Skip to main content

முதல்வர் பதவிக்கு ஆபத்து! தக்கவைத்துக்கொள்வாரா உத்தவ் தாக்கரே? 

Published on 22/04/2020 | Edited on 22/04/2020


தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்ட்ராவில் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார் சிவசேனா கட்சித் தலைவரும் முதல்வருமான உத்தவ் தாக்கரே! முதல்வர் பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சியாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒரு பதவியிலும் இல்லாதவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் இந்த இரண்டு பதவிகளில் ஒரு பதயிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில் அவரின் முதல்வர் பதவி பறிபோகும்!

 

Uddhav Thackeray


           

அந்த வகையில், கடந்த நவம்பர் 28-ம் தேதி மகாராஷ்ட்ராவின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட உத்தவ்தாக்கரே, எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லை. இதனால், இதனைப் பயன்படுத்தி உத்தவ்தாக்கரேவின் முதல்வர் பதவியைப் பறிக்க மத்திய மோடி அரசு திட்டமிடுவதாக மகாராஷ்ட்ரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. 
              

மே மாதம் 28-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி. யாகவோ உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், கரோனா தாக்கத்தால் எந்த ஒரு தேர்தலையும் நடத்தும் சூழல் இல்லை. இந்த நிலையில், எம்.எல்.ஏ.சிக்கான 8 இடங்கள் காலியாக இருக்கிறது. இதில், 2 நியமன எம்.எல்.சி.க்களும் அடங்கும். அந்த 2 நியமன எம்.எல்.சி.க்கள் பதவியும் மாநில கவர்னரால் பூர்த்தி செய்யப்படும். அந்த இடங்கள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.              

 

http://onelink.to/nknapp

 

இந்த நியமன எம்.எல்.சி.க்களில் முதல்வரும் கவர்னரும் இணைந்து ஆரோக்கியமான முடிவை எடுப்பதால், பெரும்பாலும் ஆளும் கட்சியின் சிபாரிசுகளை ஏற்று அந்த நியமன எம்.எல்.சி.க்களுக்கு கவர்னர் ஒப்புதலளிப்பது மரபு. அந்த வகையில், கவர்னால் நியமிக்கப்படும் நியமன எம்.எல்.சி. பதவியில் ஒரு இடத்தில் உத்தவ்தாக்கரேவை நியமிக்க வேண்டும் என சிவசேனா முடிவு செய்தது. அதற்கேற்ப, தாக்கரேவின் அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ’உத்தவ்தாக்கரேவை எம்.எல்.சி.யாக நியமிக்க வேண்டும்‘ என மகாராஷ்ட்ரா கவர்னர் பகத்சிங்கோஷ்யாரிக்கு சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது தாக்கரேயின் அமைச்சரவை. ஆனால், இது குறித்த முடிவை எடுக்காமல் கிடப்பில் வைத்திருக்கிறார் கவர்னர் பகத்சிங்!     

 

’’மகாராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்த கூட்டணி ஆட்சியின் முதல்வராகத் தற்போது இருக்கிறார் உத்தவ்தாக்கரே. பாஜக கூட்டணியில் தேர்தலைச் சந்தித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களின் எதிரிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியைக் கைப்பற்றி முதல்வராகியுள்ள தாக்கரே மீது, மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் கோபம் உண்டு. அது நீறுபூத்த நெருப்பாகவே இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. கவர்னரின் எம்.எல்.சி. நியமனம் மட்டுமே உத்தவ் தாக்கரேயின் முதல்வர் பதவியைத் தற்போதைய நெருக்கடியான சூழலில் பாதுகாக்க முடியும் என்பதால் தாக்கரே மீதிருக்கும் மோடி-அமீத்ஷாவுக்கான கோபம் தான், அமைச்சரவை பரிந்துரையில் எந்த முடிவையும் கவர்னர் எடுக்காமல் கிடப்பில் போட வைத்திருக்கிறது‘’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

 

bjp


தாக்கரேவை நியமிக்க அவரது அமைச்சரவையின் பரிந்துரையில் எந்த முடிவையும் எடுக்காமல் கவர்னர் காலதாமதம் செய்து வருவதால், அவர் மீது கடும் கோபமடைந்துள்ள சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள், ‘’தாக்கரேவுக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. அதில் கவர்னர் சிக்கக்கூடாது‘’ எனக் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், தன்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற சதி செய்வது யார்? பாஜகவா? அல்லது கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரா? என்கிற கேள்விகள் உத்தவ் தாக்கரேவை குடைந்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்களிடம் ஒரு கருத்து எதிரொலிக்கிறது. இதற்கிடையே, கவர்னரை வலியுறுத்தும் முயற்சியை சிவசேன தலைவர்கள் தொடர்ந்தபடி இருக்க, நியமன எம்.எல்.சி. விவகாரத்தில் டெல்லியின் முடிவுக்காகக் காத்திருக்கிறாராம் கவர்னர்.

 

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.