இது தொடர்பாக தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நக்கீரனுக்கு அளித்த பேட்டி, “ஒருவர் அமைச்சராக தொடர்வதும் அல்லது அமைச்சரவையில் இருந்து விலக்குவதும் முதல்வரின் முடிவுதான் என்பதை அரசியல் அமைப்பு சட்டம் உறுதி செய்திருந்தாலும் கூட, ஆளுநர் அவர் மீது ஒரு சர்ச்சையை உருவாக்கினார். அதாவது, அவர் அமைச்சராக தொடர முடியாது என்பது போன்று அவருக்கு இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஆளுநர் செய்த காரியத்தை சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. அதனை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
ஆளுநர்களுக்கான அதிகாரங்களை எத்தனை முறை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகும், தங்களுக்கு அதிகாரங்கள் இருப்பதை போல தலையிடுவதை தவறு என உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக இன்றும் சுட்டிக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. இது ஜனநாயகத்திற்கு கிடைத்திருக்க கூடிய வெற்றியாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இதற்கு முன்னால் உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பிலும், ‘ஆளுநர்கள் நீண்ட காலம் மசோதாக்களை நிலுவையில் வைப்பதைவிட, நீங்கள் உங்களுக்கான அதிகாரத்தை தெரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் எங்களை நாடி உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ எனும் மிகக் கடுமையான வார்த்தைகளைக் கூட அவர் சொல்லியிருந்தார். இது ஜனநாயகத்தில் மக்களுக்கு கிடைத்த வெற்றி என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.