Skip to main content

சென்னை: 144 நடைமுறைக்கு வந்த முதல் ஒரு மணி நேரம்

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

 

      

வணிக நிறுவனங்கள் பலவும் காலையிலேயே ஊரடங்கு மனநிலைக்கு வந்துவிட்டன. வெளியூரிலிருந்து வேலை பார்த்தவர்கள் நேற்றிரவிலிருந்தே கோயம்பேடு, பெருங்களத்தூர் எனக் குவிந்து விட்டனர். காலையிலிருந்தே மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சேவை குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, 144 நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே சென்னை தன்னை அதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டது. டாஸ்மாக் மட்டும் தனது கடைசி நொடி வரை பரபரப்பாகி பிறகு அமைதியானது.

      

Chennai



மாலை 6 மணிக்கு 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வந்தபிறகு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து இல்லை. சென்னையின் அடையாளமான ஆட்டோ-ஷேர் ஆட்டோ ஆகியவையும் இயங்கவில்லை. படபட சத்தத்துடன் செல்லும் எங்கள் புள்ளீங்கோவின் டூவீலர்களையும் தேட வேண்டியுள்ளது. மாநகரப் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபடி, மக்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

      

உணவுப்பொருள்கள், காய்கறி, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்கள் விற்பனையகங்கள்  திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மெடிக்கல்  ஷாப் தவிர மற்ற இடங்களில் கடையின் பெயர்ப்பலகை விளக்குகள் எரியவில்லை. மளிகை கடைகளில் கல்லா அருகே மட்டும் லைட் எரிகிறது. ஜாம்பஜார், ஆதம் மார்க்கெட், திருவல்லிக்கேணி மார்க்கெட் ஆகிய இடங்களில் போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்டதும் காய்கறிக் கடைகளின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

     

Chennai



அத்தியாவசியப் பொருட்கள் கடைகளைத் திறந்திருந்தாலும் அங்கே கூட்டமாக மக்கள் நின்றால், கொரோனா ஆபத்துக்கு வழி வகுத்துவிடும் என்பதால் இரவு நேரங்களில் வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே போலீஸ் ரோந்தின் நோக்கமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் மாஸ்க் அணிந்தபடி வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

      

ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டும் விற்பனை செய்யலாம் எனச் சொல்லப்பட்டிருந்தாலும், பெரிய ஹோட்டல்கள் பலவும் அடைக்கப்பட்டுள்ளன. மெஸ், வீட்டுச்சமையல் வகை உணவகங்களில் பார்சல் வாங்கிச் செல்கிறார்கள். டீக்கடைகளும் பெருமளவு மூடப்பட்டுள்ளன. தள்ளுவண்டியில் பழம் விற்பனை செய்பவர்களை மெயின் ரோட்டில் விற்காமல் பக்கத்தில் உள்ள சந்தில் நிறுத்துமாறு போலீஸ் வாகனங்களிலிருந்து அதட்டல் குரல்கள் ஒலிக்கின்றன.

      

Chennai



முதல் ஒரு மணி நேரத்தில், சென்னை தன்னை 144க்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனிடையே நாட்டு மக்களிடம் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்கள் இந்தியா முடக்கம். கொரோனா ஆபத்திலிருந்து பாதுகாக்க வேறு வழி இல்லை என கூறியிருக்கிறார். ஓப்பனிங் நன்றாகவே உள்ளது ஃபினிஷிங்கின் பலனை அறிய பொறுத்திருப்போம்.

 

 

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.