Skip to main content

ஹிட்லரையே சிரிக்கவைத்த சாப்ளின்!

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

லண்டனின் நெரிசலான வீதி ஒன்றில் வந்திறங்கும் ஆடுகளை ஒவ்வொன்றாக கீழிறக்கி, கடைக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறான் கசாப்புக் கடைக்காரன். அதில் மிகச்சிறிய குட்டி ஒன்று அவனிடமிருந்து தப்பியோடுகிறது. ஆடுகளை இறக்குவதை விட்டுவிட்டு, தப்பிச்சென்ற குட்டியை விரட்டி ஓடுகிறான் அவன். எப்படியாவது அந்தக் குட்டியைப் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஓடும்போது, பலமுறை தரையில் விழுந்து எழுகிறான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவன் வயிறு குலுங்கச் சிரிக்கிறான். அவனோடு சேர்ந்து அந்த வீதியே சிரிக்கிறது. ஒருவழியாக அந்தக் குட்டியை பிடித்துவிட்ட கசாப்புக் கடைக்காரன், கடைக்குள் தூக்கிச்செல்கிறான். இதையெல்லாம் கண்டு சிரித்தவர்கள் அவரவர் வேலைகளைத் தொடர, அந்தச் சிறுவன் மட்டும் கசாப்புக் கடைக்காரனைப் பின்தொடர்ந்து கடைக்குள் நுழைகிறான். 
 

charlie

 

 

அங்கு அந்த ஆட்டுக்குட்டி தலை துண்டாகி துடிதுடித்துக் கிடக்கிறது. இதைக்கண்ட சிறுவன் வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து சிலையாகி நிற்கிறான். இன்னும் சில நிமிடங்களில் தலை துண்டிக்கப்பட்டு இறக்கப்போகும் யதார்த்தத்தை அறிந்து தப்பியோடிய ஆட்டுக்குட்டியின் உயிர்ப்போராட்டம், மக்களைச் சிரிக்க வைத்தது. அதே சிறுவன் பின்னாளில் தன் வாழ்வின் மனவேதனைகளை மறந்து மக்கள் சிரிக்கக் காரணமாகிறான். உலகின் தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞன் இவன் என உலகமே கொண்டாடுகிறது. வாழ்வின் யதார்த்தங்களை திரைமொழியில் மௌனமாய் பேசிய அந்த ஒப்பற்ற கலைஞன் சாப்ளின்.
 

இறுக்கமான கோட்டும், அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத கிழிந்த பேண்டும், ஒழுகும் மீசையும், கால்களுக்குப் பொருத்தமில்லாத ஷூக்களும், வாத்து நடையும் என சில அடையாளங்களைச் சொன்னதுமே சட்டென நினைவில் தோன்றிவிடுவார் சாப்ளின். அவரது உண்மைத் தோற்றத்தைக் கூட யாரும் நம்பமுடியாத அளவிற்கு திரை சாப்ளினை நம்முள் ஜீவிக்கச் செய்தவர். சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தன் நிஜவாழ்வில் தான் அனுபவித்த துயரங்களின் காட்சிகளையே திரையில் காட்டினார். ஏப்ரல் 16, 1889ஆம் ஆண்டு பிறந்த சாப்ளினின் தொடக்ககாலம் அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லை. குடிக்கு அடிமையான தந்தை பிரிந்து சென்றதால், பாதி மனநிலைக்குறைபாடுள்ள தன் அன்புத்தாய் ஹன்னாவின் அரவணைப்பில் சகோதரன் சிட்னியுடன் வளர்ந்தார் சாப்ளின்.
 

வறுமை வாழ்வைத் திண்றுகொண்டிருந்த சமயத்தில், அம்மாவின் உழைப்பு மட்டுமே வயிற்றுக்கு ஆதாரம். பாடகியான ஹன்னா ஒருநாள் மக்கள் மத்தியில் பாடிக் கொண்டிருந்தபோது, குரல் உடைந்து பாட முடியாமல் தவிக்கிறார். அதிருப்தியடைந்த மக்கள் கூச்சலிடுகின்றனர். தன் அம்மாவின் இடத்தில் தோன்றிய சாப்ளின் ‘ஜாக் ஜோன்’ பாடலைப் பாடிக்கொண்டே தன்போக்கில் கை, கால்களை அசைக்கிறார். யார் இந்தப் பொடியன் என எண்ணிய பொதுமக்கள் அனுதாபத்தில் காசுகளை வீசுகின்றனர். ஆட்டத்தை நிறுத்திய சாப்ளின் சில்லரைகளைப் பொறுக்கிவிட்டு, மீண்டும் நடனத்தைத் தொடர்கிறார். மக்கள் லேசாக சிரிக்கின்றனர். சில்லரைகளை நிகழ்ச்சி மேலாளர் பொறுக்கும்போது, பாடிக்கொண்டிருந்த சாப்ளின் அவர் கையில் இருந்த சில்லரைகளைப் பிடிங்கிக் கொள்கிறார். மக்கள் ஆரவாரக் கூச்சலிடுகின்றனர். அங்குதான் சாப்ளின் தனக்கான கரவொலிகளைப் பெறத்தொடங்கினார்.
 

துயரங்களின்  நீண்ட தொடராய் ஹன்னா முழுமையாக மனநோயில் சிக்கிவிட, ஹானிபெல் சிறுவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார் சாப்ளின். வாழ்க்கை தன்பங்கிற்கு வாட்டுகிறது. குறும்புத் தனங்களால் செமத்தியாக அடிவாங்கும் சாப்ளின், அன்னையின் அன்பிற்காக ஏங்குகிறார். சிறுவயதிலேயே பக்குவப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டே, பிடித்த வேலையைத் தேடி அலைந்தார். சில வாய்ப்புகள் வாழ்வைத் தொடங்கும் வாய்ப்பைத் தந்தன. ‘ட்ரேம்’ என்ற நாடகம் அவருக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கித் தந்தது. கீஸ்டோன் என்ற நாடக நிறுவனத்தில் சேர்ந்து பணம் சேர்க்கத் தொடங்கினார். தனது தனித்த திறமையால் புகழ் தானாக வந்து சேர்கிறது.
 

charlie chaplin

 

 

சினிமாவின் மீது தீராத பித்து கொண்டிருந்தவர் சாப்ளின். அவர் இயக்கும் படங்களின் காட்சிகளிலேயே அது தெரியும். தி கிட், மாடர்ன் டைம்ஸ், சர்க்கஸ், தி கோல்டு ரஸ், சிட்டி லைட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர் என அவரது திரைப்படங்கள்தான் இப்போதுவரை உலக சினிமாவின் கதைகளுக்கு உரம். அவரது கதைகளில் எளிய மனிதர்களை பிரதிபலித்திருப்பார். வாழ்வின் உண்மைகள் அதனதன் யதார்த்தங்களைப் பேசிக்கொள்வது மாதிரியான கதாப்பாத்திரங்களை வடிவமைத்திருப்பார். தொழிலாளர் ஒற்றுமை, பசி, வறுமை – அதன் நீட்சியான திருட்டு, சோகம், ஏக்கம், காதல், புரட்சி என ஏதொன்றையும் அதன் உச்சபட்ச நிலையோடு உருவப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் படங்களில் வசனம் இருக்காது.
 

‘டாக்கி (பேசும் படம்) வந்ததும் நடிப்புக்கலை செத்துவிட்டது’ என கவலைப்பட்ட சாப்ளின், முதன்முதலாக தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் நீண்டநெடிய வசனம் ஒன்றைப் பேசியிருப்பார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லரின் தோற்றத்தில் தோன்றி, உலக அமைதி குறித்து பேசும் வசனம் அது. உலக சமத்துவமும், ஒன்றுகூடுதலின் அவசியத்தையும் உணர்த்தும் அதைப்போன்ற உரை வேறெவராலும் பேசிவிட முடியாத அளவிற்கு சக்திவாய்ந்தவை. சாப்ளினைவிட நான்கு நாட்கள் இளமையான அடால்ப் ஹிட்லர் (ஏப்ரல் 20, 1889) அவரது ரசிகன் என்றும், சினிமா மீது அதீத மோகம் கொண்டிருந்த ஹிட்லர் அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. இப்படி துயரின் மிச்சமாகவும், புகழின் உச்சமாகவும் வாழ்ந்தவர் சாப்ளின்.
 

சாப்ளின் உலக சினிமாவின் அடையாளமாக சொல்லப்படுகிறார். உண்மையில் அவர் யதார்த்த வாழ்வின் ஆன்மா. புன்னகை என்னும் கலையில் நீடித்து வாழும் பொக்கிஷம். துன்பம் வரும் வேளையில் சாப்ளினோடு பேசுங்கள். நிச்சயம் ஆறுதல் தருவார். ஹிட்லரையே சிரிக்க வைத்தவரல்லவா அவர்!

 

 

Next Story

போலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது. பல யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். அவருக்கு சொந்தமான ஆஸ்திரியாவில் பிரனவ் ஆவ் இன் என்னும் நகரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.



முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

ஹிட்லர் ஒலிம்பிக்ஸ்! ஹிட்லர் சர்வாதிகாரியாக மாறியது எப்படி? #7

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

சர்வாதிகாரி ஆகி விட்டால் போதுமா? சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளினைப் போலவே, உலகப் பத்திரிகைகள் ஹிட்லரை சித்தரித்து வந்தன. 1935 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹிட்லரை இது மிகவும் கவலையடையச் செய்தது. நாஜிகளின் கொடூரமான அட்டூழியங்கள் உலகப் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றன. ஹிட்லரையும், அவரது அரசையும் கிழிகிழியென்று கிழித்தெறிந்தன. இனப்படுகொலை உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது. கோயபல்சும், கோயரிங்கும், ஹிம்லரும், ருடால்ப் ஹெஸ்ஸும் ஹிட்லரை இறகுப்பந்துபோல பயன் படுத்துவதாக கேலிச் சித்திரங்கள் வெளியிடப்பட்டன. மற்றொரு பக்கம் ஹிட்லரின் பேச்சுக்களை அலசி ஆராய்ந்து, அவர் போருக்கு தயாராகி வருவதாக கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஹிட்லருக்கு போர் புரியவேண்டும் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். ஆனால், ஜெர்மனியின் தொழில்வளத்திற்கு கச்சாப் பொருள்களை வெளிநாட்டில் இருந்துதானே வாங்கியாக வேண்டும்? கொஞ்சம் அடக்கி வாசித்து, பிறகு எகிறலாமே. தொழில் அதிபர்கள் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்துவிட்டார். வெளிநாடுகளுக்கு ஜெர்மன் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக கச்சாப் பொருள்களை வாங்கிக் கொள்ள முடிவு செய்தார். அதற்கு, வெளிநாடுகளின் மதிப்பைப் பெற வேண்டுமே.
 

fgh



பிரான்சிடம் பேசிப் பார்க்கலாம் என்று முயற்சி செய்தார். ஆனால், ஹிட்லரை முட்டாள் என்று கூறிவிட்டார் பிரான்ஸ் பிரதமர். அமெரிக்காவிடம் கேட்கலாம் என்றால், அங்குள்ள யூதர்களின் தயவைப் பெற்றதாக ஆகிவிடும். அது தற்கொலைக்குச் சமம். என்ன பிரிட்டனைத் தாஜா செய்ய முடியுமா பார்க்கலாம். அது சாத்தியமானால் தப்பிவிடலாம் என்று முடிவு செய்தார். அதேசமயத்தில், பிரிட்டனும் ஜெர்மனியுடன் உறவுகளைப் புதுப்பிக்கலாம் என்று நினைத்திருந்தது. ஆங்கிலேயர்கள் தூய்மையான ஆரியர்கள் என்பது ஹிட்லரின் எண்ணம். இந்திய சுதந்திரப் போராட்டத்தையே மட்டமாக பேசியவர் ஹிட்லர். “இங்கிலீஷ் ஜாதி தூய்மையானது. அது களங்கமுற்று அரசு எந்திரம் நொறுங்கிப் போனால், அல்லது, பலமான எதிரி உருவானால் மட்டுமே பிரிட்டனை ஜெயிப்பது சாத்தியம். இந்தியத் தலைவர்களால் இங்கிலாந்தை எதிர்த்துப் போராட முடியாது. மற்ற வல்லரசுகளின் கீழ் இருப்பதை விட இங்கிலாந்தின் கீழ் இருப்பதே இந்தியாவுக்கு நல்லது”

இதுதான் இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஹிட்லரின் கருத்து. அதனால்தான், விடுதலைப் போராட்ட காலத்தில், ஹிட்லருடைய அடிப்பொடிகளாக இந்தியாவில் உருவான ஒரு கூட்டம், விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்க முன் வந்ததோ என்னவோ? பிரிட்டன் மீது இவ்வளவு உயரிய மதிப்பு வைத்திருக்கும் ஹிட்லர, அந்த நாட்டின் உறவை விரும்பியதில் வியப்பேதும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரிட்டனின் பத்திரிகைகள் கடுமையாக  எதிர்த்தன. அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலோர், பிரதமர் சாம்பர்லின் உள்பட ஹிட்லருடன் உறவை ஏற்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள ஹிட்லர் தயாராக இருந்தார். ஆனால், மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அனுமதி மறுத்துவிட்டார்.
 

 

gh



அடால்ப் என்ற வார்த்தை வொல்ப் என்ற ஆங்கில வார்த்தையின் மருவல் என்று கூறுவார்கள். அதாவது ஓநாய் என்று அர்த்தம். இதை ஹிட்லரே அடிக்கடி பெருமையாகச் சொல்லிக் கொள்வார். பிரிட்டனுடன் உறவு என்ற தந்திரத்தைக் கையில் எடுத்தபோது, தன்னை ஓநாய் என்று அவர்கள் நினைப்பார்கள், ஆனால், நான் நரி என்பது அவர்களுக்குத் தெரியப்போவதில்லை என்று நண்பர்களிடம் கூறினார். பிரிட்டனின் மன்னர், இங்கிலாந்துக்குள் வர ஹிட்லருக்கு அனுமதி மறுத்தாலும், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக இருந்த ஜான் சைமன் ஹிட்லரைத் தவறாக எடைபோட்டு விட்டார். மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிக்கப் போவதில்லை என்று ஹிட்லர் பேசியதை அவர் நம்பினார். அதைத் தொடர்ந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக ஜெர்மனியும் ராணுவபலத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிப்பது தவறில்லை என்று கருத்துத் தெரிவித்தார்.

“நாங்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க மாட்டோம். அதேசமயம், வெர்சைல்ஸ் உடன்படிக்கையின் கீழ்  ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய ஸார்லாந்து உள்ளிட்ட பகுதிகளை மட்டுமே திரும்பக் கேட்கிறோம். எங்களுடைய விவசாய வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இது மிகவும் அவசியம்” என்று நைச்சியமாக பேசிவந்தார் ஹிட்லர். சுமூகமான சூழல் உருவான நிலையில், ஜான் சைமனை பெர்லின் வரும்படி அழைத்தார் ஹிட்லர். இந்த முடிவு பிரிட்டனில் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்தச் சந்திப்புத் தேதி நெருங்கும் நிலையில் ஹிட்லர் திடீரென்று பல்டியடித்தார். “ஜெர்மன் மீண்டும் ஆயுத உற்பத்தியைப் பெருக்கப் போகிறது. அதற்கான திட்டங்களைத் தயாரித்து வைத்துள்ளது. ஏற்கெனவே, கணிசமான அளவில் ராணுவபலத்தை ரகசியமாக அதிகரித்துள்ளது”

 

jk



இப்படித் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை ஒன்று பிரிட்டனில் வெளியிடப்பட்டு விட்டது. இது ஜெர்மனியை அவமானப்படுத்தும் செயல் என்று ஹிட்லர் ஆவேசப்பட்டார். கடைசியில், அந்தச் சந்திப்பு நடக்காமலேயே போயிற்று. மார்ச் 16 ஆம் தேதி, ஜெர்மன் ராணுவத்திற்கு புதிதாக ஐந்துலட்சம் வீரர்களைத் தேர்வு செய்யும் வகையில் சட்டம் இயற்றினார் ஹிட்லர். “இன்றுடன் வெர்சைல்ஸ் உடன்படிக்கை செத்துவிட்டது. பிரான்சும் பிரிட்டனும் எதிர்க்கட்டும் பார்க்கலாம். அவர்களுக்கு அந்தத் துணிச்சல் இருக்கும் என்று நான் நம்பவில்லை. நாடாளுமன்றத்தில் ஹிட்லர் முழங்கியது உண்மைதான். பிரான்சும், பிரிட்டனும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அடுத்த ஒரே ஆண்டில், ஜெர்மனியின் ராணுவபலம், பிரான்சுக்கு நிகரானது. 20 ஆண்டுகளுக்கு அப்புறம் இந்த பலத்தை மீண்டும் பெற்றது ஜெர்மனி.

1936 மார்ச் மாதம் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், ராணுவம் விலக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த ரைன்லாந்தை ஜெர்மன் தன்வசப்படுத்தியது. யாரும் மூச்சுக்கூட விடவில்லை. இப்போதைக்கு போர் வராது என்று சாதாரணமாக நினைத்திருந்த பிரிட்டன், தனது படைபலத்தை குறைக்கத் தொடங்கியிருந்த காலம் அது. ரைன்லாந்தைக் கைப்பற்றி மூன்றே மாதங்கள்தான். ஜூலை மாதம், ஸ்பெயினில் உள்நாட்டு போர் மூண்டது. அந்த நாட்டின் தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ, இத்தாலி அதிபர் முசோலினியிடம் உதவி கேட்டார். ஆனால், அவர் அப்போது எத்தியோப்பியா மீது போர் தொடுத்திருந்தார். இதை ஜெர்மனி பயன்படுத்திக் கொண்டது. பிரான்கோவுக்கு உதவ ஒப்புக் கொண்டது. பிறகென்ன அடுத்த சிலநாட்களில் ஜெர்மனியின் கையில் ஸ்பெயின். ஜெர்மனியின் லாகவாமான இந்தத் தந்திரம் முசோலினிக்கு பிடித்துவிட்டது. அவர், ஜெர்மனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.
 

ghj



இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், பெர்லின் நகரம், ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு ஜரூராகத் தயாராகி வந்தது. 1936 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனையோ அல்லல்களைத் தாண்டி மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, ஹிட்லரே கவனித்தார். விளையாட்டு அரங்கை அவரே வடிவமைத்தார். ஆனால், யூதர்களயும், ஜிப்ஸிகளையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துவரும் நாஜி அரசாங்கம் நடத்தும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்று, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், செக்கோஸ்லாவாகியா, ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளில் யூதர்கள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். யூத விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்ஸில் பங்கேற்கக் கூடாது என்று யூத அமைப்புகள் தடை விதித்தன. ஏற்கெனவே, ஜெர்மனியில் அனைத்துத் தடகள விளையாட்டுகளிலும் யூதர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். ஆரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு தீவிரமாக பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதா வேண்டாமா என்று அமெரிக்கா பரிசீலனை செய்துவந்தது. பெர்லினுக்கு ஒரு குழுவை அனுப்ப, அது முடிவு செய்திருந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். சர்வதேச நன்மதிப்பைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். கோயபல்ஸ் தனது திறமையை இந்தப்பக்கம் திருப்பினார். ஒலிம்பிக்ஸ் ஏற்பாடுகள் குறித்து பக்கம்பக்கமாக செய்திகள் வெளிவரும்படி பார்த்துக் கொண்டார். “யூதர்களுக்கு அனுமதி இல்லை” என்று எழுதி வைக்கப்பட்டிருந்த போர்டுகள் எல்லா இடங்களிலும் அகற்றப்பட்டன. ஜெர்மன் அரசு நிர்வாம் சிறப்பாக செயல்படுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டன. ஹிட்லரின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் விளம்பரச் செய்திப்படங்களை பிரமாண்டமான முறையில் எடுத்துக் கொடுக்கும் பணியில் லெனி ரீபென்ஸ்டால் என்ற பெண்மணி ஈடுபட்டிருந்தார்.

அவருடைய படங்கள், ஹிட்லரின் தேர்தல் வெற்றிக்கும், வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கைப் பரப்புவதற்கும் பெரிய அளவில் உதவியாக இருந்தன. யூதர்களுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டன. இது நாடகம் என்று ஈனஸ்வரமாக எழுந்த குரல்கள், ஆரவாரக் கூச்சலுக்கு மத்தியில் எடுபடாமல் போயிற்று. பெர்லின் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பது என்று அமெரிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து உலக அளவில் எழுந்த எதிர்ப்புகள் அனைத்தும் ஒடுங்கிவிட்டன. 11 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஹிட்லர் தனது படை பரிவாரங்களுடன் பிரமாண்டமான அரங்கிற்குள் நுழைந்தார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து, வலது கையை உயர்த்தி “தலைவர் வாழ்க” என்றனர். வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அசந்துவிட்டனர். இப்படி ஒரு தலைவனா?

 

hj



மொத்தம் 49 தடகளக் குழுக்கள் பங்கேற்றன. ஜெர்மனியின் சார்பில் 348 வீரர்கள் கலந்துகொண்டனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா சார்பில் 312 பேர் பங்கேற்றன. பெரும்பகுதி பதக்கங்களை ஜெர்மனி வாரிக்குவித்தது. ஹிட்லர் நடுநிலையாளர் போல தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் போட்டி ஜெர்மனியின் உலகளாவிய அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதைப் புறக்கணிக்கமால் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் கலந்துகொண்டது தவறு என்று பின்னாளில் பேசப்பட்டன. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்ததுதான் தாமதம். ஹிட்லரின் என்ஜினீயரிங் மூளை வேகமாக திட்டங்களைத் தீட்டத் தொடங்கியது. யூதர்கள் மீதான வெறித்தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. கொத்துக் கொத்தாக அள்ளிச் சென்றனர். ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டனர். அங்கு கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். சாப்பாடு இல்லாமல் உயிர் இருக்கும்வரை உழைத்துவிட்டு செத்துப்போகும்படி விடப்பட்டனர்.

ஏற்கெனவே, நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தன. இப்போது, ஹிட்லரின் கவனம் ரயில்பாதைகளில் திரும்பியது. பிரிட்டனின் தி கிரேட் ரயில்வேக்கு சொந்தமான பாதைகள்தான் உலகில் அகலமானவையாக கருதப்பட்டு வந்தன. அதைவிட அகலமான ரயில்பாதைகளை ஹிட்லர் வடிவமைத்தார். குறைந்த விலையில் ஜெர்மானியர்களுக்கு கார் வழங்குவதற்காக வோல்ஸ்வேகன் காரை ஹிட்லரே வடிவமைத்தார். கட்டிடங்கள், சிறிய ரக விமானங்கள், நவீன பீரங்கிகள் என ஹிட்லரின் மூளையில் உதித்த எல்லாவற்றையும் உருவாக்க திறமையாளர்கள் நிறைந்திருந்தனர். ஹிட்லர் சொல்வார். விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தொழிலாளர்களும் செய்து முடிப்பார்கள்.

வெளி உலகினருக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்று. முதல் இரண்டு ஆக்கிரமிப்பு அளித்த போதை குறைவது போல தெரிந்தது. ஹிட்லர் சுதாரித்துக் கொண்டார். வெற்றியால் உண்டாகும் போதை குறைய அனுமதித்தால் சோர்ந்து விடுவார்கள். என்ன செய்யலாம்? தனது ஓவிய ஆர்வத்தை புரிந்துகொள்ளாமல், கல்லூரியில் சேர்க்க மறுத்த வியன்னா ஓவியக் கல்லூரி நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வு ஹிட்லரின் நெஞ்சில் இன்னமும் வடுவாக இருந்தது.

“ஜெர்மனியுடன் இணைந்து விடுங்கள்”

1938 ஆம் ஆண்டு 12 ஆம் தேதி ஆஸ்திரிய அரசுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்தார் ஹிட்லர். வேண்டுகோளை ஏற்பதாக தெரியவில்லை. “எனக்கு ஆஸ்திரியா வேண்டும்” ராணுவத்திடம் கேட்டார் ஹிட்லர். ஜெர்மன் ராணுவத்தின் அணிவகுப்பைப் பார்த்ததுமே, ஆஸ்திரியா ஹிட்லரின் சட்டைப்பையில் வந்து விழுந்து. இதைப் பார்த்ததும் செக்கோஸ்லாவாகியா மிரண்டுவிட்டது. அடுத்து ஹிட்லரின் குறி தன்மீதுதான் இருக்கும் என்று நடுங்கியது. ஜெர்மனிடம் இருந்து எடுத்துத் தரப்பட்ட சுடடன்லாந்தை மீண்டும் ஒப்படைத்து விடும்படி செக் அதிபர் பெனோஸுக்கு தகவல் அனுப்பினார் ஹிட்லர்.

அமைதியான முறையில் அந்தப் பகுதியை மட்டும் கொடுத்திருக்கலாம் அவர். பிடிவாதம் செய்தார். மூன்று மாதங்கள் வரை பேச்சுவார்த்தை என்ற பேரில் இழுத்தடித்தார். ஹிட்லர் பொறுமை இழந்தார். ஜெர்மன் ராணுவம் உத்தரவுக்காக காத்திருந்தது. ஹிட்லர் “ம்” என்றால் எந்த நாட்டையும் கவ்விக் கொண்டுவந்து அவர் காலடியில் போட தயாராக இருந்தது ராணுவம். செக் அதிபருடன் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே, இத்தாலிக்குச் சென்றார் ஹிட்லர். ரோம் நகரில் இத்தாலி சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்தார். செக்கோஸ்லாவாகியா மீது படையெடுக்கும் பட்சத்தில்  முசோலினி எதிர்ப்பு தெரிவித்து விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அவரே அந்தச் சமயத்தில் எத்தியோப்பியா மீது படையெடுத்த களைப்பில் இருந்தார்.

இருவரும் பரஸ்பரம் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொண்டனர். இதை அறிந்ததும், தனக்கு உதவி செய்யும்படி பிரிட்டனையும், பிரான்சையும் மன்றாடியது செக்கோஸ்லோவாகியா. ஏதேனும் செய்யுங்கள் என்று பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வேண்டுகோள் விடுத்தார் பிரான்ஸ் பிரதமர். அவர் அனுப்பிய தந்தியின் நகலை இணைத்து, ஹிட்லருடன் பேச நேரம் ஒதுக்கும்படி கேட்டார் சாம்பர்லின். சாம்பரிலின் அனுப்பிய தந்தியைப் பார்த்ததும் ஹிட்லரின் உதட்டோரத்தில் எகத்தாள புன்னகை தோன்றின. “நான் வருவதை ஏற்க மறுத்த பிரிட்டிஷ் சிங்கம், இப்போது, என் சந்திப்புக்கு நேரம் கேட்கிறது”

தனக்குள் சொல்லிக்கொண்டார் ஹிட்லர். எல்லாம் ஹிட்லரின் நேரம். பிரிட்டிஷ் பிரதமர் சாம்பர்லினுக்கு வயது 70. இதுபோன்ற பயணத்தையெல்லாம் தவிர்த்து வந்தார். பெர்லினில் சந்திக்கலாம் என்றுதான் சாம்பர்லின் நினைத்திருந்தார்.

ஆனால், ஓபர்ஸல்ஸ்பர்க் மலையை ஓட்டிய பெர்காப் நகரில் சந்திக்க ஹிட்லர் ஏற்பாடு செய்தார். அங்கு செல்வதற்கே ஏழுமணி நேரம் அவர் பயணம் செய்ய வேண்டும். 1938 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அந்தச் சந்திப்பு நடந்தது. ஹிட்லர் மட்டுமே பேசினார். சாம்பர்லின் கேட்டுக் கொண்டிருந்தார். ஜெர்மனிக்கான பிரிட்டிஷ் தூதர் இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். ஜெர்மனியின் உரிமைகளைப் பற்றியே அவர் விவரித்தார். “எங்களிடமிருந்த எடுக்கப்பட்ட பகுதிகளைத்தான் கேட்கிறோம். நம் இரு நாடுகளுக்கு இடையே ஏதேனும் பிரச்சனை என்றால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” பேச்சுவார்த்தை முடிந்தது. மீண்டும் சந்திப்போம். நல்லதோர் முடிவெடுப்போம் என்று சாம்பர்லின் தெரிவித்தார். “இவ்வளவு நல்லவராக இருக்கிறாரே ஹிட்லர்” வியந்தபடியே லண்டன் போய்ச் சேர்ந்தார் சாம்பர்லின்.