Skip to main content

கரோனா - கைமீறி போய் பதறி உபயோகமில்லை!!! உடனடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு சிவசங்கர் வலியுறுத்தல்...

Published on 24/07/2020 | Edited on 24/07/2020
ss sivasankar dmk

 

அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உண்மை நிலையை அறிவித்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கைமீறி போய் பதறி உபயோகமில்லை. எனவே, உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அரசை, மாவட்ட தி.மு.க.வின் சார்பாக வலியுறுத்துகிறேன் என மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேட்டில் கரோனா பாதிப்பு அதிகமாகி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் ஊர் திரும்பியபோது, கோவிட் டெஸ்ட் எடுத்துக்கொள்ள தாங்களாக முன் வந்தார்கள். ஆனால் மாவட்ட மருத்துவத்துறை அவர்களை டெஸ்ட் எடுக்காமல் வீட்டுக்கு அனுப்பி விட்டது, அப்போதே எச்சரித்தோம். ஆனால் சிமெண்ட் ஆலைகள் இயங்குவதற்காக, அரியலூரை பச்சை மண்டலமாக வைத்துக்கொள்ள அரசு வழிகாட்டுதல்படி செயல்பட்டார்கள். அதனால், அரியலூர் மாவட்டத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

 

கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,000 பேர். ஆனால் அவர்களில் அரசு டெஸ்ட் எடுத்தவர்கள் எண்ணிக்கை 500 பேர் தான். இதையும் அரசின் செய்தி குறிப்பாக அவர்களே வெளியிட்டார்கள். இந்த 500 பேரில் 360 பேர் பாசிட்டிவ், அதாவது கரோனா தொற்றியவர்கள். பரிசோதிக்கப்பட்டவர்களில் 70% பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பரிசோதிக்காமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் எவ்வளவு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாமே கணக்கிட்டுக் கொள்ள வேண்டியது தான்.

 

சென்னையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் அங்கிருந்து 10 லட்சம் பேர் வெளியேறினார்கள். அப்போது அய்.டி. நிறுவனங்களில், தொழிற்சாலைகளில், சிறு வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சிறு தொழில் புரிவோர் தத்தம் மாவட்டத்திற்கு திரும்பினார்கள். அதில் நம் மாவட்டத்திற்கும் ஆயிரக்கணக்கானோர் திரும்பினார்கள். அப்போதும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை.

 

அதன் விளைவை இப்போது அரியலூர் மாவட்டம் அனுபவிக்கிறது. எங்கு பரிசோதனை செய்தாலும் கொத்து, கொத்தாக கரோனா எண்ணிக்கை வெளிப்படுகிறது. அரியலூர் நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள் 55 பேர் கரோனாவால் பாதித்துள்ளார்கள். அந்த கடையில் பணியாற்றிய ஒருவர் முதலில் உடல் நலம் குன்றி பக்கத்து மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்காமல், இறந்தவுடன் அவரது உடலை மருத்துவமனை நிர்வாகத்தினரே கொண்டு வந்து புதைத்துவிட்டனர். 

 

அடுத்த வாரம் அதே கடைத்தெருவில் பூக்கடை வைத்திருந்தவர் ஜுரத்தால் பாதிக்கப்பட்டார். அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையில் கரோனா உறுதியானது, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதற்கு பிறகுதான் அந்த துணிக்கடையில் பணியாற்றுபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

 

முதலில் ஒருவருக்கு கரோனா என்று உறுதியானது. பிறகு 20 பேருக்கு கரோனா தொற்று என்று அறிவித்தார்கள். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பட்டியல் வெளியிடப்பட்டு எண்ணிக்கை 55 என்று வந்துள்ளது. ஒரே நாளில் எடுக்கப்பட்டு, ஒரே நேரம் சோதிக்கப்பட்ட சோதனையை மொத்தமாக அறிவிக்காமல் விட்டு, விட்டு அறிவிப்பது என்ன தந்திரம் எனப் புரியவில்லை. அதை முறையாக அறிவித்தால், அந்த பத்து நாட்களில் கடைக்கு வந்து போன வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க உதவியாக இருக்கும். ஆனால் அது குறித்த கவலை எல்லாம் அரசுக்கு இல்லை. 

 

அரியலூர் நகரில்தான் இந்த பாதிப்பு என்று இல்லை. ஜெயங்கொண்டம் நகரிலும் திட்டு, திட்டாக பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு வணிகர் சங்கம் கூடி, நகரில் உள்ள வணிக நிறுவனங்களின் வேலை நேரத்தை குறைத்து விட்டார்கள். தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வது தான் வழி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.

 

"பாதிப்பு அதிகமாவதற்கு காரணம், மக்கள் தான்", என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல, அதிகாரிகளும் சொன்னார்கள். மற்றப் பகுதிகளில் வந்த பாதிப்பு கடைசியாக மாவட்ட நிர்வாகத்தையும் தாக்கி விட்டது. 

 

முதலமைச்சர் அலுவலகம் போலவே அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகமும் மிகுந்த பாதுகாப்போடு செயல்பட்டது. யாரும் அநாவசியமாக நடமாடாமல் பார்த்து கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் யாரையும் சந்திப்பது இல்லை.  பத்து நாட்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஒருவருக்கு தொற்று உறுதியானது. மூன்று நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. பிறகு, மீண்டும் செயல்பட துவங்கியது.

 

ariyalur government hospital

 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் இருவர். அவர்கள் தான் ஆட்சியரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்கள், இருவருக்குமே தொற்று என தகவல் வந்தது. அதை உறுதிப்படுத்தவே இரண்டு நாட்கள் ஆனது. பிறகு கோட்டாட்சியருக்கு தொற்று என்றார்கள். அடுத்து வட்டாட்சியருக்கு. அடுத்து இன்னொரு துறையின் தலைமை அலுவலருக்கு எனவும் தகவல்.

 

பாதுகாப்பாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இத்தனை அதிகாரிகளுக்கு கரோனா தொற்றியுள்ளது என்றால், அரியலூர் மாவட்டத்தில் "சமூகப் பரவல்" நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள். ஆனால் அரசு இதனை எல்லாம் மூடி மறைப்பதனால் மக்களிடத்தில் இது குறித்த எச்சரிக்கை ஏற்பட வாய்ப்பில்லாமல் போகிறது.

 

அரியலூர் நகரத்தில் வணிகம் செய்பவர்கள் இதை எல்லாம் கண்டு பயந்து, போன வாரத்தில் கடைகளை சிறிது நாட்களுக்கு மூடுவது என திட்டமிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். அதற்குள்ளாக, ஒரு ஊடகத்தில் 'மாவட்டம் முழுதும் கடையடைப்பு' என செய்தி வெளியாகி விட்டது. உடனே தலைமை செயலகத்தில் இருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அதை தடுத்து நிறுத்த உத்தரவு வந்தது, அரசு அறிவிக்காமல் அப்படி நடந்து விடக்கூடாது என. அறிவிப்பு ரத்தானது, ஒரு சில கடைகளை மாத்திரம் உரிமையாளர்கள் தாங்களாகவே மூடி விட்டார்கள், பாதுகாப்பு கருதி. ஆனால் மீதிக் கடைகள் திறந்துள்ளன. உரிமையாளர்களும், பணியாளர்களும் பயத்துடனேயே பணியாற்றுகிறார்கள். வியாபாரிகள் சங்கத்தினரை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசி, அவர்கள் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

corona

 

கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து நான்கு மரணங்கள் அரியலூர் நகரில் ஏற்பட்டுள்ளது. இது இன்னும் பீதியை அதிகப்படுத்தியுள்ளது. 

 

கிராமபுறங்களை பொறுத்தவரை தினம் இறப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் யாரும் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்பதால் மாரடைப்பு, முதுமை, சிறுநீரகக் கோளாறு என்ற கணக்கில் செல்கிறது. கரோனாவின் உண்மை பாதிப்பை அரசு வெளிப்படுத்தாததால், மக்கள் இயல்பாக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூழ்நிலை. மற்ற நிகழ்ச்சிகளை விட இறப்பில் பங்கேற்று ஆறுதல் சொல்வது கிராமத்து மக்களின் பண்பாடு. ஆனால் அதுவே இன்றைக்கு ஆபத்தாக போய் விடுமோ என்ற நிலை உள்ளது. 

 

சென்னையில் கடந்த மாதங்களில் கணக்கில் காட்டாமல் மறைத்த 444 மரணங்களை இப்போது அறிவித்துள்ளார்கள். அந்த நிகழ்வுகளில் பங்கேற்றோர், அவரது இல்லத்தவர்கள் என யாருக்கும் எதுவும் தெரியாமலே பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் உண்மை நிலையை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

 

அதனால், அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்து விட்டது என்ற உண்மையை அறிவித்து, மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கைமீறி போய் பதறி உபயோகமில்லை. எனவே,  உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அரசை மாவட்ட தி.மு.கவின் சார்பாக வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.