Skip to main content

ஊழல் புகார்கள்! மாற்றப்படும் மாவட்ட ஆட்சியர்கள்!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
tamil nadu assembly

                           
 

ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது போல தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த கோப்புகளும் கோட்டையில் தயாராகிறது. இந்த பட்டியலில், மாவட்ட கலெக்டர்கள் பலரின் தலை உருளவிருக்கிறது என்கிறார்கள். 
                         

கரோனா தாக்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை பயன்படுத்தி, மாவட்ட கலெக்டர்கள் பலரும் பல ஊழல்களை செய்து வருவதாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடிக்கு புகார்கள் பறந்துள்ளது. இதுகுறித்து உளவுத்துறையிடம் விசாரிக்கச் சொல்லியிருந்திருக்கிறார் எடப்பாடி. அதனை விசாரித்த உளவுத்துறையும், ஊழல் புகார் உண்மைதான் என சொல்லியுள்ளது. முதல்கட்டமாக 5 மாவட்ட ஆட்சியர்கள் இந்த ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். 
       

அவர்கள் மீது நவடிக்கை எடுக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி. ஆனால், இதனை அறிந்த சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் கோட்டையிலுள்ள உயரதிகாரிகள் மூலம் அதனை தடுக்கு வகையில் லாபி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களாக சுமார் 4 வருடங்களை கடந்திருக்கும் சிலரை வேறு இடங்களுக்கு மாற்றவும் தலைமைச் செயலர் சண்முகத்திடம் விவாதித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

 

 

Next Story

அமலாக்கத்துறை சம்மன்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Enforcement Department Summons; Supreme Court action order

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்ககளுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழஙக வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். 

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.