Skip to main content

இடத்த கொடுக்கலயா..? வீடு புகுந்து அடிச்சு தூக்கு..! நில அபகரிப்பில் அமைச்சரின் ஆதரவாளர்கள்..!

Published on 10/10/2020 | Edited on 10/10/2020
Coimbatore

 

 

நில அபகரிப்பு, கட்டபஞ்சாயத்து, வீடு புகுந்து தாக்கும் ரவுடிகள் என அதிரவைக்கின்றது கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த அந்த சம்பவம் ஆளும் கட்சி அமைச்சரின் ஆதரவாளர் உத்தரவின் பேரில் நடந்ததாக கூறப்படுவதால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. 

 

கோவை மேட்டுப்பாளையத்தில் பாரம்பரியமாக வசித்து வரும் சுமதி-சந்திரசேகர் தம்பதியினருக்கு சொந்தமாக 14 சென்ட் நிலம் மேட்டுப்பாளையம், கல்லாறு - ஊட்டி செல்லும் பிரதான சாலையில் உள்ளது.  இந்த நிலத்தில் 3 சென்ட் மட்டும் வாடகைக்கு விட அவர்கள் முடிவெடுத்தனர். சுக்கூர்பாய் என்பவர் சிறிய கடை போட வாடைகைக்கு கேட்டு ஒப்பந்தம் போட்டவர், 11 மாதமாக வாடகை கொடுக்காமல் பேசிய அட்வான்ஸ் தொகையும் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

தொடர்ந்து ஒரு வருடமாக நிலத்தில் எதுவும் செய்யாமல், வாடகையும் கொடுக்காமல் திடீரென இரண்டு மாடி அளவுக்கு கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளனர். வாடகையும், அட்வான்ஸ் தொகையும் தராமல் ஏன் திடீரென இவ்வளவு பெரிய கட்டுமான பனிகளை செய்கின்றீர்கள்? எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இப்படி பணிகளை செய்தால் நாளை எங்களுக்கு பிரச்சனை வரும் என்று நிலத்தின் சொந்தக்காரர்களான சுமதி - சந்திரசேகர் ஆகியோர் கேட்க, சரியாக பதில் கூறாமல் சுக்கூர்பாய் மறுத்து வந்துள்ளராம். 

 

இந்நிலையில் மேட்டுப்பாளையம் அம்மா பேரவை நகர அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க அமைப்பாளர் மருதுபாண்டி, சுக்கூர்பாயுடன் வந்து இனிமேல் தன்னிடம்தான் நீங்கள் பேச வேண்டும் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர். மருதுபாண்டி மேட்டுப்பாளையம் அம்மா பேரவையின் தலைவர் நாசரின் ஆதரவாளர். 

 

இந்நிலையில்  மீண்டும் சில நாட்களில் வந்த மருதுபாண்டி, ''ஒன்று நிலத்தை கொடுங்கள், இல்லையென்றால் ரூபாய் 7 இலட்சம் கொடுங்கள்'' என மிரட்டியதாகவும், ''பணத்தை கொடுக்க மறுத்து நாங்கள் சட்டரீதியாக நடப்போம்'' என சுமதி சந்திரசேகர் தம்பதியினர் கூறியுள்ளனர்.

 

இந்தநிலையில் கடந்த 07.10.2020 அன்று இரவு 7.30 மணியளவில் ஊட்டி சாலையில் உள்ள மசாலா குடோனில் சுமதி-சந்திரசேகர் மற்றும் அவர்களது மகன் லோகேஷ் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். 

 

அப்போது சுக்கூர்பாய், மருதுபாண்டி உள்ளிட்ட 20 பேர் குடோனுக்கு நுழைந்து தந்தை சந்திரசேகர் (62), மகன் லோகேஷ் (27) ஆகியோரை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த எதிர்கடைக்காரர் பசூரிதினையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

 

மேலும் லோகேஷ் கழுத்தில் போட்டிருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியையும் அறுத்து சென்றுள்ளனர். இதில் சந்திரசேகர் பலத்த காயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேட்டுப்பாளையம் கே.பி.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

அடித்து உதைத்து விட்டு, மீண்டும் இரண்டு நாட்களில் வருவோம், உன் மகனை பத்திரமாக பாத்துக்க என்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். 

 

மேலும் இந்த சம்பவம் முழுவதுமாக மேட்டுப்பாளையம் காவல் நிலைத்தியத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்  சென்னகேசவன்  துனையோடு நடந்துள்ளது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளனர். 
 


உச்சகட்டமாக பாதிக்கப்பட்டவர்களை அழைத்த இன்ஸ்பெக்டர் சென்னகேசவன், உங்கள் மீது அவர்களும் புகார் கொடுத்துள்ளார்கள். எனவே இருவர் மீதும் புகார் எப்.ஐ.ஆர். போடுவேன் என கூறினாராம்.  


மேட்டுப்பாளையம் அம்மா பேரவையின் தலைவர் நாசர் என்றாலே ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர் என்பது அனைவருக்கும் தெரியும் என்கின்றனர் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள். 

 

மேலும் இந்த சொத்து விவகாரத்தில் அமைச்சர் நேரடியாக காவல்துறையினரை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

தங்களை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர். 

 

covai

 

இதுதொடர்பாக அம்மா பேரவை செயலாளர் நாசரிடம் கேட்டபோது, ''எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'' என பதிலளித்தார்.

 

ddd

 

மேலும் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சென்னகேசவனை தொடர்புகொண்டபோது, ''எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசினால்தான் பதில் கிடைக்கும்'' என கூறினார். 

 

மேட்டுப்பாளையம் நில அபகரிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சுமதி-சந்திரசேகர் தம்பதியின் வழக்கறிஞராக மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்கறிஞருமான ப.மோகன் கூறும்போது, ''கோவை மாவட்டத்தில் பொய் வழக்கு தொடுக்க வைக்கும் நிகழ்வு நடக்கிறது. அமைச்சருக்கோ அல்லது அவர்களின் ஆட்களுக்கோ எதிராக செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் பொய்வழக்கு போட்டு மிரட்டுவது தொடர்கிறது. இந்த வழக்கிலும் இதுவே நடக்கிறது.

 

20 பேர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். சிசிடிவி காட்சிகளும் தெளிவாக இருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் அதிமுகவினர் என்பதால் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வேன் என பாதிக்கப்பட்டவர்களை இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளது எந்த அளவிற்கு கோவை மாவட்டத்தில் அரசுதுறைகள் சீரழிந்துள்ளது என்பதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வைக்க உரிய சட்ட போராட்டத்தை நடத்துவோம்'' என்று கூறினார். 

 

சமீபகாலமாக காவல்துறையினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையை சேர்ந்தவர்கள் இதுபோன்ற சொத்து அபகரிப்பு, மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்களுடன் தொடர்பு வைத்து அவர்களுக்கு சாதகமாக நடந்து வருவது தமிழக காவல்துறையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது அந்தத் துறையைச் சேர்ந்த நேர்மையானவர்களின் கவலையாக உள்ளது.  

 

-சிவா   

 

         

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி எம்.பி. உடல்நிலை குறித்து வைகோ விளக்கம்!

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
Ganesh Murthy M.P. Vaiko explanation about health

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளராக பணியாற்றி வருகிறார். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழலில் இன்று (24.03.2024) காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றார். என்ன காரணம் என தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை விழுங்கிய அவர் 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கணேச மூர்த்தி நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே எல்லோரும் சேர்ந்து துரை வைகோவை வேட்பாளராக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கணேச மூர்த்திக்கு அடுத்த சான்ஸ் பார்ப்போம் என்றனர். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர்.

Ganesh Murthy M.P. Vaiko explanation about health

இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அது மாதிரியே செய்யலாம் என சொன்னேன். அதன் பிறகு நான் என்ன நினைத்தேன் என்றால் அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டு, அதன் பிறகு அதைவிட பெரிய பதவி ஏதாவது ஸ்டாலினிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என இருந்தேன். 

அதன் பிறகும் அவர் நன்றாக பிரியமாகவே பேசினார். வீட்டில் மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். கொஞ்சம் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் நேற்று நான்கு முறை மருத்துவரிடம் பேசியுள்ளார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார். அங்கு வந்த கபிலனிடம் ‘இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய முதலுதவி சிசிக்சைகள் அனைத்தும் செய்து விட்டனர்.

அதன்பிறகு, ‘முதலுதவி சரியாக செய்ததால் தான் சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 சதவிதம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் கொஞ்சம் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆதனால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் தான் எதையும் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

Next Story

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; தீடீரென வேட்பாளராக மாறிய முன்னாள் ராணுவ வீரர்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
 ex-serviceman who has filed his nomination to contest the parliamentary elections

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் மதுரை விநாயகம். இவர் கடந்த 20 வருடங்களாக இந்திய ராணுவத்தில் ஜாயின் கமிஷன் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பின்னர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். எல்லையில் பாதுகாப்பு பணியில் முழு நேரமும் ஈடுபட்டு வந்த இவர், சொந்த ஊருக்கு வந்ததும் குடும்பத்தினரோடு அமைதியாக வசித்து வந்துள்ளார். மேலும், நடப்பு அரசியலை கூர்மையாக கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி, வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியானதும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்தின் ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, கோவை மாவட்டத்தில் தேர்தலில் களம் காண்பவர்கள் அவரிடம் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென எந்தவித திட்டமிடலும் இல்லாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மதுரை விநாயகம், ராணுவ சீருடையை அணிந்துகொண்டு, தனது குடும்பத்தாரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றவர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாகக் கூறியுள்ளார். இதற்கான வேட்பு மனுவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரான சர்மிளாவிடம் கொடுத்துள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வேட்பு மனு கொடுக்க வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை விநாயகம் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தான் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய நாட்டு எல்லையை பாதுகாத்து வந்ததாகவும், தற்போது ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், நான் சம்பாதிப்பதற்காக இந்தத் தேர்தலில் பேட்டியிடவில்லை. முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் எனவும், இதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் எனவும் கூறியிருக்கிறார்.

அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், இங்கு ஏற்கெனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கும் போது நீங்கள் வந்து என்ன செய்ய போகின்றீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த மதுரை விநாயகம், இங்கு உள்ளவர்களை மூன்று முறை எம்பி ஆக்கினாலும் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக்கினாலும் சம்பளத்தையும் மூன்று ஓய்வூதியத்தையும் வாங்கிக்கொள்கிறார்கள் எனவும், இதனால் மக்களின் வரிப்பணம் முழுவதும் அவர்களிடம் சென்று விடுவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய மதுரை விநாயகம், நான் வெற்றி பெற்றால் எனது தொகுதி மக்களுக்கு வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி, உள்ளிட்டவற்றை வசூலிக்க மாட்டேன் எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், பொள்ளாச்சி தொகுதியில் தென்னை விவசாயிகளின் வளர்ச்சிக்கான பணிகளை செய்வேன் எனவும், நீர்நிலைத் திட்டங்களை சரி செய்வேன் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் போட்டியிட போவதாக கூறி சவப்பெட்டியோடு ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறுபடியும் அதே பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட போவதாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சீருடையோடு வந்து வேட்புமனு தாக்கல் செய்ததால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.