Skip to main content

பெண்களை மதிக்கும் சமூகம்தான் நாகரீக சமூகம்! தமிமுன் அன்சாரி பேச்சு!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018



பெண் என்பவள் அன்பானவள். மனதில் அழகை சுமப்பவள். பெண்களை மதிக்கும் சமூகம் தான் நாகரீக சமூகமாகும் என பேசினார் தமிமுன் அன்சாரி.
 

நாகப்பட்டிணத்தில் விதவைப் பெண்கள் வாழ்வுமைச் சங்கத்தின் சார்பில் அகில உலக பெண்கள் எழுச்சி தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும, மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார்.
 

விழாவில் பேசிய அவர், 
 

மகளிர் தினம் என்ற பெயரில் நட்சத்திர விடுதிகளில் கூடி கலைபவர்களுக்கு மத்தியில் இந்த தினத்தை அர்த்தமுள்ளதாக, சாமானிய  பெண்களை அழைத்து திரட்டிக் நடத்தியதற்காக 'விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க'த்திற்கு எனது மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

அன்னை இந்திரா காந்தி, ஜெயலலிதா அம்மா, அன்னை சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, மெஹ்பூபா முப்தி என பல பெண் ஆளுமைகள் நமது நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.

 

World Women's Day


 

 அமெரிக்காவில் ஒரு ஹில்லாரி கிளிண்டன் என்ற ஒரு பெண்மணி அதிபராக வரமுடியவில்லை என்பதை நினைக்கும்போது, நமது நாட்டில் பெண்கள் அரசியல் அதிகாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.

அதே நேரம் பல இன்னல்களும் இங்கு நடக்கிறது. தினமும் 22 பெண்கள் நமது நாட்டில் வரதட்சனை கொடுமையால் உயிரிழக்கிறார்கள். குடும்ப வன்முறை சட்டம் இருந்தும் கூட, 80% பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள்.
 

 விழுப்புரத்தில் 13 வயது சிறுமி தனம் கற்பழிக்கப்பட்டதும், தூத்துக்குடியில் 5 வயது குழந்தை சிவகாமி கற்பழிக்கப்பட்டதும், நேற்று இரவு திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கணவருடன் பைக்கில் சென்ற 3 மாத கர்ப்பிணி உஷா போலிசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததும் வேதனையளிக்கிறது.
 

பெண் என்பவள் அன்பானவள். மனதில் அழகை சுமப்பவள். பெண்களை மதிக்கும் சமூகம் தான் நாகரீக சமூகமாகும். ஒரு பெண்ணின் சுதந்திரம், கல்வியுறிமை, திறமை, வாழ்வுரிமை ஆகியவைகளை மதிக்க வேண்டும்.

 

World Women's Day


 

 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே விதவை பெண்களின் மறுவாழ்வுக்கு நபிகள் நாயகம்தான் வித்திட்டார். தன்னை விட வயது மூத்த விதவை பெண்ணான கதீஜா என்பவரைத்தான் அவர் திருமணம் செய்து, தன்னையே அதற்கு முன்மாதிரியாக்கினார்.
 

 ஆனால் இன்றும் நாகரிக வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் கூட பெண்களை இயந்திர மனநிலையிலையே வைத்திருக்கிறோம். அவர்களின் தியாகங்களை மதிப்பதில்லை.  உழைப்பை போற்றுவதில்லை.

ஒரு முறை தந்தை பெரியாரை சந்திக்க ஒரு இளைஞர் வந்தார். அவரிடம் பெரியார் உங்கள் அப்பா என்ன செய்கிறார் என்றதும், அவர் வேலைக்கு செல்கிறார் என பதிலளித்தார். அம்மா என்ன செய்கிறார்? என்றதும், 'அவங்க வீட்ல இருக்காங்க' என்றார்.
 

 உடனே பெரியாருக்கு கோபம் வந்து விட்டது. உங்களுக்கு சமைப்பது யாரு? டீ, காபி கொடுக்கிறது யாரு? துணி துவைக்கிறது யாரு? வீட்டை சுத்தம் செய்வது, நிர்வாகம் செய்வது யாரு? என்று அடுக்கடுக்காக பதில் கேள்வி கேட்டதும், வந்தவர் 'அம்மா' என பதறிப் போய் கூறினார். இவ்வளவு வேலையும் செய்கின்ற 'அம்மா'வை 'சும்மா வீட்ல இருக்காங்க' என்பது நியாயமா? என பெரியார் கேட்டார். அதனால் தான் அவரை 'பெரியார்' என்கிறோம்.

 

World Women's Day



 இன்று அந்த பெரியாரின் சிலையை உடைப்போம் என்கிறார்கள். அதன் மூலம் இன்று அவரின் ஆதிக்க எதிர்ப்பு கொள்கைகளை தகர்க்க நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை  வழங்கி, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டங்களை தொடங்கினார்கள். ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டத்தையும், பாலுட்டும் தாய்மார்களுக்கு பொது இடத்தில் தனி அறை வழங்கும் திட்டத்தையும், மானிய விலையில் ஸ்கூட்டி என்ற திட்டத்தையும் தந்தார்கள். 
 

பெண் சேவை எனும் போது அன்னை தெரஸாவைத்தான் நாம் குறீயீடாக பார்க்கிறோம். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து ஏழை நாடாக இந்தியாவுக்கு வருகை தந்து, தொழு நோயாளிகளுக்காக, அழுக்கு நிறைந்த கல்கத்தாவில் ஆஸிரமம் அமைத்து சேவை செய்தார். 
 

இன்று கிறிஸ்த்தவ தொண்டு இயக்கங்களின் பிண்ணணியில், இந்த 'விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம்' பெண்களை தன் முனைப்பு உள்ளவர்களாக மாற்றி அரசிடம் கையேந்தாமல், சுய தொழில் நடத்துபவர்களாக மாற்றியிருப்பதை பாராட்டுகிறேன். உங்கள் பணி தொடரட்டும். அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு பேசினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாகை - காங்கேசன் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Passenger ferry service between Nagai Kangesan again
கோப்புப்படம்

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் துறைமுகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்தசோனாவால், தமிழக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல்நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் மழையைக் காரணம் காட்டி பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2018) நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. இதற்காக இந்தக் கப்பல் மே 10 ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.