வைபவமா ஊரடங்கு?

- ஆரூர் தமிழ்நாடன்

சந்தைகளில் கூடிடவா

Advertisment

ஊரடங்கு?

சத்தியமாய் இவரெல்லாம்

திருந்தமாட்டார்!

Advertisment

மந்தைகளாய் திரிந்திடவா

ஊரடங்கு?

மதியற்றோர் மரணத்தை

வரவேற்கின்றார்!

*

நொந்தபடி நோய்ப்பட்டோர்

உயிர்பிழைக்க

நொடிதோறும் போராடும்

நிலையில்; இங்கே

வந்ததையும் போனதையும்

வாங்கிச் சேர்க்கும்

வைபவமாய் ஊரடங்கை

மாற்று கின்றார்.

*

5555

சிந்திக்கும் அறிவில்லை;

கறிகாய் வாங்கச்

சிறுபடையாய்க் கடைகடையாய்

ஏறுகின்றார்!

வந்துள்ள ஆபத்தை

உணர்ந்திடாமல்

வக்கணையாய் அசைவத்தைத்

தேடுகின்றார்!

*

எந்தவொரு சிந்தனையும்

இல்லாதாராய்

எங்கெங்கும் திரிகின்றார்

வாகனத்தில்!

இந்தவொரு நெருக்கடியில்

ஒன்றுகூடி

இன்னும்சிலர் வழிபாட்டில்

இறங்குகின்றார்!

http://onelink.to/nknapp

*

விதவிதமாய் உண்பதற்கா

ஊரடங்கு?

விபரீதம் நிலைமையினை

உணர்வார் இல்லை!

பதமாகச் சுவையாகத்

தின்பதொன்றே

பயன்மிக்க வாழ்வென்று

கருது கின்றார்!

*

இதமின்றித் தெருவினிலே

கூடிக் கூடி

இலக்கின்றி அரட்டையிலே

மூழ்குகின்றார்.

வதம்செய்யும் நோய்த்தொற்று

அக்கம் பக்கம்

வரும்வரையில் இவர்புத்தி

தெளிவதில்லை!

*

நோய்த்தொற்றின் எண்ணிக்கை

உயரும் போதும்

நுண்ணறிவு இல்லாமல்

இருக்கலாமா?

வாய்க்கட்டும் மனக்கட்டும்

சிறிதும் இன்றி

வாழ்நாளை இருள்நோக்கி

அனுப்பலாமா?

*

வாய்பிளந்து வருகின்ற

ஆபத் துக்கு

வாய்ப்புதனைக் கொடுக்காத

தெளிவு வேண்டும்!

நோய்த்தொற்று பரவாமல்

இருப்பதற்கு

நொடிதோறும் வீடடங்கி

இருக்க வேண்டும்!

*