கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்த இந்த மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. கடந்த 19ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

Advertisment

இந்த 12 நாளில் வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றும் (28.06.2020) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னையில் சைதாப்பேட்டை, ஆலந்தூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கடந்த முறை போலவே இந்த தடவையும் பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம். தேவையில்லாமல் சாலைகளில் நடமாட வேண்டாம். மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்களில் வேலை செய்வோர், பத்திரிகையாளர்கள் போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. அவர்கள் உரிய அடையாள அட்டையோடு பயணம் செய்யலாம். அதேவேளை அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் சாலையில் சுற்றுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த முறை தீவிர ஊரடங்கின்போது கடைபிடிக்கப்பட்ட கட்டுபாடுகளே இந்த தடவையும் தொடரும் என தெரிவித்திருக்கிறார்.

Advertisment