Skip to main content

"நீங்கள் உணரவில்லை!" - ரஞ்சித்; "என்னால் உணரமுடியாது" - அமீர்  

Published on 05/06/2018 | Edited on 05/06/2018

எட்டு மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வால் மறைந்த பள்ளி மாணவி அனிதாவுக்கு திரைத்துறையினர் நடத்திய இரங்கல் கூட்டத்தில்  கலந்துகொண்டு இயக்குனர்கள் பலர் அவர்களது கருத்துகளை பேசினர். அந்தக் கூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தும், இயக்குனர் அமீரும் கலந்துகொண்டனர். அமீர், தனது கருத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போது, இயக்குனர் ரஞ்சித்துக்கு அவரது கருத்துக்களில் முரண் ஏற்பட்டது. அமீர் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறி மைக்கைப் பிடித்து இவர் பேசினார். அப்போது இயக்குனர் ராமும் வந்து ரஞ்சித்துக்கு ஆதரவாகப் பேசி சமாதானம் செய்தார். மேலும் ரஞ்சித் "தமிழர்கள் சாதியால் பிரிவுபட்டு இருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்" என்றார். அமீரும் அது ஒத்துக்கொள்ளக் கூடிய ஒன்றுதான் என்றார். இவர்கள் இருவரின் பேச்சும் அப்போது அப்போது விவாதிக்கப்பட்டது. சீமான் ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

 

ameer ranjith



இதற்கு பின்னர் ரஞ்சித்துக்கும் அமீருக்கும் கருத்து வேறுபாடு என்பது போன்ற தோற்றம் நிலவியது. கடந்த ஞாயிற்றுக் கிழமை  இவர்கள் இருவரும் ஒன்றாக கச்சநத்தம் கொலைக்கு எதிரான கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டனர். முதலில் இயக்குனர் ரஞ்சித், 'சாதி என்பது நம்மை எப்படி ஆள்கிறது, அது கிராமங்களில் வேறாக ஊன்றி நிற்கிறது' என்பதைப் பற்றியெல்லாம் பேசிவிட்டு, 'அயோத்திதாச பண்டிதரே தமிழனுக்கு சாதி இல்லை, அதை முதலில் தூக்கி எறிகிறவன்தான் தமிழன் என்கிறார்' என்று பேசினார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் அமீர் பேசுகையில், "நான் ஒரு இசுலாமியன், எனக்கு இந்த சாதி சூழலே தெரியாது. நான் வளர்க்கப்பட்டதே அதெல்லாம் தெரியாமல்தான்" என்று கூறினார். பின்னர், எட்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் நடந்த கருத்து முரணை இன்னொரு மேடையில்தான் சரி செய்யவேண்டும் என்று இயக்குனர் ரஞ்சித்தை மேடைக்கு அழைத்தார்.

 

 


ரஞ்சித்தை அழைப்பதற்கு முன் இயக்குனர் அமீர் பேசும்போது எல்லோரும் அவரவர்களின் சாதி சான்றிதழை கிழித்து எறியத் தயாரா என்று கேட்டிருந்தார். அதைக் குறிப்பிட்ட ரஞ்சித், "நீங்கள் சாதி சான்றிதழைக் கிழித்து வா என்று சொல்கிறீர்கள்,  அதில் எத்தனை பேரின் உரிமை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியாதா? அது ஒன்றும் சலுகை அல்ல, பல போராட்டங்கள், இழப்புகளுக்குப் பிறகு பெற்றிருக்கும் உரிமை" என்று கூறினார். உடனே அமீர், "இறைவன் சத்தியமாக நான் இடஒதுக்கீட்டை நினைவில் வைத்துக்கொண்டு பேசவில்லை" என்று கூறினார். அதற்கு ரஞ்சித், "இப்படி இங்கு இருக்கும் சாதி நிலையை, வேறுபாட்டைப் பற்றி முழுமையாகத் தெரியாமல், உணராமல் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் உங்கள் மேல் எனக்குக் கோபமில்லை. சித்தாந்தம்தான் எதிரி, யாரும் யாருக்கும் எதிரியில்லை" என்று கூறிவிட்டு "விவாதங்கள் தொடரும், அமீர் அண்ணனுக்கு நன்றி" என்று மேடையை விட்டு இறங்கினார். அமீர், "நானும் அதைத்தான் சொல்கிறேன். என்னால் சாதியின் வலியை முழுமையாக உணரவே முடியாது. நீங்கள் அதற்கான வழியைச் சொன்னால், நாங்கள் முழுமையாக உங்களுடன் நிற்போம்" என்று பேச்சை முடித்தார். 

 

 


இந்தப் பேச்சைப் பார்த்தவர்களுக்கு மீண்டும் இருவருக்குமிடையே தொடர்ந்து கருத்து முரண் இருப்பது போலத் தோன்றியது. அமீர், தனது பேச்சில்  கடைசி வரை விளக்கம் அளித்தார். இதற்கு முன்னதாக 'விடுதலை சிறுத்தைகள்' வன்னியரசு பேசும்பொழுது அமீர், தன் படத்திற்கு வைத்திருக்கும் 'சந்தனத்தேவன்' என்ற பெயரை மாற்ற வேண்டுமென கூறினார்.    




 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.