Skip to main content

கரோனா தாக்கம்! மக்கள் உணவகங்களாக உயர்ந்த அம்மா உணவகங்கள்! 

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

 

 

கரோனா பரவுதலை தடுப்பதற்கும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் அடங்கிய 9 குழுக்களை அமைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. குழுவில் உள்ள உயரதிகாரிகள் தங்களுக்குப் பணிக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துவதால் கோட்டையிலுள்ள முக்கிய அதிகாரிகளின் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. 
      

உயரதிகாரிகளின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, ஏழைகள், வீடற்றவர்கள், தொழிலாளர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும்படி உளவுத்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தினசரி சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காமல் வேலையையிழந்த ஏழைகள் மற்றும் வீடற்றவர்கள் தவிப்பதாக சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை முதலமைச்சர் எடப்பாடிக்கு அனுப்பி வைத்துள்ளத்து உளவுத்துறை. 
             
 

Amma Unavagam

ரிப்போர்ட்டை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் 1 மணி நேரம் விவாதித்திருக்கிறார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களின் நிலை பற்றி ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையில், ’’ பெருநகர சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் இயங்குகிறது. அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மா உணவகங்கள் உண்டு. தவிர, மாநகராட்சிகளில் மக்களின் பயன்பாட்டிற்கேற்ப அம்மா உணவகங்கள் கணிசமான எண்ணிக்கையில் இயங்கி வருகிறது. கொரோனா பிரச்சனைகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கும், வீடற்ற ஏழைகளுக்கும் உணவுகளை தடையின்றி வழங்குவதற்கேற்ப 24 மணிநேரமும் அம்மா உணவகங்களை இயக்க வைக்கலாம் என வேலுமணி சொல்லியிருக்கிறார். அந்த யோசானையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, உணவின்றி ஏழைகள் தவிக்கிறார்கள் என்கிற செய்தி பதிவாகக்கூடாது ; பட்டினிச் சாவுகள் நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மா உணவகங்களை ஓய்வின்றி இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என கேட்டுக்கொண்டார். 


             

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளிடம் அவசர ஆலோசனை நடத்திய வேலுமணி, அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். அதற்கேற்ப, பணியாளர்களை 3 ஷிப்டாக மாற்றிக்கொள்ளுங்கள். எந்த சூழலிலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்கக்கூடாது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்கள் எப்போதும் அம்மா உணவகங்களில் ஸ்டாக் இருக்க வேண்டும். சாப்பிட வருபவர்களுக்கிடையே 1 மீட்டர் இடைவெளி இருப்பதை கவனமாக பார்க்க வேண்டும். அம்மா உணவகங்களில் பணிபுரிவோரும், சாப்பிட வருபவர்களும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலுமணி ‘’ என்கின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். 
               

வேலுமணியின் உத்தரவுக்கேற்ப அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 2 நாட்களாக அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், நடமாடும் அம்மா உணவகங்கள் மூலமாகவும் உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு காப்பகங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் நடமாடும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்குவது தடையின்றி நடந்து வருகிறது. 

 

velumani


              சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பிரச்சனைகள் இல்லாத முந்தைய காலத்தில் ஒரு அம்மா உணவகத்தில் தினசரி 800 பேர் சாப்பிடுவார்கள். அந்த வகையில் சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு  3 லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கும் வீடடங்கும் அமலிலிருப்பதால் அம்மா உணவகங்களில் சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 28-ந்தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் ஒரு நாளை 14 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர். 
            

 தமிழகத்தில் கடந்த 2013-ல் ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்மா உணவகம் திட்டம் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கடந்த 7 வருடங்களாக ஏழைகளின் ஆதரவுடன் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் காலை உணவாக இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் ஆகியவை தலா 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.  இரவு நேரத்தில் பருப்பு கடைசலுடன் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. சென்னையில் ஒரு வார்டு 2 என்கிற அடிப்படையில் அரைகிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் செயல்படுவதாக கூறுகின்றனர் மாநகராட்சி பணியாளர்கள். உள்ளாட்சித் துறையின் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது.
           
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி மக்கள் வசிக்கும் இடங்களில் மக்களுக்கான உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், சாலைகளை சுத்தப்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் உள்ளாட்சித் துறையின் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே ஷிப்ட் கணக்கில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள். 
           

  அனைத்துப் பகுதிகளிலும் அம்மா உணவகங்களை நிர்வகிக்கும் பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள். தூய்மையாகவும், தரத்தில் சமரசமின்றியும் தயாரிக்கப்படும் உணவு வகைகள், சாப்பிட வருபவர்களின் மனதை நிறைவு செய்யும் வகையில் உள்ளன. வீட்டில் சமைப்பது போன்று அம்மா உணவகங்களில் சமைக்கப்படும் உணவு வகைகளையே அங்கு பணிபுரிபவர்களும் சாப்பிடுகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவும் காலம் என்பதால், அம்மா உணவகங்களில் பணியாற்றும் எல்லோரும் முகக் கவசம், கையுறை அணிதல், ஆரோக்கியமான சமையல் அறையை வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுகிறது அம்மா உணவகங்கள். 

 

eps


            

 கடந்த 2016 – ல் தமிழகத்தைத் தாக்கிய  வார்தா புயலின் போது,  அம்மா உணவகம் மட்டுமே லட்சக்கணக்கானோருக்கு உணவளித்தது. அதற்கு பிறகு தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பசியால் தவிப்போர் அனைவருக்கும் அட்சயப் பாத்திரமாக இருக்கின்றன அம்மா உணவகங்கள். ஏழைகள் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கத்தினரும் அம்ம உணவகத்தை நாடுவது அதிகரித்து வருகிறது. 
            உள்ளாட்சித்துறை பணியாளர்கள், வீதிகளை மட்டும் சுத்தமாக்கவில்லை ; அம்மா உணவகங்கள் மூலம்  வீட்டில் இருப்பவர்களின் பசியையும் போக்குகிறார்கள். இதுவரை ஏழைகளின் உணவகங்களாக இருந்த அம்மா உணவகங்கள் , தற்போது மக்களின் உணவகங்களாக உயர்ந்துள்ளன !

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.