Skip to main content

வீடுகளுக்கே தேடிச் சென்று பழங்குடியினர் சான்றிதழ் வழங்கிய கோட்டாட்சியர்; பாராட்டிய அமைச்சர்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Commissioner who issued Tribal Certificates; Appreciated Minister

 

நரிக்குறவர்கள் பல்வேறு இனப் பிரிவுகளில் இருந்ததால் இவர்களுக்கான அரசு திட்டங்களும், வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் படிப்பு, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கிடைக்காமல் தங்கள் குழந்தைகளை பள்ளிப் படிப்பிற்கு கூட அனுப்ப முடியாமல், தங்களின் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து பாசி, மணி, ஊசி விற்றனர்.

 

இந்த நிலையில் தான் எங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து எஸ்.டி சாதிச் சான்று வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கையை தமிழ்நாடு அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு எடுத்துச் சென்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதனை ஏற்ற மத்திய அரசு நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து எஸ்.டி சான்றிதழ் வழங்க அனுமதி அளித்தது.

 

மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உடனே எஸ்.டி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, திருமயம் உள்ளிட்ட 5 தாலுகாவிலும் உள்ள நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் நேரில் சென்று அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்களையும் வரவழைத்தார். பிறகு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பம் செய்து பழங்குடியினர் எஸ்.டி சான்றுகளை உடனே பதிவிறக்கம் செய்து வழங்கினார். அதன்படி புதுக்கோட்டை கோட்டத்தில் உள்ள 5 வட்டத்திலும் சுமார் 295 பேருக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்கினார்.

 

Commissioner who issued Tribal Certificates; Appreciated Minister

 

இந்த நிலையில் ஒரே நேரத்தில் கீரமங்கலம் அறிவொளி நகர், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு 111 சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடந்தது. அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சாதிச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். அப்போது அவர், “புதுக்கோட்டை கோட்டாட்சியர் அரசின் எந்தப் பணியாக இருந்தாலும் உடனுக்குடன் செய்து வருகிறார். பல பாதைப் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர். பழங்குடியினர் வீடுகளுக்கே சக அதிகாரிகளுடன் வந்து விண்ணப்பப் பதிவேற்றம் செய்து உடனே சாதிச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துள்ளது பாராட்டத்தக்கது.

 

முதலமைச்சர், ‘உங்களின் கல்வி, வேலைவாய்ப்பு தான் நாட்டின் வளர்ச்சி’ என்கிறார். இது போன்ற விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளும் போது தான் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சாதிச் சான்று மிகப் பெரிய ஆயுதம். இதனை நீங்கள் தொழில் கடன் பெறவும், உங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கவும், வேலை பெறவும் பயன்படுத்தலாம். இட ஒதுக்கீட்டில் உங்கள் குழந்தைகள் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகும் போதுதான் இதற்கான முழு பலன் கிடைக்கும். அதை எதிர்பார்க்கிறோம். 

 

இப்போது யாரேனும் பள்ளி, கல்லூரிகளில் படிக்க நினைத்து படிக்க முடியாமல் இருந்தால் சொல்லுங்கள். உடனே உங்களைச் சேர்த்து படிக்க வைக்கிறோம். நீங்கள் தொழில் செய்யக் குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தொழிற்கடன் வழங்கும் விழா நடத்துவோம்” என்றார்.

 

இதே போல மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா எஸ்.டி சான்றிதழ் மூலம் என்னவெல்லாம் சலுகைகள் பெறலாம் என்பதை விளக்கிப் பேசினார். கோட்டாட்சியர் முருகேசன், “இந்தச் சான்றிதழ் உங்களின் வளர்ச்சி, உங்கள் குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவதுடன் உங்கள் பொருளாதாரத்தையும் உயர்த்தும். இந்த சான்றிதழ் வழங்க முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்த வருவாய்த் துறையினருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார். 

 

இதே போல இலுப்பூர் கோட்டத்திலும் கோட்டாட்சியர் முயற்சியில் முழுமையாக சான்று வழங்கியுள்ள நிலையில், அறந்தாங்கி கோட்டத்தில் யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இதனால் அறந்தாங்கி கோட்டத்தில் சுமார் 300 பேருக்கு பழங்குடியினர் எஸ்.டி சான்றிதழ் கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்ற விழிப்புணர்வே இல்லாத மக்களிடம் விண்ணப்பம் எதிர்பார்த்து காத்திருப்பதை தவிர்த்து, புதுக்கோட்டை, இலுப்பூர் கோட்டம் போல நரிக்குறவர்கள் காலனிக்கே அலுவலர்களை அனுப்பி இணைய வழி விண்ணப்பப் பதிவேற்றம் செய்து சாதிச் சான்று வழங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.