Skip to main content

 சார்லி சாப்ளின் பேசிய அரசியல்... சிரிப்பு நாயகனின் நெருப்புப் பக்கம்!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

'உங்களுக்குத் தெரிந்த ஆங்கில நடிகர், கருப்பு வெள்ளை சினிமா காலத்து நடிகர் யார்?' என்று கேட்டால் கண்டிப்பாக கிராமத்திலிருந்து நகரம் வரை சார்லி சாப்ளின் என்று சொல்லிவிடுவார்கள். அவர் உருவத்தில், வாழ்ந்ததில் மட்டும் தான் ஆங்கிலேய நடிகர், மற்றபடி அவர் நடித்த படங்கள் எல்லாம் ஆங்கில மொழி சார்ந்தவை அல்ல, எந்த ஒரு தனி மொழிக்குமானது அல்ல. சினிமாவின் கலைநயத்தை காட்சிகளின் மூலம் மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த பலரில் இந்த சார்லியும் ஒருவர். அவர் பிறந்தது லண்டனாக இருக்கலாம், வளர்ந்தது அமெரிக்காவாக இருக்கலாம், இறந்தது சுவிட்சர் லேண்டாக இருக்கலாம். ஆனால் அவரின் படங்கள் உலக மக்கள் அனைவருக்குமே சொந்தமானது. இந்த எளிமையான மனிதரை பற்றி இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் இருபதாம் நூற்றாண்டின் குழந்தைகளின் நாயகன்.
 

charl

 

 

நாயகன் தான், அதுவும் காமெடி நாயகன். ரசிகர்கள் எண்ணிக்கையில் தற்போதிருக்கும் அதிரடி நாயகர்களையெல்லாம்  மிஞ்சக் கூடியவர். 'விழுந்து விழுந்து சிரிப்பது' என்பது இவரது படங்களைப் பார்த்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு இவரது  படங்களைப் பார்க்கும்போது கஷ்டங்கள் யாவும் பறந்து போகும். நம்மையெல்லாம் இவ்வளவு சிரிக்க வைத்திருக்கிறாரே? அப்போது இவரது வாழ்வில் எத்தனை நகைச்சுவை சம்பவங்கள் இருந்திருக்கும், இவரது வாழ்க்கையே சிரிப்பும் களிப்புமாக இருந்திருக்குமென்று நமக்கெல்லாம் தோன்றும். உண்மையில் சார்லியின் ஆரம்பகட்ட வாழ்க்கை சோகம் மட்டுமே கொண்டது. அவரது அப்பா குடித்துக் குடித்து மடிந்தவர். அவரது அம்மா வாழ்க்கையை இழந்த துயரத்தில் மன அழுத்தத்தால் மெண்டல் அஸைலம் என்று சொல்லப்படும் மனநல காப்பகத்துக்கு அனுப்பப்பட்டவர். இதன் காரணமாக 18 மாதங்கள் வரை அனாதை ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கிறார் சார்லி. தனது எட்டாவது வயதிலேயே இயற்கையாக தனக்குள் இருக்கும் நடிப்புத்  திறமையை உணர்ந்தாரோ என்னவோ ஒரு சின்ன நாடகக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். படிப் படியாக உயர்ந்து நாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் என்ற அந்தஸ்துகளை சம்பாரித்தார்.
 

மேலே சொல்லப்பட்ட எந்த விஷயத்தினாலும், அவருக்கு இந்த காமெடி (நகைச்சுவை) என்ற ஒன்று அறிமுகம் ஆகியிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஒன்றே ஒன்று மக்களுக்கு எந்த ஒரு சோகத்தையும், கருத்தையும் நகைச்சுவையுடன் சொன்னால் தான் பொறுத்திருந்து பார்ப்பார்கள், கவனிப்பார்கள் என்று அறிந்திருந்தார். சார்லி சாப்ளினின் பேட்டி ஒன்றில் தன்னை பாதித்த சம்பவம் என்று அவர் சொல்வது இதுதான்... "நான் வீட்டில் இருக்கும் ஜன்னல்கள் வழியாக இந்த உலகத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். அதில் ஒரு நிகழ்வுதான் என்னை மிகவும் பாதிக்கச் செய்தது. கசாப்புக் கடைக்காரன் ஒருவன், ஒரு ஆட்டுக் குட்டியை கொன்று அதை இறைச்சியாக்க, நல்ல சானை தீட்டப்பட்ட கத்தியுடன் சென்றுகொண்டிருக்கிறான். எனக்கு அதைப் பார்க்கவே பாவமாக இருந்தது. சோகத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். திடீரென அந்தக் ஆட்டுக்குட்டி அவன் பிடியில் இருந்து தப்பித்தது. கசாப்புக்  கடைக்காரன் அதை பிடிக்க மேலும் கீழும் விழுகிறான். ஆனால், அது அவனிடம் சிக்காமல் தாவுகிறது. கசாப்புகாரன் அதைப் பிடிக்க விழுகும் போது, அதை தவறவிடும்போது எல்லாம் எனக்கு சிரிப்பு வந்துகொண்டே இருந்தது. விழுந்து விழுந்து சிரித்தேன். ஆட்டுக்குட்டி அவனிடம் மாட்டாமல் அது ஒரு திருடன் போலீஸ் விளையாட்டாக இருந்தது. கடைசியில் கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, பலியாக இருந்தது. அப்பொழுது மீண்டும் என்னை சோகம் தொற்றிக்கொண்டுவிட்டது. இந்த சம்பவம்தான் எனக்குள் நகைச்சுவை மீதான ஒரு பார்வையை உண்டாக்கியது" என்று கூறியிருக்கிறார்.
 

charl

 

 

சார்லி சாப்ளினை பாதித்ததாக சொல்லப்பட்ட இந்த சம்பவத்தை அவரின் எல்லா படங்களிலும் பார்க்கலாம். அவர் மக்களிடம் கருத்துகளை தெரிவிக்க  நகைச்சுவையை ஆயுதமாகக் கையாண்டவர். மக்களுக்கு அவரை ஒரு கதாநாயகனாக தெரியும், காமெடியனாக தெரியும். தன் ஒவ்வொரு படங்களிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர், சர்வாதிகாரி ஹிட்லரை எதிர்த்த ஒரு கம்யூனிஸ்ட் என்பது பலருக்கும் தெரியாது. அவரது 'தி கிரேட் டிக்டேட்டர்' படம் இன்றும் கொண்டாடப்படும் வியக்கப்படும் மிக தைரியமான அரசியல் படம். சர்வாதிகாரத்தை கேலி செய்து கிழித்து எறிந்த படம். "இந்த உலகம் அனைவருக்குமாக படைக்கப்பட்டது. அன்பால் நிரப்பப்பட வேண்டியது. நாம் இயந்திரங்கள் இல்லை, கால்நடைகள் இல்லை, மனிதர்கள். நமக்கு அன்புதான் தேவை, அடிமைத்தனமில்லை. நாம் பாதை மாறிவிட்டோம், வெறுப்பை நிரப்புகிறோம். ரத்தம் சிந்த வைக்கிறோம்" என்று சர்வாதிகாரி பேசவேண்டிய இடத்தில் நின்று அவர் பேசும் இறுதி உரை உலகின் முக்கியமான உரைகளில் ஒன்று. தற்போதைய நடக்கின்ற சில அசம்பாவித விஷயங்களை பற்றி சற்று நினைத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது. ஆம், நாம் பாதை மாறிவிட்டோம், இயந்திரமாகிவிட்டோம். 
 

தன் படங்களில் அரசியலை வைத்து, அதன் மூலம் தான் அரசியல் செய்யாமல், மக்களுக்கு அரசியலை புரியவைத்தவர் சார்லி சாப்ளின். நீண்டு வாழ்க சார்லி சாப்ளின், ரசிகர்களின் மனதில்.      

 

 

 

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

ஐசியூவில் தாய்; பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Mother in ICU; A female guard nursed a starving child

 

மருத்துவமனையில் ஐசிஐ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் பாலூட்டிய சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த அப்பெண்ணின் நான்கு குழந்தைகளும் வெளியில் தவித்துக் கொண்டிருந்தனர். பராமரிக்க யாரும் இல்லாததால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

உடனடியாக அங்கு வந்த எர்ணாகுளம் நகர காவல்துறையைச் சேர்ந்த பெண் போலீசார் குழந்தைகளை தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொண்டனர். அந்த நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை நான்கு மாத குழந்தையாகும். மற்ற மூன்று குழந்தைகளுக்கு பெண் போலீசார் உணவு வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால் நான்கு மாத குழந்தைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அப்பொழுது அதே காவலர் குழுவில் இருந்த ஆர்யா என்ற பெண் காவலர் அழுது கொண்டிருந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தார். இதனை காவல் ஆய்வாளர் ஆனி என்பவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். பெண் காவலரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெண் காவலர் ஆர்யாவிற்கு ஒன்பது மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், பணிக்காக வந்த இடத்தில் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு பாலூட்டி பராமரித்த அவரது செயல் பல தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.