Skip to main content

நான் அடிக்காத விசிலா..? மேடையிலேயே கண்டித்த கே.என்.நேரு..! அதிர்ச்சியடைந்த திமுக எம்.எல்.ஏ.!!!

Published on 17/08/2020 | Edited on 18/08/2020

 

k n nehru

 

 

நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் உதித்தாலும் மேற்கு மாவட்டங்கள் இப்போதும் தி.மு.க.வுக்கு சவாலானவைதான். பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் மூலம் கிடைத்த சர்வே ரிப்போர்ட்டுகளில் மக்கள் ஆதரவு சாதகமாக இருந்தாலும், மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள்தான் கட்சியின் வெற்றிக்கு எதிரியாக இருக்கிறார்கள் எனத் தெரியவரவே, கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என் நேரு, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமைப்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. இருவரையும் கோவை மாவட்டத்தை ஆய்வு செய்ய அனுப்பினார் ஸ்டாலின்.


கோவை தி.மு.க.வின் 4 மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாநகர கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட அமைப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவுமான கார்த்திக் மீது அதிக புகார் கடிதங்கள் வந்திருக்கின்றன என நேரு ஆரம்பித்ததுமே, கார்த்திக் மீதான புகார்களை நிர்வாகிகள் கொட்ட ஆரம்பித்தனர். கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்பதில் தொடங்கி, கம்மவா நாயுடுவுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார் என்பது வரை புகார்களில் அனல் பறந்தன. கொங்கு வோளாளக் கவுண்டர் சமுதாயத்தின் கட்சியாக அ.தி.மு.க. அடையாளப்பட்டிருக்கும் நிலையில், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளை அமைச்சர் வேலுமணியின் ஆட்கள் என கார்த்திக் ஓரங்கட்டுவதும் புகாராக வெளிப்பட்டது. மேடையிலேயே கே.என்.நேரு, கார்த்திக்கை கண்டித்து, இதோட நிறுத்திக்கணும் என்றதும் முகம் வெளிறிப் போய்விட்டதாம் கார்த்திக்குக்கு.

 

r.sakkarapani mla

 

அதன்பிறகு, சக்கரபாணி எம்.எல்.ஏ... "தம்பிகளா உங்கள பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். தி.மு.க.வை இந்த முறை இங்கே ஜெயிக்க வைக்க வேண்டும்... ''எனப் பேச... இடைமறித்த நேரு, "கவுண்டர்களோட பேசறதுக்குத்தான் பெரிய கவுண்டரான உன்னையக் கூட்டிட்டு வந்திருக்கேன்...'' எனச் சொல்ல, விசில் சத்தம் பறந்திருக்கிறது. நான் அடிக்காத விசிலா என இறுக்கத்தைத் தளர்த்தியிருக்கிறார் நேரு.

 

coimbatore

 

மாநகர மேற்கு உடன் பிறப்புகளோ... "கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் இருக்கு. அதுல 71 வார்டுகளை மாநகர கிழக்குக்கு கொடுத்திருக்கீங்க. 21 வார்டுகள்தான் மேற்குக்கு கொடுத்து இருக்கீங்க. எங்க மாவட்ட அமைப்பாளர் முத்துசாமி குனியமுத்தூர் பகுதி கழகச் செயலாளரா 10 வருஷத்துக்கும் மேலா இருக்காரு. ஆனா அதற்கு மா.செ.வா கார்த்திக்கைப் போட்டு இருக்கீங்க. முத்துசாமி பகுதியிலேயே அவரைப் போராட்டத்துக்கு கூப்பிட முடியலை'' என பார்டர் பிராப்ளத்தை கிளப்பியுள்ளனர். பத்மாலயா சீனிவாசன் தனக்கு 19 பேரூராட்சி வார்டு மெம்பர் ஆதரவு இருந்தும் ஒ.செ. பதவியை பறித்த வடக்கு மாவட்ட அமைப்பாளர் சி.ஆர். ராமச்சந்திரன் மீது புகார் வாசிக்க, சி.ஆர்.ஆர். முகத்தில் ஈயாட வில்லை.


புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜை மேடைக்கு வரவழைத்த நேரு... "கண்காணிப்பு குழு தலைமைக்கு உங்கள் மேல் அளித்த புகாரை நீங்களே படியுங்கள்...'' எனச் சொல்ல, இதனை எதிர்பாராத தென்றல் செல்வராஜ் வியர்க்க விறுவிறுக்க அவற்றைப் படித்துள்ளார். சார்பு அணிகளுக்கான போஸ்டிங், 2016 தேர்தலில் தி.மு.க வேட்பாளர் தமிழ்மணியைத் தோற்கடிக்க அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தாமோதரன் போட்ட ப்ளானுக்கு உதவி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு டஃப் கொடுக்க முடியாத நிலை எனத் தன் மீதான புகார்களை தென்றல் செல்வராஜ் தடுமாற்றத்துடன் படித்து முடிக்க, அவருக்குத் துணைபோன நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை உண்டு என்றும், ஒன்றியப் பிரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

 

http://onelink.to/nknapp

 

ஆய்வுக் கூட்டம் முடிந்தபோது... நேரு, கோவை மாநகர கிழக்கு மாவட்டத்தில் கார்த்திக்கால் ஒதுக்கப்பட்ட மு.மா.செ நாச்சிமுத்து, மு.மாநகரச் செயலாளர் வீர கோபால், கவுன்சிலரும், வடக்கு தொகுதியில் வேட்பாளராய் நின்ற மீனா லோகுவையும் அழைத்து ஸ்டாலினிடம் செல்போனில் பேச வைத்தாராம். அவர்களின் பதவிகள் குறித்து ஸ்டாலினும் நம்பிக்கை அளித்துள்ளார்.

 

கே.என்.நேருவும் சக்கர பாணியும் கோவை தி.மு.க நிர்வாகிகளை கதிகலங்க வைத்திருக்கிறார்கள்.

 

 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.