Skip to main content

கமிஷனுக்காக மருத்துவர் மீது அபாண்ட புகார்?

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Complaint against doctor for commission?

திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றும் மருத்துவர் இனிகோராஜ் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கையாளுகிறார் என்ற குற்றச்சாட்டை அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் நிர்மலா, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவாக அளித்துள்ளார்.

அந்த மனுவில், "இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நான் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். என் போன்ற பெண் ஊழியர்கள் அலுவல் நிமித்தமாக ஆலோசனைகள் செய்வதற்கு மருத்துவர் இனிகோராஜின் அறைக்கு சென்றால் இரட்டை அர்த்தங்களுடன் பேசுவதோடு, கண்காணிப்புக் கேமராக்களை தவறாகவும் பயன்படுத்தி வருகிறார்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற பிரச்சனை ஏற்கெனவே ஏற்பட்டதால், புகாரின் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி கடந்த 2023ல் ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவர் சித்ரா நியமிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்ட இனிகோராஜ், மீண்டும் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின் தன்மீது புகாரளித்த ஊழியர்களைப் பழிவாங்குவதாக புகாரளிக்கப்பட்டது. இந்த புகார்க் கடிதம் தொடர்பாக சமூக நலத்துறை அலுவலகத்தில் மருத்துவர் நிர்மலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவர் நிர்மலாவிடம் கேட்டபோது, "நான் புகாரளித்தது உண்மை. தற்போது விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகு பேசுகிறேன்'' என்றார். இனிகோராஜை சந்தித்துக் கேட்டபோது, "கடந்த 2022ல் இம்மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு இம்மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. நான் வந்த பிறகுதான் நோயாளிகளுக்கான சேவை, அறுவைச்சிகிச்சை, ஊழியர்களின் பணி என அனைத்தையும் மேம்படுத்தினேன். அந்த மருத்துவர் நிர்மலா, என்னைவிட பெரியவர், ஆனால் மருத்துவப்பணியில் என்னைவிட இளையவராக இருக்கிறார். நான் பொறுப்பேற்றவுடன் மருத்துவமனையின் தரத்தை உயர்த்தினேன். அதே போல மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி, சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளின் அறுவைச் சிகிச்சையை இந்த மருத்துவமனையிலேயே செய்யுமளவிற்கு மருத்துவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். ஆனால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரான நிர்மலா, இதுவரை ஒரு அறுவைச்சிகிச்சைகூட செய்ததில்லை.

இந்த மருத்துவமனையுடன் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே அறுவைச் சிகிச்சைக்கு நாங்கள் அங்கு நோயாளிகளை அனுப்பி வைப்போம். அதற்கு இ.எஸ்.ஐ. மூலம் பணம் செலுத்தப்படும். அந்த நிலையை மாற்றி, அனைத்து அறுவைச் சிகிச்சையும் இங்கேயே செய்யும்படி இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இவருடைய காது, மூக்கு, தொண்டை பிரிவு மட்டும் 6 வருட காலமாக ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்ததில்லை. அனைத்தும் தனலட்சமி சீனிவாசன் மருத்துவமனைக்கு தான் அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் செலவு அதிகரிப்பதால், என்னுடைய மேலதிகாரிகளும் என்னிடம் கேள்வி எழுப்பும்போது, கண்காணிப்பாளர் என்ற முறையில் நான் அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டியது என்னுடைய கடமை'' என்றார்.

அதேபோல், கண்காணிப்பு கேமரா பொருத்தி தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து பதிலளிக்கையில், "கடந்த 5 வருடங்களாக இந்த கேமராக்கள் செயல்படவில்லை. நான் வந்த பிறகு நீண்ட முயற்சிக்கு பிறகு சரிசெய்தேன். கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் இந்த கேமராக்களை பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன். இங்குள்ள எந்த கேமராவும் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் தாராளமாக என்மீது நடவடிக்கை எடுக்கலாம். கடந்த 5 மாத வீடியோப் பதிவும் உள்ளது. அதிலும் பரிசோதித்துப் பார்க்கலாம். அதேபோல், வருகைப்பதிவும் இல்லாமலிருந்தது. நான் வந்த பிறகு பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தி, வருகைப் பதிவேட்டை மாதம் தவறாமல் என்னுடைய உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன். ஒவ்வொரு மாதமும் மருத்துவமனையில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள், மருத்துவர்களின் பங்களிப்பு என அனைத்துத் தரவுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே என்னால் அவர்களுடைய சுதந்திரம், வருமானம் பறிபோனதால் என் மீது இப்படிப்பட்ட புகாரைக் கூறுகின்றனர். என்னிடம் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளேன். மருத்துவமனையில் பணியாற்றும் எந்த ஊழியரிடமும் தனிப்பட்ட முறையில் கூட விசாரணை நடத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் விசாரித்தபோது, "முன்பெல்லாம் இங்குவரும் நோயாளிகளை அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தால், மருத்துவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் இங்கேயே செய்யும் அளவிற்கு தரம் உயர்ந்துள்ளது. ஆனால் காது, மூக்கு, தொண்டை பிரிவு மட்டும் இதுவரை ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை. அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று கிசுகிசுத்தனர். விவகாரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிந்தது.

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.