Skip to main content

தமிழக அரசு மீது திருப்தியில்லாத மத்திய அரசு... சென்னையில் கரோனா பரவல் பற்றி மோடியிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

admk

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் கனமான கோப்புகளை கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. அதனடிப்படையில், எடப்பாடி அரசுக்கு மோடி கொடுத்த டோஸ்தான், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுக்கவைத்துள்ளது என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறையினர்.

 

கரோனா தடுப்பு மருத்துவவல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சரவை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியபோது எடப்பாடி மிகவும் சோர்வாகத் தான் இருந்திருக்கிறார். சுகாதாரத் துறையினர் நம்மிடம், "சென்னையில் பரவும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், அமைக்கப்பட்ட குழுக்கள் எதிலும் திருப்தி இல்லாத மத்திய சுகாதாரத்துறை, சென்னையை டெல்லியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நேரிடும் என தலைமைச்செயலாளர் சண்முகம் வழியாக எடப்பாடிக்குத் தகவல் தந்துள்ளது. அதுதான் அவரது சோர்வுக்குக் காரணம்'' என்கின்றனர்.

 

இதனால், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையில் இளம் வயதினரின் மரணங்கள், அறிகுறியே இல்லாதவர்களின் மரணங்கள், பாசிட்டிவ்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டதா உள்ளிட்ட நடப்புச் சிக்கல்களையும் மத்திய அரசின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நிறைய விசயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ஆரோக்கியமற்ற இளம் வயதினரின் மரணங்கள் தவிர்க்க முடியாதவை. அறிகுறியே இல்லாதவர்களின் இறப்புக்கு சைலண்ட் ஹேபாக்சியா தாக்குதல்தான் காரணம். டெஸ்டுகளின் எண்ணிக்கையும், அதன் ரிசல்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருப்பதால் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இதனை க்ளஸ்டர் என சொல்லலாமே தவிர சமூகப்பரவலாக கணிக்கத்தேவையில்லை.

 

கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். 6 மாதங்களுக்குப் பிறகே தொற்றுக் கட்டுக்குள் வரும் என்பதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியிருக்கிறோம். அதனால் செப்டம்பர், அக்டோபர் வரை பாதிப்புகள் அதிகரித்து அதன்பிறகே அடங்கும் என மருத்துவக்குழு விவரித்துள்ளது. இதனைத்தொடர்ந்தே, முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுத்தார் எடப்பாடி என்கிறார்கள். இந்த ஆலோசனையில் காணொளிக் காட்சி வழியாகக் கலந்துகொண்ட ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரப்தீப்கவூரை பேச அனுமதிக்காததுடன், பேட்டி தரக்கூடாது எனவும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டதாம்.
 

dr

 

இளம்வயது மரணங்கள், சைலண்ட் ஹேபாக்ஸியா அட்டாக் குறித்து சென்னை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமாரிடம் பேசியபோது, "கரோனாவால் இளம் வயது மரணங்கள் அதிகரித்திருப்பதாகச் சொல்வது தவறு. இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள் மரணமடைகின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களைத் தொற்று தாக்கினாலும் அவர்களுக்குத் தெரியாமலே ஓடிவிடுகிறது. 7 நாள் கழித்து, ஆன்டிபாடி பரிசோதனையில், ஐ.ஜி.எம்.ஆன்டிபாடி பாசிட்டிவ் என வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை கரோனா தாக்காது. இளம் வயதினர் உடல் நலத்தில் அக்கறைகாட்ட வேண்டும். கரோனாவைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை.

 

அதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. ஆனால், 60 வயதைக் கடந்துள்ள டாக்டர்கள் அப்படி இருக்க முடியாது. போர் முனையில் உள்ள ராணுவ வீரர்கள் போல கரோனாவை எதிர்த்து டாக்டர்கள் போராடுகிறோம். கரோனாவை எதிர்த்து லண்டனில் போராடும் டாக்டர்களில் 50 பேர்தான் இறந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ரிட்டையர்டு ஆன டாக்டர்களெல்லாம் மருத்துவப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததால் கரோனா அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை. ஆனா, போராடுகிற எங்களுக்கு சிப்பாய்கள்தான் கிடைப்பதில்லை. அதாவது, இளம்வயது டாக்டர்கள், செவிலியர்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்கப்படாததால் ரிசைன் பண்ணிட்டு ஓடிவிடுவதுதான் எல்லா மருத்துவமனைகளும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை.

 

http://onelink.to/nknapp

 

சமூகப் பரவலாக சென்னை மாறியிருக்கிறதா என்பதற்கு ஐ.ஜி.எம். மற்றும் ஆன்டி ஜெ.எம்.டெஸ்ட் செய்து பார்த்தால்தால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆன்டிஜெ.எம். இப்போதுதான் நாம் ஆரம்பிச்சிருக்கோம். ஆண்டிஜென் கிட் இப்போதுதான் வரத் துவங்கியிருக்கிறது. 100 பேருக்கு ஐ.ஜி.எம். டெஸ்ட் எடுத்து அதில் 50 பேருக்கு பாசிட்டிவ்னு வந்ததுன்னா சமூகப் பரவல் இல்லைன்னு சொல்லலாம். இத்தகைய டெஸ்டில் ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.எம். என 2 வகை இருக்கு. ஐ.ஜி.ஜி. பாசிட்டிவ்வாக இருந்தால் நோய்க் குணமடையவில்லைன்னு அர்த்தம். அதுவே ஐ.ஜி.ஜி. நெகட்டிவ்வாகவும், ஐ.ஜி.எம். பாசிட்டிவ்வாகவும் இருந்தால் குணமடைந்து விட்டார்கள்னு பொருள். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிட்டது எனச் சொல்லலாம். இவைகளைச் செய்து பார்க்காமல் சமூகப் பரவலைக் கணக்கிட முடியாது. அதேபோல, ஹேபாக்ஸியா தாக்கம் என்பதெல்லாம் மிக அபூர்வம். லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்கும். அதனால், எல்லா வியாதிகளையும்போல கரோனாவும் ஒரு வியாதிதான். ஆனா, மருந்து கண்டுபிடிக்கப்படாத வியாதி. அதனால் அதனை எதிர் கொள்ளணுமே தவிர பயப்படத் தேவையில்லை. இன்றைய நிலையில், ஆக்ஸ் போர்ட் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ள மருந்து ஒரு வரப்பிரசாதம்! பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார் மிக இயல்பாக.


 

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.