Skip to main content

திக் திக் கரோனா! -இனி நமக்கு நாமேதான்!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

corona chennai

 

சிவப்பு மண்டலங்களில் ஒன்றான சென்னையில் ஜூலை 6ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெருமளவு தளர்வால், அனைத்து சாலைகளும் வாகன நெரிசலில் திணற ஆரம்பித்துவிட்டன. சென்னையில் கரோனா குறைந்துவிட்டது என்று அவிழ்த்துவிடப்படும் பொய்களை மக்கள் நம்பத் தொடங்கியதால், அவர்களும் சகஜமாக எந்தக் கவலையும் இல்லாமல் குடும்பம் குடும்பமாக நடமாடத் தொடங்கிவிட்டார்கள். கடை கண்ணிகளிலும் கூட்டம் மொய்க்கிறது. பார்க் பீச் என்றும் பலரும் போகத் தொடங்கிவிட்டார்கள். முகக்கவசமோ, சமூக இடைவெளியோ கூட பெரிதாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. காரணம் சென்னையில் கரோனா குறைந்துவிட்டது என்ற  நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார்கள்.

 

ஆனால் உண்மை நிலவரம் இதற்கு நேர்மாறாகத்தான் இருக்கிறது. ’மக்களின் வாழ்வாதாரம் கருதியே பெரும் தளர்வு ஏற்படுத்தபடுகிறது. எனினும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும்’ என்று முதல்வர் அறிவித்ததன் பின்னணியில், கரோனா பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அதே நேரம் நீங்கள் வீட்டிலேயே இருந்துகொண்டு அரசிடம் நிவாரண உதவிகளைக் கேட்காதீர்கள். ஊரடங்கைத் தளர்த்துகிறோம். நீங்கள் உங்கள் பிழைப்பைப் பார்த்துக்கொண்டு, உங்களைக் காப்பாற்றிக்கொளுங்கள் என்கிற கருத்துதான் தொக்கி நிற்கிறது.  

 

chennai

 

ஆனால், மக்களோ முதல்வரின் அறிவிப்பில் இருந்து, கரோனா குறைகிறது என்ற ஆறுதலுக்காகச் சொல்லப்பட்ட ஒன்றை மட்டுமே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, தங்கள் கட்டுக்களை எல்லாம் அறுத்துக்கொண்டு சுதந்திரமாக இயங்க ஆரம்பித்துவிட்டார்கள். கவனமாக இருக்கவேண்டும் என்று அவர் சொன்னதில் எவரும் கவனம் வைக்கவில்லை.

 

கரோனா குறைகிறது என்று முதல்வரே அறிவித்துவிட்டதால், அவரது வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது சுகாதாரத்துறை. அன்றாடத் தொற்றின் எண்ணிக்கை 1,300-ஐத் தாண்டாதபடி கணக்கைக் கவனமாக அது பராமரிக்கிறது. கரோனா கட்டுப்படவில்லை என்று நாம் கூடச் சொல்லவில்லை. அன்றாடம் வருகிற இறப்புக்கணக்கே அந்தப் பயங்கரத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறது.

 

தவறான செய்திகளைப் பரப்பியும், தவறான நம்பிக்கையைப் பரப்பியும் ஊரடங்கைத் தளர்த்திகொண்டேஇருப்பது,  நிலைமையை மோசமாக்கி வருகிறது. இவை,  சென்னையை  மறுபடியும் ஆபத்தான படுகுழியில் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

 

படிப்படியாக சென்னையில் கரோனா குறைவதாக மேலாண்மைத் திறனோடு கணக்கைக் காட்டினாலும், அதுவும் கூட நிலையான எண்ணிக்கையாக இல்லை. உதாரணமாக சென்னையில் 11-ஆம் தேதி  1,205 பேரும், 12-ஆம் தேதி 1,221 பேரும், 13-ஆம் தேதி 1,168 பேரும் தொற்றுப் பாதிப்புக்கு ஆளானதாக மேலாண்மைத் திறனோடு கணக்கைச் சொல்லிவந்த நிலையில், அவர்களின் புள்ளிவிபரமே, 14- ஆம் தேதி  1,291 பேரும்,  15-ஆம் தேதி அது மேலும் அதிகமாகி 1,311 பேரும் பாதிக்கப்பட்டதாக ஏறு வரிசையில் காட்டப்படுகிறது.

 

http://onelink.to/nknapp

 

எனவே, கரோனா குறைவதாகச் சொல்லும் அரசின் அறிவிப்பிலும் புள்ளிவிபரக் கணக்கிலும்  மயங்காமல், கரோனாவின் தீவிர நிலையை உணர்ந்து, பொதுமக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நம்மைப் பாதுகாக்க யாருமில்லை என்பதைப் புரிந்துகொண்டு உயிரைப் பாதுகாத்துக்கொள்வதில் அதி தீவிர கவனம் செலுத்தவேண்டும். கரோனா தடுப்புக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவானதாகச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் கரோனா பரவலின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிவிட்டது. இறப்பும் 2,200-ஐ நெருங்கிவிட்டது. அவர்களுக்கு நோய்த் தொற்று என்பது அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி. நமக்கோ, அது உயிர்ப்போராட்டம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.