Skip to main content

சந்திரசூட்டின் பதவியேற்பும்; மோடி பங்கேற்காததும் - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

நாட்டின்  உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒன்று உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அளிக்கும் தீர்ப்புகள் சமூகத்தின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். இந்தப் பதவியை வகித்து வந்த யு.யு லலித்தின் பதவிக்காலம் கடந்த 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி. ஒய். சந்திரசூட் பதவியேற்றுக்கொண்டார். பல முக்கியமான வழக்குகளில் சமரசமில்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ள டி.ஒய் சந்திரசூட்டுக்கு தனது தந்தையின் தீர்ப்பில் முரண்பட்டு நீதியின் மகனாக நின்று தீர்ப்பை மாற்றி எழுதிய தனிச் சிறப்பும் உண்டு.  நீதியரசர் டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்பு இவரின் ஏனைய வழக்குகளின் தீர்ப்பும், இவர் பதவியேற்பில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வும் இந்தியாவில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

 

டி.ஒய். சந்திரசூட்டின் தந்தையான ஒய்.வி. சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1978 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் பதவி வகித்த இவரே, அதிக ஆண்டுக்காலம் இந்தப் பதவியிலிருந்த ஒரே நபர் என்ற சிறப்பைப் பெற்றவர். தற்போது அந்தப் பதவியில் இவரது மகன் டி .ஒய் சந்திரசூட் அமர்ந்துள்ளார். இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் அமர்வது இதுவே முதல் முறை என்ற வரலாறும்  உருவாகியுள்ளது. 

 

யார் இந்த டி.ஒய். சந்திரசூட் ?

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

மும்பையில் கடந்த 1959 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்த டி.ஒய். சந்திரசூட், டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளியலில் (ஹானர்ஸ்) இளநிலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர்,  அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப் படிப்பை முடித்தார். 

 

அதன்பிறகு உச்சநீதிமன்றத்திலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட் ,1998-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியிருக்கிறார்.  2000 ஆம் ஆண்டு  மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, 2013 ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 2016 ல்  உச்சநீதிமன்ற நீதிபதியாக அடுத்தடுத்து பதவிகளை வகித்து வந்த டி.ஒய். சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

 

முக்கிய வழக்குகளும்; முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளும் 

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம்; தன் பாலின சேர்க்கை குற்றமல்ல; பாலியல் தொழில், பெண்கள் கருக்கலைப்பு உரிமை, ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில்  தீர்ப்பு வழங்கிய அமர்வில் டி.ஒய் சந்திரசூட் இடம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல்  அரசியலமைப்பு படி ஆதார் எண் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது, அதை அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த டி.ஒய் சந்திரசூட் மட்டும் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆதார் எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார். 

 

தந்தையின் தீர்ப்பில் முரண்; மாற்றி எழுதிய டி.ஒய் சந்திரசூட்

 

chief justice dy chandrachud oath ceremony controversy
ஒய்.வி. சந்திரசூட் - டி.ஒய் சந்திரசூட்

 

இந்தியாவில் 1975ல் இருந்து 77 வரை அவசரக் காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில், அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் உட்படத் தவறாகவும், சட்ட விரோதமாகவும் பலர் சிறை வைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 76ம் ஆண்டு விசாரணையிலிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘அவசரக் காலத்தில் யாராவது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அது தவறானதாகவோ, சட்ட விரோதமாகவோ இருந்தாலும் கூட அதை எதிர்த்து எந்த உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது’ எனத் தீர்ப்பு அளித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில் டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட்டும் ஒருவர். 

 

இந்தத் தீர்ப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு தனிமனித உரிமைகள் தொடர்பான ஒரு வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. அந்த அமர்வில் ஒய்.வி சந்திரசூட்டின் மகன்  டி.ஒய். சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். 

 

திருமணமான பெண்ணுடன் தகாத உறவுகொள்ளும் ஆண்களைக் குற்றவாளியாக அறிவித்து 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு செல்லுபடியாகும் என 1985 ஆம் ஆண்டு  நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தீர்ப்பளிக்க, ‘இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நம்முடைய தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அந்தச் சட்டம் பெண்களின் ஆணாதிக்கக் குறியீடு’ எனக் கூறி அதனை  ஒய்.வி. சந்திரசூட்டின் மகன் டி.ஒய். சந்திரசூட் ரத்து செய்தார்.

 

டி.ஒய் சந்திரசூட்டின் பதவியேற்பும்; மோடி பங்கேற்காததும் 

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் முதல் யு.யு லலித் வரை தலைமை நீதிபதிகளின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் டி.ஒய் சந்திரசூட்டின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, "எனக்குக் கிடைத்த தகவலின்படி இன்று (9ம் தேதி) ராஷ்டிரபதி பவனில் நடந்த தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்காதது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பாரதிய சன்மார்க்கத்துக்கும் எதிரான அவமானம் என்று முடிவு செய்கிறேன். இதற்காக மோடி விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காத வரை அவரது இந்தச் செயல் வருந்தத்தக்கது" என ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். 

 

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை மத்திய பாஜக அரசு விமரிசையாகக் கொண்டாடி வரும் வேளையில், நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட அனைத்துத் தரப்பு மக்களாலும் நம்பிக்கை பெற்றுள்ள உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளாததும் பாஜக மூத்த தலைவர் ஒருவரே அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்று பதிவிட்டிருப்பதும் அரசியலிலும், சமூகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

'என்னாது எண்ணி முடிக்க இவ்வளவு நாள் ஆகுமா?' -நீதிமன்றம் சொன்ன பதில்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதி வருடத்திற்கு கொண்டு வந்த பொழுது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்படுகிறது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிக்கப்பட்டது.

nn

இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், 'இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 என்ற தொகுதிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது' என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில், 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்' என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.