Skip to main content

அதிருப்தி அளித்த 8 வழிச்சாலை தீர்ப்பு! விவசாயிகள் கொந்தளிப்பு!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Chennai salem expressway supreme court order and farmers reaction

 

சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்ட வழக்கில், ''ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்'' என்ற கணக்காக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், டெல்லியைத் தொடர்ந்து தமிழக்திலும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. 

 

மத்திய பாஜக அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் பட்ஜெட், 10 ஆயிரம் கோடி ரூபாய். இத்திட்டம், சேலத்தில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாகச் சென்னையில் முடிகிறது. இந்த சாலையின் மொத்த நீளம்  277.3 கி.மீ. எடப்பாடி பழனிசாமி அரசு, இத்திட்டத்துக்காக 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டியது. 

 

இந்த சாலைக்காகக் கையகப்படுத்தப்படும் நிலங்களில் 80 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்கள். எட்டுவழிச்சாலை வந்தால், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 லட்சம் மரங்கள் அழிக்கப்படும். 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழக்க நேரிடும். சேலம் கஞ்சமலை, திருவண்ணாமலையில் உள்ள கவுந்தி மலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் தொடக்கத்தில் இருந்தே இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

வெட்டப்படும் தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என ஆசை வலை விரித்தும் விவசாயிகள் கொஞ்சமும் இறங்கி வரவில்லை. ஏற்கனவே, அதிமுக அரசு, சேலம் - உளுந்தூர்பேட்டை சாலைக்காக நிலம் வழங்கிய மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமையான இழப்பீடு தராமல் வஞ்சித்து இருந்தது. இதையெல்லாம் யோசித்த விவசாயிகள், கடந்த 2018ம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

இந்த எதிர்ப்புகளுக்கு இடையே, விளைநிலங்களுக்குள் பூட்ஸ் கால்களுடன் போலீசாரை இறக்கி, நிலத்தை அளந்து, முட்டுக்கல் நட்டனர் வருவாய்த்துறையினர். திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் விவசாயிகள். கடந்த 2019 ஏப்ரல் 8ம் தேதி, ''8 வழிச்சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்திய நடைமுறை தவறு என்றும், கையகப்படுத்திய நிலத்தை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும், இதற்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

 

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இருதரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், 2020 டிச. 8ம் தேதி இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

''எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை இல்லை. ஆனால், முந்தைய அறிவிக்கை அடிப்படையில் நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும். மீண்டும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு இத்திட்டத்தைத் தொடரலாம். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் துறையிடம் முன்னனுமதி பெறாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. 

 

இத்திட்டத்தைச் செயல்படுத்த உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம், மத்திய அரசுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும் எட்டுவழிச்சாலை போடும் அதிகாரம் இருக்கிறது,'' என்று தீர்ப்புரையில் கூறியிருந்தது.

 

தீர்ப்பின் முழு விவரம் வருவதற்கு முன்பே, எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்குத் தடை என்று டிவி சேனல்களில் செய்திகள் வெளியானதால், சேலத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேரம் போகப்போகத் திட்டத்தை, புதிய வழிகாட்டுதல் படி செயல்படுத்தலாம் என்ற தகவல் பரவியதால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

 

சேலம் ராமலிங்கபுரத்தில் ஒன்றுகூடிய 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது என்றும், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதற்கிடையே, கியூ பிரிவு, காவல்துறை தனிப்பிரிவு, எஸ்பிசிஐடி உள்ளிட்ட அனைத்து உளவுப்பிரிவு காவல்துறையினரும் வாகனங்களுடன் வந்திறங்கவும், அங்கு மேலும் டென்ஷன் எகிறியது. 

 

எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் குப்பனூர் நாராயணன், சிவகாமி, கவிதா, மோகனசுந்தரம், குப்புசாமி ஆகியோர் பேசினர்.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                    குப்பனூர் நாராயணன்

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மத்திய, மாநில அரசுகளுக்குச் சாதகமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை - 2020 (இஐஏ - 2020), ஒரு திட்டம் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறத்தேவை இல்லை என்று கூறுகிறது. இந்த அறிவிக்கை, இன்னும் சட்டமாகவில்லை. இப்போது வந்துள்ள தீர்ப்பானது, மத்திய அரசுக்கு இஐஏ - 2020 அறிவிக்கையைச் சட்டமாக்கிவிட்டு, அதன்பிறகு புதிய அறிவிக்கை வெளியிட்டு எட்டுவழிச்சாலை போடுங்கள் என மறைமுகமாகச் சொல்வது போல் இருக்கிறது.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                                குப்புசாமி

 

உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்துதான் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைகிறது எனில் நாங்களே முன்வந்து எங்கள் நிலத்தைத் தர தயாராக இருக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் கொள்ளை அடிக்கவும், கஞ்சமலையில் இருக்கும் இரும்பு உள்ளிட்ட கனிம வளங்களைத் தனியார் கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கவும்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வர துடிக்கிறார்கள. இந்த திட்டத்துக்காக எங்கள் நிலத்தை ஒரு அடிகூட விட்டுத்தர மாட்டோம். 

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                        மோகனசுந்தரம்

 

கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் போலீசார் எத்தனையோ பொய் வழக்குகளைப் போட்டு, கைது செய்துள்ளனர். போலீசார், வருவாய்த்துறையினர் டார்ச்சரால் மன உளைச்சல் ஏற்பட்டு பல விவசாயிகள் மாரடைப்பில் உயிரிழந்துள்ளனர். இறந்து போன விவசாயிகளின் குடும்பத்தினருக்கு என்ன  இழப்பீடு கொடுத்தாலும் ஈடுகட்ட முடியுமா?

 

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கின்றன. அந்த வழியாக எட்டுவழிச்சாலை போடலாமே? மலையைக் குடைந்து, இயற்கையை அழித்து எட்டுவழி என்ற பெயரில் பசுமைவழி விரைவுச்சாலை தேவை இல்லை. இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விரைவில் டெல்லியில் விவசாயிகள் நடத்துவதைப் போல சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். எங்கள் மண்ணுக்காக நாங்கள் தற்கொலை போராட்டத்தில் இறங்கவும் தயாராக இருக்கிறோம்,'' என்றனர்.

 

தீர்ப்பின் உள்ளடக்கம் குறித்து பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலுவிடம் கேட்டோம்.

 

Chennai salem expressway supreme court order and farmers reaction
                                                   வழக்கறிஞர் பாலு          

 

''அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது தவறு என்கிறது உச்சநீதிமன்றம். நெடுஞ்சாலைத்துறைக்குச் சாலைகள் அமைக்க அதிகாரம் இருக்கிறது. அதேவேளையில், விவசாயிகள் பெயரில் இருக்கும் நிலத்தை அரசுக்கு வகை மாற்றம் செய்ததையும், அதில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இப்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 

 

சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பிறகுதான் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் அப்போது எட்டுவழிச்சாலை வழக்கில் தீர்ப்பு அளித்தது. ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம், திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகும், இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும். அந்த அனுமதி சரியாக வழங்கப்பட்டு உள்ளதா என்பதை இப்போது நாங்கள் ஆய்வு செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

 

ஒருவேளை, எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்தாலும், நிலத்தை வகை மாற்றம் செய்ய உரிய விதிகள் பின்பற்றப்படாமல் போனாலும் கூட அதை எதிர்த்து நாம் வழக்கு தொடரலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்த திட்டமே தேவை இல்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு. 

 

சேலத்திலிருந்து சென்னை செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடங்கள் இருக்கும்போது புதிய வழித்தடத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டம் தேவையில்லை. இதற்கான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்படவில்லை. விளை நிலங்களைக் கையகப்படுத்தும் இப்படியொரு திட்டம் தேவையில்லாதது. மதுரை - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம்தான் ஆரம்பத்திலிருந்தது. அதை மாற்றித்தான் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையாக மாற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து போராடுவோம். 

 

உயர்நீதிமன்ற தீர்ப்பைப் பகுதியாக நீக்கம் செய்து, ஒரு பகுதியை உறுதி செய்திருக்கிறது, உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழலில், இப்படியொரு தீர்ப்பை அறிவித்து இருப்பது வினோதமாக இருக்கிறது. இப்போது ஒரு திட்டம் நிறைவேறுவதற்கு எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்குச் சட்டங்களின் அழுத்தம் நீர்த்துப் போய்க்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது,'' என்கிறார் வழக்கறிஞர் பாலு.

 

விவசாயிகளை மீண்டும் போராட்டக்களத்திற்கு அழைத்திருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

 


 

Next Story

‘பதஞ்சலியின் மன்னிப்பை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Supreme Court condemns on Patanjali's apology needs to be looked at with a lens

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (23-04-24) நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.