Skip to main content

'சிட்டிசன்' பட பாணியில் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கும் சப்பாக்கம்!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

ddd

 

அஜித் நடித்த ‘சிட்டிசன்' திரைப்படத்தில் ‘அத்திப்பட்டி’ என்ற கிராமமே, இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதுபோல் இப்போது உண்மையிலேயே ஒரு கிராமம், கொஞ்சம் கொஞ்சமாக புதையுண்டு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்ற தகவல் நம்மை எட்டியது. அதிலும் சென்னைக்கு அருகிலேயே உள்ள கிராமம் காணாமல் போகிறது என்று அந்தத் தகவல் பயமுறுத்த, உடனடியாக ஸ்பாட்டை நோக்கி விரைந்தோம்.

 

சென்னையில் இருந்து இருபத்தைந்தாவது கி.மீ.யில் இருந்த காட்டுப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சப்பாக்கம் கிராமம்தான் பூமிக்குள் புதைந்து கொண்டிருக்கிறது என்று சொன்னதால், மீஞ்சூர் வழியாக கரடுமுரடான சாலையில் அங்கிருந்த அத்திபட்டு என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கிருந்து மண்சாலையில் இறங்க, வழி நெடுக சாம்பல் புழுதி வழியை மறைத்து பனிமூட்டம் போல் கிளம்பியிருந்தது.

 

ddd

 

காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட சப்பாக்கம் இருந்த இடம் முழுக்க சாம்பல் சாம்பல் சாம்பல்..! ஆள் நடமாட்டம் கூட அதிகம் இல்லை. ஒருபுறம் ஏரி போல் தண்ணீர் தேங்கியிருந்தது, மறுபுறம் நிலக்கரி சாம்பல் கொண்டு செல்லும் பைப், சாம்பல் கழிவுகளால் மாசடைந்திருந்தது.

 

அந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே புயலால் ஜல சமாதியான தனுஷ்கோடி போல, சாம்பல் கடலுக்குள் மூழ்கியதுபோல் காட்சியளித்தது. எதிர்ப்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் சேதுராமன் நம்மோடு சேர்ந்துகொண்டார். பெரும்பாலான வீடுகள் சிதிலமடைந்திருந்தன. ஊருக்குள் அழைத்துச் சென்ற சேதுராமன், "இதுதான் எங்கள் மக்கள் வசித்துவரும் காட்டுப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சப்பாக்கம் கிராமம். முப்பது வருடங்களுக்கு முன் இந்த பகுதியில் இருபோக விவசாயம் செய்து வந்தனர். 15 அடியில் அருமையான குடிநீர் கிடைத்துக்கொண்டு இருந்தது. சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் 1994ல் திறக்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலையத்தால், எல்லாம் தலைகீழாகி விட்டது. நாள் ஒன்றுக்கு 1830 மெகா வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்ட இந்த அனல் மின்நிலையத்துக்காக, கடல் வழியே எண்ணூர் துறைமுகத்திற்கு நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

 

ddd

 

பின்னர் அதன் சாம்பலை கடல் நீருடன் சேர்த்து பைப் மூலம் இந்த சப்பாக்கம் கிராமத்தில் சேமித்தார்கள். இதற்காக சுமார் 600 ஏக்கர் விளை நிலத்தைக் கையகப்படுத்தி, இந்த நிலக்கரி சாம்பல் கழிவுகளைத் தேக்கினர். இதை செயற்கைக் கல்லான செராமிக் கற்களைச் செய்வதற்காக அனுப்புகின்றனர். ஆனால் இந்த வேலைகளால் இந்தப் பகுதியின் காற்றே மாசடைந்துவிட்டது. குடிநீரும் நிலத்தடி நீரும்கூட வீணாகிவிட்டது. அதோடு சாம்பல் புழுதியில் பல வீடுகள் புதைந்துவிட்டன. பெரும்பாலான மக்களும் வெளியூர்களுக்கு ஓட்டம் பிடித்துவிட்டார்கள். இதனால் ஊர், ஊராக இல்லை. இந்த கெமிக்கல் சாம்பல் நம் உடம்பில் பட்டால், எரிச்சலும் தோல் பாதிப்பும் ஏற்படும். இது சுவாசக் கோளாறையும் ஏற்படுத்துகிறது. அதனால், இதற்குத் தீர்வு என்ன என்று தெரியாமல் தவிக்கிறோம்'' என்றார் கவலையாய்.

 

ஊர் இளைஞரான பிரசன்னாவோ, "இந்த ஊரின் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவவரான நடிகர் கமல்கூட இங்கே வந்து பார்த்துவிட்டுப் போனார். ஆனால் தீர்வுதான் இன்னும் கிடைக்கலை. எங்க ஊரின் பிரச்சினையால் இங்கே யாரும் பெண் கொடுக்கவோ எடுக்கவோ முன் வருவதில்லை. பக்கத்தில் பள்ளிக்கூட வசதிகள் கூட இல்லை. எந்த அரசியல்வாதியும் அதிகாரிகளும்கூட எங்களைப் பத்திக் கவலைப்படலை'' என்கிறார் கலக்கமாய்.

 

ddd

 

கிராம வாசியான வள்ளி நம்மிடம் "வீட்ட சுத்தி சாம்பல் குவியலா இருக்கு. துணி துவைத்துக் கூட காயப்போட முடியாது. எங்கப் பெண்ணை வெளியூர்ல கட்டிக் கொடுத்திருக்கோம். பேத்தி பிறந்திருக்கா. சாம்பலுக்குப் பயந்து, குழந்தையை இங்கே கூட்டிக்கிட்டே வர முடியலை. எங்கள் வாழ்வையே சாம்பல் புதைச்சிக்கிட்டு இருக்கு. எங்களைக் காப்பாத்தச் சொல்லி, எத்தனையோ போராட்டங்களை நடத்திட்டோம். எதுவும் நடக்கலை'' என்கிறார் விரக்தியாய்.

 

அந்தப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க. ஒ.செ.வான ரமேஷ்ராஜிடம் நிலைமையைத் தெரிவித்தோம். உடனே அவர், காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருடன் அங்கே விசிட் அடித்தார். தற்காலிகமாக, அதிகாரிகள் மூலம் அங்கிருந்த சாம்பல் குவியலைக் கொஞ்சம் அகற்றினர். தி.மு.க ஒ.செ.வான ரமேஷ் ராஜ் நம்மிடம், "இது தற்காலிக தீர்வுதான். தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சிதான் அமையும். அப்போது இதற்கு நிரந்தர தீர்வுக்கான திட்டம் தீட்டப்பட்டு, சாம்பல் ஆபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'' என்கிறார் நம்பிக்கையாய்.

 

மிச்சம் மீதி இருக்கும் வீடுகளும் சாம்பலுக்குள் புதைவதற்குள் அந்த கிராமத்தையும் அங்கிருக்கும் மக்களையும் அரசு மீட்குமா?

 

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.