Skip to main content

திரும்பவும் விறகு அடுப்புக்கு போகசொல்கிறார் மோடி - குடும்ப தலைவிகள் கண்டனம்

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
gas33



கடந்த செப்டம்பர் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 858.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இது, முந்தைய ஆகஸ்ட் மாத விலையைக் காட்டிலும் 30.50 ரூபாய் அதிகம். இந்த நிலையில் நடப்பு அக்டோபர் மாதத்திற்கு இந்த சிலிண்டர் விலை மேலும் 58 ரூபாய் அதிகரித்து, 916.50 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்துள்ளன. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த புதிய விலை அமலில் இருக்கும்.
 

அதேபோல், டீக்கடைகள், உணவக தயாரிப்புக்கூடங்கள் போன்ற இடங்களில் வணிக பயன்பாட்டுக்காக உள்ள 19.2 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு அக்டோபர் மாதத்தில் 1570 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 87 ரூபாய் அதிகமாகும். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 320 ரூபாய் வரை மானியத்தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுகிறது. காஸ் சிலிண்டர்கள் விலையேற்றத்தால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

geetha

                                                                                      கீதாஇளவரசன்



''பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது சிலிண்டர் விலை சுமார் 350, 400க்கு தான் இருந்தது. மோடி அரசு வந்த பிறகு 2016ல் மார்ச்சில் 511 ரூபாய் வீட்டு உபயோக சிலிண்டர். இதிலே நேரடியாக வங்கிக்கே மானிய தொகை அனுப்புவதாக உறுதியளித்தார். எல்லாம் ஏமாற்று வேலையாப் போச்சிங்க. படிப்படியாக உயர்ந்து இப்போது சிலிண்டர் விலை 916 ரூபாய் 50 காசு. இது மட்டுமா சிலிண்டர் சப்ளை செய்பவர்கள் கூடுதலாக 70 ரூபாய் 80 ரூபாய் என வசூலிக்கிறார்கள். இதனால் இப்போது 1000 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்குகிறோம். இதற்க்கான மானியம் 421 ரூபாய் 79 காசு மத்திய அரசு வங்கியில் என் கணக்குக்கு செலுத்த வேண்டும். ஆனால் இப்போது எல்லாம் முறையாக மானியம் வங்கி கணக்குக்கு வருவதே இல்லை. எப்போதாவது தான் வரும் சிலமாதங்கள் வரவே வராது. நாங்கள் யாரிடம் போய் கேட்பது. இப்படி சிலிண்டரின் ஒட்டு மொத்த விலை எங்கள் கழுத்தை நெரிக்கிறது. மாதம் 200 ரூபாய்க்கு விறகு வாங்கி சமையல் செய்யலாம் போல் தோன்றுகிறது. மாதம் 800 ரூபாய் மிச்சப்படுத்த முடியும். மத்திய அரசு மீண்டும் விறகு அடுப்பெறிக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. ஒரு அரசாங்கம் சொன்ன திட்டத்தை முறையாக செய்யாமல் ஏமாற்றுகிறது. அவசர தேவைக்கும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சீக்கிரம் சமைத்து கொடுக்க உதவியாக உள்ளதால் தான் இதை கட்டிக் கொண்டு அழ வேண்டியுள்ளது'' என்கிறார் கடலூர் மாவட்டம் பட்டூரைச் சேர்ந்த குடும்ப தலைவி கீதாஇளவரசன்.


 

mariyammal

                                                                                         மாரியம்மாள்


ஈரோட்டைச் சேர்நத மாரியம்மாள், "நானூறு ரூபாய்க்கு வாங்குன சிலின்டரை இன்னிக்கு தொள்ளாயிரம் ஆயிரம்னு மூனு மடங்கு ஏத்திப்புட்டாங்க. மானியத்தை எங்க பேங்க் அக்கவுன்ட்டுல போட்டுடுவோம்னு சொல்லி ஏமாத்துறாங்க. உழைச்ச காசுல அரிசி, பருப்பு, சிலின்டர் வாங்கி சோறு தின்கறவனுக்கு தான் இந்த கஷ்டமெல்லாம் தெரியும். மக்கள் பணத்தை கோடி கோடியா கொள்ளையடிச்சு எல்லா விலையையும் ஏத்தி ஏழைகளை நடுத்தெருவுல விடும் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா? ஊரை அடிச்சு உலையில போட்ட பாவிக" என்றார் ஆவேசமாக.

ஜீவா தங்கவேல், எஸ்.பி.சேகர், இளையராஜா


 

Next Story

பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? - கனிமொழி எம்.பி.

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kanimozhi said central government has reduced price of cylinders because of elections

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. 

இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் தேர்தல் வருவதால் தான் மத்திய அரசு சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, சிலிண்டர் விலையை முன்கூட்டியே குறைத்திருக்க முடியும்; ஆனால் தேர்தல் வரும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்துள்ளனர். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும் தான் கவலையா? பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது போன்ற பல விஷயங்களை செய்யலாம். அதைவிட்டு விட்டு பெண்களை சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.