Skip to main content

கோயம்பேடு மார்க்கெட்டை மிரட்டும் அட்ராசிட்டி போலீஸ்! கரோனாவெல்லாம் இவருக்கு ஜுஜூபி!

Published on 04/05/2020 | Edited on 04/05/2020

 

chennai koyambedu market police coronaviorus lockdown


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. அங்கு வந்து சென்றவர்கள், அவர்களைச் சந்தித்தவர்கள் என நாளுக்குநாள் கோவிட்-19 பாசிட்டிவ் அட்மிஷன்கள் குவிகின்றன. ஆனால், கரோனாவுக்கு முன்பாகவே, அந்தப் பகுதியை ஒரு மோசமான வைரஸ் ஆட்டிப்படைப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. 
 

அப்படி என்னதான் நடக்கிறது. அந்த வைரஸ் யார்? அவர் செய்துவரும் சேட்டைகள் என்னென்ன… நமது சிறப்புப் புலனாய்வு நிருபர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த விஷயங்கள் இதோ… சென்னை கோயம்பேடு மார்க்கெட், இந்த போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டிற்குள்தான் வருகிறது. இங்கு ரைட்டராக இருப்பவர்தான் அந்த வைரஸ். ஊரடங்கு கெடுபிடியால் அத்தியாவசியத் தேவைக்கு வெளியில் வருபவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வது காவல்நிலையங்களின் வாடிக்கை. கரோனா காலம் முடிந்தபிறகு சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கையோ, அதை நீதியரசரே எடுப்பார். ஆனால், நமது ரைட்டரை தனியாக கவனித்தாலே வாகனம் கிடைத்துவிடும் என்கிறார்கள். 
 

chennai koyambedu market police coronaviorus lockdown


சட்டமாவது நீதியாவது என்று உத்தம வாழ்வு வாழும் இந்த ரைட்டர், தனது எடுபிடியான அந்த முதல்நிலை காவலரை வைத்துக்கொண்டு எல்லா தில்லுமுல்லு வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும், அந்தக் காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளருக்கும், உதவி ஆய்வாளர்களுக்கும் இது தெரியாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 

ஏற்கனவே கோயம்பேடு மார்க்கெட் கரோனா ஹாட்ஸ்பாட்டாக வாய்ப்பிருப்பதாக, பல நாட்களுக்கு முன்பே நக்கீரன் எச்சரித்தது. ஆனால், இந்தப் பகுதியைக் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ரைட்டர், மார்க்கெட்டுக்கு உள்ளே செல்பவர்களுக்குச் சகட்டுமேனிக்கு அனுமதிச்சீட்டு கொடுத்திருக்கிறார். ஒருவேளை அப்படி அனுமதிச்சீட்டு இல்லாமல் யாராவது வந்தால், அவர்களைச் சோதனை செய்யும் காவலர்களே நேராக ரைட்டரிடம் அனுப்பி வைக்கிறார்கள். அவசரகதியில் மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு, பாஸ் வந்தால் போதுமென்று நினைப்பதால் ரைட்டரின் பாக்கெட் பக்காவாக நிரம்பியிருக்கிறது.
 

மேலும், மார்க்கெட்டில் கரோனா நெருக்கடியைக் காரணம்காட்டி, அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகளை மட்டுமே திறக்க அனுமதி உள்ளது. பூ மார்க்கெட் அத்தியாவசியப் பொருட்கள் லிஸ்டில் வராததால், அதைத் திறக்க அனுமதியில்லை. ஆனால், ரைட்டரை தனியாக வீட்டில் சந்தித்து கவனித்தவர்கள், தாராளமாக அடுத்த நாள் கடை திறக்கலாமாம். பூ மார்க்கெட்டில் இருந்தே, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கரோனா தன் கணக்கைத் தொடங்கியது என்பதை, இங்கே நினைவுப்படுத்துகிறோம். இந்த ஊரடங்கு நேரத்தில், மற்ற காவல்நிலைய ரைட்டரெல்லாம் மாமூல் கிடைக்காமல் திண்டாடும் நேரத்தில், ரைட்டர் மட்டும் கொலைக் குத்தாட்டம் போடுகிறார் என்றால், சாதாரண நாட்களில் எந்தெந்த ஸ்டைலில் ஸ்டெப் போட்டிருப்பார். கொஞ்சம் ஆராய்ந்ததற்கே, தலை சுற்றியது. 
 

chennai koyambedu market police coronaviorus lockdown


கோயம்பேடு இன்னோவா பெட்ரோல் வாகனத்தில் அலுவலில் இருப்பவர்கள், தினமும் டியூட்டி முடிந்து செல்லும்போது, ரூ.500 கட்டாயம் ரைட்டருக்கு படியளந்தாக வேண்டும். கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரி அப்படியே தூக்கியடிக்கப்படுவார். அந்த ஸ்டேஷனின் எல்லைக்கு உட்பட்ட எட்டு டாஸ்மாக் பார்களின் உரிமையாளர்கள், கடைக்கு ரூ. 3 ஆயிரம் வீதம், ஒவ்வொரு மாதமும் கப்பம்கட்ட வேண்டுமாம். நெற்குன்றத்தில் திருட்டு மணல் விற்பனை செய்யும் கும்பல்கள், லாரிக்கு ரூ.3 ஆயிரம் என ஆறு லாரிகளுக்கு மாமூல் வெட்ட வேண்டுமாம். தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், மாவா, கஞ்சா போன்றவை மார்க்கெட்டில் கொடிகட்டிப் பறக்க, தனியாக மாதம் ரூ.40 ஆயிரம் ரைட்டருக்கு சென்றுவிடுமாம். இப்படி மாமூல் மட்டுமே ஒரு லட்சம் தேறும் என்கிறார்கள்.

இவ்வளவு சேட்டைகள் செய்கிறாரே, அந்த ரைட்டர்… ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இதையெல்லாம் கண்டிக்க மாட்டாரா? என்று நீங்கள் நினைப்பது சரிதான். அந்த இன்ஸ்பெக்டர் சிங்கிள் டீ குடித்தால் கூட, சொந்தக்காசை செலவு செய்கிறவர். இதுவே, ரைட்டரும், அவரது எடுபிடியான முதல்நிலைக் காவலரும் கொள்ளை அடிப்பதற்கு போதுமானதாக இருந்தது என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டரின் பெயரைப் பயன்படுத்தியே கலெக்ஷனைக் கச்சிதமாக முடிப்பதில்தான், இருவரின் சாமர்த்தியமும் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp


அந்த ஸ்டேஷனின் உளவுப்பிரிவு கூட மேலதிகாரிகளுக்கு இந்த விஷயங்களைப் போட்டுக் கொடுப்பதில்லை என்பது கசப்பான உண்மை. காரணம், இந்தக் கொள்ளையில் கேள்வி கேட்காத அளவுக்கு அவர்களுக்குக் கணிசமான பங்கு கிடைக்கிறதாம். அதுபோக, அவர்களைப் பற்றி மாட்டிக்கொடுக்க முயற்சித்தாலே, தவறாகச் சொல்லிக்கொடுத்து தூக்கியடிப்பதில் கில்லாடியாம் இந்த ரைட்டர். எனவே, நமக்கேன் வம்பு? நம்ம வண்டி நல்லா ஓடினா போதுமென்று, ரைட்டரை வெயிட்டாக கவனித்து கைக்குள் வைத்துக் கொள்வார்களாம்.

கரோனா இல்லை அதோட தாத்தாவே வந்தாலும், இந்த வைரஸை அடிச்சிக்க முடியாது என்று, ரைட்டரின் அட்ராசிட்டியை எண்ணி கோயம்பேடு மார்க்கெட்வாசிகள் புலம்புகிறார்கள். நாணயத்துக்காக வேலைபார்க்கும் இதுபோன்ற ரைட்டர்களால், நாணயமாக வேலைசெய்யும் அதிகாரிகளின் பெயரும் சேர்ந்தே கெடுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார். 

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.