Skip to main content

செல்ஃபோன் டவர் வர்றதுக்கு முன்னாடியே சிட்டுக்குருவியை அழிக்க ஆரம்பிச்சுட்டோம்!- சென்னை பறவை மனிதர் சேகர் 

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

சமீபத்தில் 2.0 படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்பட்டுள்ளதோ அதே அளவிற்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் பக்‌ஷி ராஜன் கதாபாத்திரமும் பேசப்பட்டது. பறவைகளின் மீது காதல் கொண்டவராக நடித்து அசத்தியிருந்தார். மேலும் இந்த படத்தின் மையக்கருத்து என்ன என்றால் செல்ஃபோன் டவர்களிலிருந்து வெளியாகும் கதீர்வீச்சினால் சிட்டுக்குருவி இனங்கள் அழிந்துகொண்டு வருகிறது என்பதுதான். மனிதர்கள் வாழ்வதற்கு பறவைகள் மிகவும் முக்கியாமனது என்ற கருத்தை இப்படத்தில் இயக்குனர் ஷங்கர் பதிவு செய்திருந்தார். இதனை அடுத்து சென்னையில் வசிக்கும் பறவை காதலலான சேகரிடம் சந்தித்து பேசினோம். அப்போது அவர் பறவைகளை பற்றியும், இந்த படத்தின் கருத்தை பற்றியும் பகிர்ந்தது.
 

sekar

 

 

“நான் இதுவரை 2.0 படத்தை பார்க்கவில்லை, ஆனால் கேள்விப்பட்ட வரையில் பலர் செல்ஃபோன் டவரினால்தான் சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டதாக சொல்கின்றனர். ஆனால், செல்ஃபோன் டவர் வருவதற்கு முன்பே நாம் சிட்டுக்குருவிகளை அழிக்க தொடங்கிவிட்டோம். 20 வருடத்திற்கு முன்பு இந்த வீட்டின் ஜன்னல்களில் அமருவதற்கு என்று பல சிட்டுக்குருவிகள் வரும். பின்னர், பல சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டது. செல்ஃபோன் டவர்கள் நடுவதற்கு 15 வருடங்கள் முன்பே சிட்டுக்குருவிகள் அழிய தொடங்கிவிட்டன. டவர் வருவதற்கு முன்பாகவே இயற்கை சார்ந்தவைகளை நாம் ஆழிக்க தொடங்கிவிட்டோம், மரங்களை வெட்டிவிட்டோம், ஏரி குளங்களை ஆக்கரமிப்பு செய்துவிட்டோம். பிறகு எவ்வாறு பறவைகளுக்கு நீர் கிடைக்கும், தங்குவதற்கு இடம் கிடைக்கும்.  பறவைகளின் வாழ்வாதாரமே மரங்கள்தான். அந்த காலத்தில் நம் வீடுகளில் அரிசி புடைக்கும்போது, வரும் நொய்களை அப்படியே தரையில் போட்டுவிடுவார்கள். அதை பறவைகள் வந்து சாப்பிடும், நான் என்னுடைய சிறு வயதில் இதுபோன்று பல பார்த்திருக்கிறேன். ஆனால், தற்போது நாம் அனைவரும் நவீனத்திற்கு மாறிவிட்டோம். அவ்வாறு நவீனத்திற்கு போக... போக அழிவுதான். நவீனத்தில் நமக்கு தேவையும் இருக்கிறது. அதேபோல அதில் அழிவும் உள்ளது. 

 

25 வருடங்களுக்கு முன்பு சென்னையை சுற்றி பல மரங்கள் இருக்கும். மாதாவரம் பால் பண்ணை அருகில் அப்போது செல்கையில் மரங்களும், ஏரிகளுமாக இருந்தது. ஆனால், தற்போது அங்கு இருந்த மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வீடுகளால் சூழப்பட்டுள்ளது. மரங்கள்தான் பறவைகளின் வாழ்வாதாரம், அதில்தான் அவை தங்கும், பறவைகள் அதில் கிடைக்கின்ற பழங்களைதான் உணவாக சாப்பிடுகின்றன. தற்போது மரங்கள் இருக்கும் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் இருக்க இடம், உண்ண உணவு இன்றி பறவைகள் தவிக்கின்றன. என் இடத்திற்கு தினசரி நான்காயிரம் ஐயாயிரம் கிளிகள் வருகிறது என்றால் ஏன் வருகிறது என்று பாருங்கள்... காரணம் அவைகளுக்கு சரியான உணவு இல்லை அதனால்தான் இந்த இடத்திற்கு வருகின்றன. பறவைகளுக்கு உணவு தரக்கூடிய மரங்களை அழித்துவிட்டோம். பறவைகளுக்கு சரியான உணவு கிடைத்தால் இந்த இடத்திற்கு வரவே வராது. ஆனால், நாமோ அவற்றிற்கு உணவு அளிக்கும் மரங்களை அழித்துவிட்டோம், இங்கு மட்டுமில்லை எல்லா இடத்திலும் பறவைகளுக்கு உணவு தருகின்ற மரங்களை அழித்து வருகிறோம். 
 

parrots


தற்போது செல்ஃபோன் டவர்களின் கதீர்வீச்சுகளை பற்றி பார்த்தால், அது மனிதர்களாகிய நமக்கும் பிரச்சனை தரக்கூடியதுதான். அதனால் கேன்சர் போன்ற பாதிப்பு வரும் என்கிறார்கள். அளவிற்கு மீறீனால் அமிர்தமும் விஷம் என்கிறார்கள். அதுபோல டவரில் இருந்து வரும் கதீர்வீச்சு 2.0 அளவுக்குள்தான் இருக்க வேண்டும். ஆனால், நம் ஊர்களில் இருந்து வரும் அலைவரிசைகளில் 4.5 இருக்கிறது. முன்பெல்லாம் அலைவரிசைகளை அரசாங்கம் பார்த்துகொண்டது. எப்போது அது தனியாருக்கு விற்கப்பட்டதோ, இது போட்டியாக மாறியது. நகர்புறத்தில் அருகருகே 10 டவர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் அது பாதிப்பைதான் ஏற்படுத்தும், அதுவும் ஸ்லோ பாய்ஸன் போன்றது. பறவைகளும் அந்த கதீர்வீச்சால் உடனடியாக இறந்துவிடாது. அதன் லைஃப் குறைந்துவிடும். நம்முடைய வாழ்க்கையிலும் எதோ ஒரு கட்டத்தில் இதனால் நோய் தாக்குதல் ஏற்படும். இப்பொழுது நாம் செல்போனை எல்லாம் விடமுடியாத அளவு சென்றுவிட்டதால் அதை உணர்த்த இப்படியொரு படம் எடுத்திருக்கலாம்.


 

சிலர் பறவைகளை அழகிற்காக வளர்க்கிறார்கள். அது மிகவும் தவறான ஒன்று. பறவைகள் மிகவும் வேகமானது. அது வீட்டில் வைத்து வளர்க்க தகுந்தவை அல்ல. கிளிகளை எல்லாம் வீட்டில் வளர்க்கவே கூடாது. அப்படி வளர்ப்பதற்காக அதன் இறகுகளை வெட்டி வளர்க்கின்றனர். சிலர் குழந்தைகளுக்கு விளையாடுவதற்காக வாங்கி தந்ததாகவும் கூறுகின்றனர். விளையாடும் பொருளா ஒரு உயிர். நம் குழந்தைகளை சிங்கத்திடம் விளையாட கொடுப்போமா. சிலரிடம் இருந்து பாதிக்கப்பட்ட கிளிகளை வாங்கி இங்கே எனது வீட்டிலுள்ள கூண்டுகளில் வைத்து பராமறித்து, பின்னர் அவைகள் நலமானவுடன் இங்கு வந்து உணவு சாப்பிடும் கிளிகளுடன் சேர்த்து அணுப்பிவிடுவேன்” என்றார்.  


 

 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.