Skip to main content

ஓ.பி.எஸ்.சுக்கு கொம்பு சீவி..! அ.தி.மு.க.வில் சசி பவர்?

Published on 06/10/2020 | Edited on 06/10/2020
ddd

 

 

என்னை சசிகலா முதல்வராக்கினார் என்றால் உன்னையும் சசிகலாதானே முதல்வராக்கினார் என்று இ.பி.எஸ்.சும் ஓ.பி. எஸ்.சும் மோதிக் கொண்ட நிலையில், இப்போதும் அ.தி.மு.க.வுக்குள் சசிகலா குடும்பத்தின் ஊடுருவல் இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் உள்ளும் புறமும் அறிந்த கட்சி நிர்வாகிகள்.

 

டான்சி வழக்கின் காரணமாக, ஜெ.வின் பதவியேற்பு செல்லாது என 2001ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, முதன்முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர் செல்வம். யாரு இவரு என கட்சிக்காரர்களே கேட்டாலும், ஓ.பி.எஸ் முதல்வரானதில் அப்போதைய பெரியகுளம் (தேனி) எம்.பி. டி.டி.வி.தினகரனுக்கு கணிசமான பங்கு உண்டு. அந்த நன்றியுணர்வு ஓ.பி.எஸ்.சுக்கும் உண்டு. தினகரன் சொல்லித்தான், 2016ல் சசிகலாவுக்காக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ். (அதன்பிறகு நடந்தது தனி கட்டுரையாக உள்ளது).

 

 

தினகரனுடன் நெருக்கமாக இருப்பவர்கள், சசிகலாவின் தம்பி திவாகரனிடம் ஏழாம் பொருத்தமாகவே இருப்பார்கள். அதனால் ஓ.பி.எஸ். சற்று தள்ளியே இருக்க, திவாகரன் தனக்கு நெருக்கமாகக் கருதியது எடப்பாடியைத்தான். தினகரன் ஆளான ஓ.பி.எஸ்.சுக்கு பதில் எடப்பாடி முதல்வரானதிலிருந்து திவாகரன் தரப்புக்கும் அவருக்குமான நெருக்கம் மேலும் பலமாகியுள்ளது.

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.ஸின் தற்போதைய காரசார விவாதங்களின் பின்னணியிலும் தினகரன்-திவாகரன் பவர் ஃபைட் உள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள். செயற்குழு கூடுவதற்கு முதல்நாள், டெல்டா மாவட்டத்தில் சவுடு மணல் எடுப்பதற்கான அனுமதியை மாவட்ட மந்திரி தரப்புக்கும், திவாகரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வழக்கமான மணல் காண்ட்ராக்ட் தரப்புக்குமாக மூன்று பிரிவாகக் கொடுத்திருக்கிறது எடப்பாடி அரசு. வேறு எந்த மாவட்டத்திலும் இத்தகைய சவுடு மணல் அனுமதி வழங்கப்படாத நிலையில், திருவாரூர் மாவட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக கிழக்கு கடற்கரை சாலை நெடுகிலும் திவாகரன் தரப்பை மனதில் கொண்டு சவுடு மணலுக்கான அனுமதியை வழங்க எடப்பாடி அரசு தயாராக இருக்கிறதாம். இதனை தினகரனும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். எடப்பாடி முதல்வரான பிறகு, தன்னை முற்றிலுமாக கட்சியிலிருந்து ஓரங்கட்டிய கோபம் தினகரனுக்கு உள்ளது. அதனால், அவர் தரப்பிலிருந்து ஓ.பி.எஸ்.சுக்கு கொம்பு சீவி விடப்படுகிறது.

 

சசிகலா குடும்பத்திற்குள்ளான பவர் ஃபைட் அ.தி.மு.க. தலைமை வழியே எதிரொலிக்கிறது என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள்.

 

 

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

 

Next Story

அதிமுக யாருக்கு சொந்தம்?  எங்கே போயிற்று எம்.ஜி.ஆர். விசுவாசம்? (2)

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

admk

 

அதிமுக டிசைனே அப்படித்தான் என எப்படிச் சொல்லமுடியும்? 


‘புதிதாகக் கட்சி தொடங்க வேண்டும்; முதலமைச்சராக வேண்டும்..’ என்ற எண்ணம் துளியும் இல்லாதவராகவே இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், திமுகவுடன் பிணக்கு ஏற்பட்டு, அக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அவருடைய ரசிகர்கள், தாமரைக் கொடியேற்றி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏற்கனவே ‘அதிமுக’ என்ற பெயரில் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில், தன்னை இணைத்துக்கொண்டார். 1972ல், இப்படித்தான் அதிமுக என்ற கட்சி உருவானது. பிறகுதான், கட்சியின் கொள்கை ‘அண்ணாயிசம்’ என்று சொல்லப்பட்டு, திரைப்படங்களில் சோ போன்றவர்களால் கேலிக்கு ஆளானது. ஆனாலும், ஜெயலலிதாவை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்குவதற்கு எம்.ஜி.ஆரால் முடிந்தது. 


எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சினிமாவில் ஜொலித்தது, பின்னாளில், மக்களின் அபிமானம் பெற்ற அரசியல் தலைவர்கள் ஆவதற்கான தகுதிகளில் பிரதானமாக இருந்தது. சினிமா ஈர்ப்புள்ளவர்களாக இருப்பதாலோ என்னவோ, பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும், அந்த நேரத்தில் யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ, யாரைப் பிடித்திருக்கிறதோ, அவரது தலைமையை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களாக இருக்கின்றனர். கொள்கைப் பிடிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாததால், ‘தலைமை மீதான விசுவாசம்’ என்பதை, சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும் செய்கின்றனர். இந்த நடைமுறை, அதிமுகவில் வாடிக்கையாகிப் போனது. 

 

Who owns AIADMK? Where has the MGR loyalty gone?

 


அரசியல்வாதியாக இருந்தாலும், தன்னை நல்லவராகவே வெளிப்படுத்தி வந்தார் எம்.ஜி.ஆர். ஆனாலும், சீனியர்களின் உள்ளார்ந்த எதிர்ப்பை மீறி, 28 படங்களில் தன்னோடு இணைந்து நடித்த ஜெயலலிதாவை,  கொள்கை பரப்புச் செயலாளராக கட்சியில் வலியத் திணித்தார். சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். தன்னை வளர்த்துவிட்டிருந்தாலும், ‘தனிப்பட்ட வாழ்க்கையில் தான் ஏமாற்றப்பட்ட’ மனக்குமுறலிலேயே ஜெயலலிதா இருந்தார். அந்த வன்மத்தை, எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது பகிரங்கமாகவே காட்டினார். அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி மூலம், எம்.ஜி.ஆருக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு குடைச்சல் தந்தார். எம்.நடராஜனின் வழிநடத்துதலில், சசிகலா துணையோடு, எம்.ஜி.ஆரிடமிருந்து அதிமுக ஆட்சியைத் தட்டிப்பறிக்கும் வேலைகளிலும் இறங்கினார். ‘இத்தனை துரோகமா?’ என்று வெறுத்துப்போன எம்.ஜி.ஆர்., ‘அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் ஜெயலலிதாவிடம் பேசக்கூடாது..’ என்று உத்தரவிட்டார். 


பின்னாளில் என்ன நடந்தது? அமரராகி 33 வருடங்கள் கடந்தபின்பும், எம்.ஜி.ஆரை பூஜித்துவரும் ரசிகர்களாகிய தொண்டர்கள்தான், அக்கட்சியின் பலமான அஸ்திவாரம். ஆனாலும், அந்திமக் காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவுக்கு மதிப்பில்லாமல் போனது. எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தங்களின் ஒரே தலைவி ஜெயலலிதாதான் என்று அதிமுகவினர் கொண்டாடினர்.  


‘எம்.ஜி.ஆர்தானே அதிமுக! அதிமுகதானே எம்.ஜி.ஆர்.! எம்.ஜி.ஆர். மீதான விசுவாசம் எங்கே போயிற்று? எம்.ஜி.ஆருக்கே பிடிக்காமல்போன ஜெயலலிதாவை ஏன் ஏற்றுக்கொண்டீர்கள்?’ என்றெல்லாம் இயல்பாக எழும் கேள்விகளை அக்கட்சியினரிடம் அடுக்கினால், ‘எங்ககிட்டயேவா?’ என்று திருப்பிக் கேட்பார்கள். ஏனென்றால், அவர்கள் அப்படித்தான்! 

 

Who owns AIADMK? Where has the MGR loyalty gone?


ஜெயலலிதாவின் நடவடிக்கைகளும்கூட புரியாத புதிராகவே இருந்துள்ளன. தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கு, ஒருவிதத்தில் பக்கபலமாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், சேலம் கண்ணன் போன்றோரை அவமதிப்புக்கு உள்ளாக்கி ஓரம்கட்டினார். இக்கட்டான தருணங்களில், தனக்கு பாதுகாப்பாகவும் ஆலோசகராகவும் இருந்து ‘உயர்த்தியவர்’ என்றாலும், வேண்டாதவர் ஆகிவிட்டதால், ம.நடராசனை, போயஸ் கார்டன் பக்கமே தலைகாட்டவிடாமல் விரட்டியடித்தார். அதேநேரத்தில், அவருடைய மனைவி சசிகலாவை உடன்பிறவா சகோதரியாக தன்னுடனே வைத்துக்கொண்டார். சசிகலாவும்கூட, இரண்டு தடவை போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்தான். 


தலைமையிடமே, இத்தனை குழப்பங்களும், நடவடிக்கைகளில் குளறுபடிகளும் இருக்கும்போது, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ‘ஒரே நிலைப்பாடு’ உள்ளவர்களாக எப்படி இருக்கமுடியும்? 

 

அதிமுக யாருக்குச் சொந்தம்? - முடிவுகட்டும் தேர்தல்!