதற்றத்தின் துவக்கம். காலை 168 என்று எண்ணிக்கை வந்தது. பிறகு, ஏதோ அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த செய்தி நிறுத்தப்பட்டது. ஆனால் 188 ஆக, மாலையில் அறிவிப்பு வந்துள்ளது.


20 எண்ணிக்கை அதிகமானது எப்படி என்பதை புரிந்து கொண்டால் தான் தமிழக அரசின் போர்ஜரி வேலை புரியும். 


நேற்று முன்தினம் காலையில் கரோனா தொற்று பரவியவர்கள் பட்டியல் மாவட்ட அளவில் வெளியானது. மாலை அரசு அறிவித்த பட்டியலில் 6 பேர் தான் இருந்தது, உண்மை எண்ணிக்கை மறைக்கப்பட்டது. நேற்று 35 பேர் பதிக்கப்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் பட்டியலில் அரியலூர் இல்லை.


மறைக்கப்பட்ட எண்ணிக்கையை தான் இன்றைய பட்டியலுடன் சேர்த்து வெளியிட்டார்கள். சரி தான், வெளியிட்டு விட்டார்களே இது பெரிய பிரச்சினையா என்று விட்டோம் என்றால், இன்றைய முழு பட்டியல் வரவில்லை என்பது தான் செய்தி. ஏன் இன்றைக்கு மறைக்கிறார்கள் என்றால், உண்மை எண்ணிக்கையை அறிவித்தால், சென்னை எண்ணிக்கையை விட கூடுதலாக, இன்றைய முதல் இடத்தை அரியலூர் பிடித்து விடும் என்பதால் தான்.


இதை விட அதிர்ச்சி செய்திகள் இருக்கின்றன. இன்றைக்கு பாசிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டுள்ள 188 பேர் எங்கே இருக்கிறார்கள் என்றால், எல்லோரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். 


அரசியல் செய்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பாணியில் சிலர் சொல்லலாம்.


அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமம் சுண்டக்குடி. வெளியூரில் வேலை பார்க்கும் மூன்று பேர் ஊர் திரும்பிய உடன் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இன்று மதியம் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். மாலை அவர்கள் பாசிட்டிவ் என பட்டியலில் அறிவிக்கப்பட்டு விட்டது. செய்தி அறிந்த கிராம நிர்வாக அலுவலர், அவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கே திரும்ப அனுப்பி விட்டார்கள். "வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்", என்று அறிவுரை சொல்லி அனுப்பி விட்டார்களாம்.


இந்த செய்தி வந்ததில் இருந்து, குழுமுர், நக்கம்பாடி, இடையக்குறிச்சி என பல கிராமங்களில் இருந்து தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  இரண்டு பேரும் ஊருக்கு வந்துட்டாங்க. நாலு பேர் வந்துட்டாங்க என செய்திகள். அரியலூர் மாவட்டமே பீதியில் மூழ்கி உள்ளது.


மதியமே இதற்கு முன்னோட்ட செய்திகள் வந்தன. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள், சொந்த ஊருக்கு போகாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றார்கள். நானே 100 பேரை காவல்துறையிடம் ஒப்படைத்தேன். வந்தவர்களை பல்வேறு பள்ளிகளில், கல்லூரிகளில் தங்க வைத்திருந்தார்கள். அவர்களை மதியம் ஊருக்கு கிளம்ப சொல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் " டெஸ்ட்" எடுக்கவில்லை. 


தொழிலாளர்கள், "ஊருக்கு போக மாட்டோம். டெஸ்ட் எடுங்கள்" என்று மறுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை காவல்துறை உதவியுடன் மிரட்டி ஊருக்கு அனுப்பி விட்டார்கள். 500க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு போய் விட்டார்கள். பரிசோதித்தால் அதில் எத்தனை பேருக்கு பாசிட்டிவ் வரும் எனத் தெரியவில்லை. இது குறித்து இன்று மதியமே தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தேன். இப்போது, பாசிட்டிவ் ஆனவர்களையே வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். 


ஏன் இவர்களை அனுப்பினார்கள் என்று விசாரிக்கப் போனால் தான் சுகாதாரத்துறை அமைச்சர் 'போதிதர்மர்' விஜயபாஸ்கர் கதை வெளியில் வருகிறது. "எல்லா இடங்களிலும் தேவையான மருத்துவர்கள் இருக்கிறார்கள், தேவையான வசதிகள் இருக்கின்றன", என மைக்கை கண்டாலே சிரித்துக் கொண்டிருந்தார் ப்ரெண்ட்லியாக. உண்மையோ வேறு.

 

ccc


அரியலூர் அரசு மருத்துவமனையில் மொத்தம் 33 மருத்துவர்கள். அதில் மூவர் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள். மகப்பேறு மருத்துவர், மயக்கவியல் நிபுணர், குழந்தைகள் நல மருத்துவர் என 15 பேர் சீமான்க் சென்டரில் பணியாற்றுகிறார்கள். வயதானவர், உடல் நலம் சரி இல்லாதவர்கள் போக  மீதி11 மருத்துவர்கள் தான் கொரோனா வார்டையும் பார்க்க வேண்டும், வழக்கம் போல் உள்நோயாளிகள், வெளிநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். 


ஏற்கனவே கரோனா வார்டில் 100 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 45 பேர் பாசிட்டிவ். போதிய மருத்துவர்கள் இல்லாமல் அரியலூர் அரசு மருத்துவமனை திண்டாடுகிறது.


இதை விட அதிர்ச்சியான செய்திகள் உண்டு. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்கள். பிரசவம் முடிந்து தான் அந்தப் பெண்ணுக்கு 'ரிசல்ட்' வந்திருக்கிறது, 'பாசிட்டிவ்'. அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இதைவிடக் கொடுமை இன்னும் இருக்கிறது.


அரியலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவருக்கு 'பாசிட்டிவ்' என இரண்டு நாட்களுக்கு முன் உறுதியாகி விட்டது. அவருக்கு இன்று வரை ட்யூட்டி போடப்பட்டு, நோயாளிகளை சந்திக்க கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார். அவர் மூலம் எவ்வளவு பேருக்கு தொற்றியதோ தெரியவில்லை.
 

nakkheeran app



இது குறித்து புகார் அளிக்கலாம் என இணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என்றால் அதுவும் சிக்கல். அரியலூருக்கான இணை இயக்குனர் பணியிடம், காலி. பெரம்பலூர் இணை இயக்குநர் தான் பொறுப்பு. அரியலூருக்கு அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு ஒரு டீனை அறிவித்தார்கள். அவருக்கு உடல் நலம் சரி இல்லை.  கரோனா கேஸ் எண்ணிக்கை அதிகமான உடன், பெரம்பலூர் இணை இயக்குநர் அந்தப் பொறுப்பை டீன் இடம் தள்ளி விட்டுவிட்டார். உடல் நலம் சரி இல்லாத டீன் பொறுப்பேற்று இரண்டு நாட்கள் தான் ஆவதால், நிர்வகிக்க தடுமாறுகிறார்.

 

aa



மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளிக்கலாம் என்றால், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, பாதுகாப்பு கருதி அவர் யாரையும் சந்திப்பதில்லை. அரசியல்வாதிகள் மட்டுமல்ல, பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள் கூட மாவட்ட ஆட்சியரை சந்தித்து இந்த உண்மை நிலவரத்தை சொல்ல வாய்ப்பில்லை.

இது இல்லாமல் பரிசோதனை மேற்கொள்வதிலும் பிரச்சனைகள். நேற்று அரியலூருக்கு அனுமதிக்கப்பட்ட பரிசோதனை நிலையம் செயல்பட துவங்கியது. 35 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருகின்றன. 35ம் 'பாசிட்டிவ்'. மிரண்டு போன நிர்வாகம், மீண்டும் அவற்றை சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள் பணி நெருக்கடியால் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி என ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். அந்த ரத்த மாதிரிகளின் எண்ணிக்கை 600.


எப்படி பார்த்தாலும், அரியலூரில் இன்றைய தேதிக்கு 1,000க்கும் மேற்பட்டோர் கரோனா பாசிட்டிவ் ஆக இருப்பார்கள். இதில் 45 பேர் தான்  அரியலூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மீதி பேர் வீட்டில் உள்ளார்கள். இவர்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு கரோனா பரவி இருக்கும், அவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதற்குள் எவ்வளவு பேருக்கு அவர்கள் மூலம் தொற்று பரவும் என்பதை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது. நிச்சயம் அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற பெரும்பாலோர் பாதிக்கப்படும் சூழல் தான் வரும். அத்தனை பேருக்கும் கடுமையாகாது என்றாலும், மிக கணிசமான எண்ணிக்கையில் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


இன்னொரு புறம், பாசிட்டிவ் ஆகி வீட்டில் இருப்போரை காணும் ஊர் மக்கள் அவர்களை அணுகும் விதத்தில் வரும் சிக்கலால் பல பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பது சமூக சிக்கல். கோயம்பேடு தொழிலாளர்கள் மீது பழியை சுமத்தி விட்டு, பாசிட்டிவ் நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் தமிழக அரசு தான் உண்மைக் குற்றவாளியாக திகழ்கிறது. இன்னொரு புறம், அரியலூர் அரசு மருத்துவமனை 'ஹாட் ஸ்பாட்' ஆக மாறி விட்டது. இதற்கும் அரசு தான் பொறுப்பு.


கை கழுவுங்கள், கை கழுவுங்கள் என்று விளம்பரம் செய்த எடப்பாடி அரசு, அரியலூர் மாவட்ட மக்களை கைகழுவி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.
 

இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் உண்மையை ஒப்புக் கொண்டு பொறுப்பை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் நாங்களே தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கும் சூழல் வரும் என்பதை அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.