Skip to main content

கரோனா நோயாளிகளைக் கவர்ந்த தாசில்தார்... கரோனா சிறப்பு அதிகாரி பாராட்டு...

Published on 30/06/2020 | Edited on 01/07/2020

 

rajendran

 

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாக பரவியதால், சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரனையும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன் ஐ.ஏ.எஸ். மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ் ஆகியோரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தது தமிழக அரசு. நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என ஆய்வு செய்த இந்த அதிகாரிகள், கரோனா பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், சுகாதாரத் துறையினருக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கி வருகின்றனர். 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள ஐசோலேசன் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வார்டை ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி உதயசந்திரன். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உணவு, சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து விசாரித்துள்ளார். நன்றாக கவனிக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அங்குள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடமும் விசாரித்தபோதும் தாசில்தார் ராஜேந்திரன் சரியாக வழிநடுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். அப்போது தாசில்தார் ராஜேந்திரன் எங்கே எனக் கேட்டுள்ளார் சிறப்பு அதிகாரி உதயசந்திரன். அவர் அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 

பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், தாசில்தார் ராஜேந்திரனை பாராட்டிய சிறப்பு அதிகாரி உதயசந்திரன், ஒர்க்லோடு அதிகமாக இருப்பதால் உதவிக்காக இரண்டு டெப்டி தாசில்தார்களை வைத்துக்கொள்ளுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

 

இந்த மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பியவர்களிடம் விசாரித்தபோது, “சத்தான உணவுகள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து தாசில்தார் எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்பார். சிகிச்சையில் ஏதேனும் குறைபாடு இருக்கா, உணவு பிடித்திருக்கிறதா எனக் கேட்பார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டோம். இப்போதும் போன் போட்டு, மருத்துவர்கள் சொன்னதை பாலோப் பண்ணுங்க, மருத்துவ உதவி தேவைப்பட்டால் போன் பண்ணுங்கன்னு சொல்லுவார்'' என்றனர். 

 

rajendran

 

சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது? என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? என தாசில்தார் ராஜேந்திரனிடம் கேட்டோம். 

 

''இந்த மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ளவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டெஸ்ட் செய்கிறார்கள். ரிசல்ட்டில் பாசிட்டிவ் என வந்தால், மருத்துவமனையில் உள்ள ஐசோலேசனில் 3 நாள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 நாள் சிகிச்சை முடிந்த பின்னர் அருகில் உள்ள நர்சிங் ஹாஸ்டலில் உள்ள கரோனா கேர் சென்டரில் 7 நாள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு இடமில்லை என்றால் சேலையூர் சாலையில் உள்ள பாரத் கல்லூரியில் கரோனா கேர் சென்டர் உள்ளது. அங்கே தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த பின்னர் ஹவுஸ் குவாரன்டைனில் 7 நாள் தனி அறையில் இருக்க வேண்டும் என்ற போதிய மருத்துவ அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைப்போம். தொடர்ந்து அவர்களிடம் நாங்கள் விசாரித்துக்கொண்டே இருப்போம். எங்களிடம் சிசிச்சை முடிந்தவுடன் நாங்களே தனி வேன் வைத்து அவரவர் வீட்டுக்கு கொண்டுவிடுவோம். 108 ஆம்புலன்ஸ் வழக்கமான பணிக்குச் சென்றுள்ளதால், தனியார் வேன் ஏற்பாடு செய்திருக்கிறோம். 

 

சிகிச்சை பெறுகிறவர்களுக்கு உணவு தனியார் கேட்டரிங் மூலம் செய்து வருகிறோம். முதலில் புதினா சாதம், பூண்டு சாதம் எனக் கொடுத்தோம், அது பற்றவில்லை என்றார்கள். இதையடுத்து மதியத்திற்கு முட்டை, வாழைப்பழத்துடன் முழு சாப்பாடு. காலை 6 மணிக்கு பால். 11 மணிக்கு டீ மற்றும் பிஸ்கட் அல்லது பிரெட். காலை டிபன் இட்லி, தோசை, சப்பாத்தி என அவர்கள் விருப்பப்பட்டது. மாலை நாலரை மணிக்கு பூண்டு பால் அல்லது மசாலா பால் அதனுடன் வேர்கடலை, காராமணி, பச்சைப் பயிறு போன்ற ஏதேனும் ஒரு பயிறு வகைகள் கொடுக்கப்படுகிறது. இரவு இட்லி, தோசை என சிகிச்சை முடியும் வரை கொடுக்கிறோம். சிகிச்சை முடிந்து செல்பவர்களிடம் இதேபோன்று சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள், முகக் கவசம் அணியுங்கள் என அறிவுறுத்துகிறோம்''. 

 

செங்கல்பட்டு தாலுகாவில் உள்ளவர்கள் தங்களுக்கு கரோனா தொற்று இருக்கிறதா என சந்தேகம் வந்தால் யாரை தொடர்புகொள்ள வேண்டும்? 

 

நேராக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து டெஸ்ட் எடுக்கலாம். அருகில் உள்ள சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தால், அவர்கள் உரிய வழிமுறைகளைச் சொல்வார்கள். அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தால் மட்டுமே ரிசல்ட் வரும்வரை நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் கொடுக்கிறார்கள். தனியார் மருத்துவமனையில் கொடுப்பதில்லை. 

 

செங்கல்பட்டு நகரில் உள்ள நத்தம் நடுத்தெருவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி எனத் தடை செய்யவில்லை, கிருமி நாசினி தெளிக்கவில்லை என்று அப்பகுதியினர் சொல்கிறார்களே என்றதற்கு, அந்தப் பகுதி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி உடனே சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்றார் உறுதியாக. 

 

 

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடிநீர் ட்ரம்மில் மிதந்த எலி; ஹோட்டலில் சாப்பிட சென்றவர்கள் அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
A rat floated in a drinking water drum; Those who went to eat at the hotel were shocked

உணவகங்களில் சுகாதாரத் தூய்மைகளை கடைபிடிக்காததால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பாக அவ்வப்போது புகார்கள் எழுவது வாடிக்கையாகி வருகிறது. சிறு உணவகங்கள் முதல் பெரிய உணவகங்களில் கூட உணவு பொருட்களை அலட்சியமாக கையாளுதல், உணவு பொருட்களின் தரம் மற்றும் கடைகளில் சுகாதாரம் இன்மை குறித்து புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டில் சிறிய உணவகம் ஒன்றில் குடிப்பதற்காக வைக்கப்பட்ட தண்ணீர் பேர்லரில் எலி செத்து மிதந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் 'சாஜ் டீ ஸ்டால்' என்ற சிறிய உணவகம் இயங்கி வருகிறது. இந்த கடைக்கு சிலர் உணவு சாப்பிட சென்ற நிலையில் தண்ணீர் வைக்காததால் பேரலிலிருந்து தண்ணீரை எடுத்து குடிக்கும்படி ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தண்ணீர் நிரப்பி வைத்திருந்த டிரம்மை பார்த்தபோது அதில் எலி ஒன்று செத்து மிதந்தது வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடனடியாக செல்போனில் அதை படம் பிடித்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். 'லட்சுமிபுரம் சாஜ் ஹோட்டலில் எலி செத்து மிதந்த தண்ணீரை நாங்கள் குடித்திருக்கிறோம். ஒரு வாரமாக செத்து கிடந்து இருக்கிறது போல. பசிக்கு நாங்கள் சாப்பிட வந்த இடத்தில் குடிநீர் ட்ரம்மில் எலி கிடந்ததை கூட பார்க்காமல் உள்ளனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். உணவுத்துறை அதிகாரிகள் இதுபோன்ற ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.