Skip to main content

தமிழக அரசு மீது திருப்தியில்லாத மத்திய அரசு... சென்னையில் கரோனா பரவல் பற்றி மோடியிடம் உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

admk

 

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கரோனாவின் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் கனமான கோப்புகளை கடந்த வாரம் சமர்ப்பித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை. அதனடிப்படையில், எடப்பாடி அரசுக்கு மோடி கொடுத்த டோஸ்தான், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுக்கவைத்துள்ளது என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறையினர்.

 

கரோனா தடுப்பு மருத்துவவல்லுநர்கள் குழு மற்றும் அமைச்சரவை கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தியபோது எடப்பாடி மிகவும் சோர்வாகத் தான் இருந்திருக்கிறார். சுகாதாரத் துறையினர் நம்மிடம், "சென்னையில் பரவும் கரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம், அமைக்கப்பட்ட குழுக்கள் எதிலும் திருப்தி இல்லாத மத்திய சுகாதாரத்துறை, சென்னையை டெல்லியின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள நேரிடும் என தலைமைச்செயலாளர் சண்முகம் வழியாக எடப்பாடிக்குத் தகவல் தந்துள்ளது. அதுதான் அவரது சோர்வுக்குக் காரணம்'' என்கின்றனர்.

 

இதனால், மருத்துவ வல்லுநர்கள் குழுவுடனான ஆலோசனையில் இளம் வயதினரின் மரணங்கள், அறிகுறியே இல்லாதவர்களின் மரணங்கள், பாசிட்டிவ்வாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டதா உள்ளிட்ட நடப்புச் சிக்கல்களையும் மத்திய அரசின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் நிறைய விசயங்களைக் கேட்டறிந்திருக்கிறார் எடப்பாடி. அப்போது, ஆரோக்கியமற்ற இளம் வயதினரின் மரணங்கள் தவிர்க்க முடியாதவை. அறிகுறியே இல்லாதவர்களின் இறப்புக்கு சைலண்ட் ஹேபாக்சியா தாக்குதல்தான் காரணம். டெஸ்டுகளின் எண்ணிக்கையும், அதன் ரிசல்டுகளின் எண்ணிக்கையும் அதிகமாகியிருப்பதால் பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இதனை க்ளஸ்டர் என சொல்லலாமே தவிர சமூகப்பரவலாக கணிக்கத்தேவையில்லை.

 

கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். 6 மாதங்களுக்குப் பிறகே தொற்றுக் கட்டுக்குள் வரும் என்பதை ஆரம்பத்திலேயே தெரியப்படுத்தியிருக்கிறோம். அதனால் செப்டம்பர், அக்டோபர் வரை பாதிப்புகள் அதிகரித்து அதன்பிறகே அடங்கும் என மருத்துவக்குழு விவரித்துள்ளது. இதனைத்தொடர்ந்தே, முழு ஊரடங்கை அமல்படுத்தும் முடிவை எடுத்தார் எடப்பாடி என்கிறார்கள். இந்த ஆலோசனையில் காணொளிக் காட்சி வழியாகக் கலந்துகொண்ட ஐ.சி.எம்.ஆர். டாக்டர் பிரப்தீப்கவூரை பேச அனுமதிக்காததுடன், பேட்டி தரக்கூடாது எனவும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டதாம்.
 

dr

 

இளம்வயது மரணங்கள், சைலண்ட் ஹேபாக்ஸியா அட்டாக் குறித்து சென்னை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீகுமாரிடம் பேசியபோது, "கரோனாவால் இளம் வயது மரணங்கள் அதிகரித்திருப்பதாகச் சொல்வது தவறு. இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தை இழந்தவர்கள் மரணமடைகின்றனர். ஆரோக்கியமாக இருப்பவர்களைத் தொற்று தாக்கினாலும் அவர்களுக்குத் தெரியாமலே ஓடிவிடுகிறது. 7 நாள் கழித்து, ஆன்டிபாடி பரிசோதனையில், ஐ.ஜி.எம்.ஆன்டிபாடி பாசிட்டிவ் என வந்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது. அவர்களை கரோனா தாக்காது. இளம் வயதினர் உடல் நலத்தில் அக்கறைகாட்ட வேண்டும். கரோனாவைக் கண்டு பயந்து நடுங்கத் தேவையில்லை.

 

அதேசமயம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது. ஆனால், 60 வயதைக் கடந்துள்ள டாக்டர்கள் அப்படி இருக்க முடியாது. போர் முனையில் உள்ள ராணுவ வீரர்கள் போல கரோனாவை எதிர்த்து டாக்டர்கள் போராடுகிறோம். கரோனாவை எதிர்த்து லண்டனில் போராடும் டாக்டர்களில் 50 பேர்தான் இறந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ரிட்டையர்டு ஆன டாக்டர்களெல்லாம் மருத்துவப் பணிகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருந்ததால் கரோனா அவர்களை நெருங்கக்கூட முடியவில்லை. ஆனா, போராடுகிற எங்களுக்கு சிப்பாய்கள்தான் கிடைப்பதில்லை. அதாவது, இளம்வயது டாக்டர்கள், செவிலியர்களுக்கு சரியான தகவல்கள் கொடுக்கப்படாததால் ரிசைன் பண்ணிட்டு ஓடிவிடுவதுதான் எல்லா மருத்துவமனைகளும் எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை.

 

http://onelink.to/nknapp

 

சமூகப் பரவலாக சென்னை மாறியிருக்கிறதா என்பதற்கு ஐ.ஜி.எம். மற்றும் ஆன்டி ஜெ.எம்.டெஸ்ட் செய்து பார்த்தால்தால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆன்டிஜெ.எம். இப்போதுதான் நாம் ஆரம்பிச்சிருக்கோம். ஆண்டிஜென் கிட் இப்போதுதான் வரத் துவங்கியிருக்கிறது. 100 பேருக்கு ஐ.ஜி.எம். டெஸ்ட் எடுத்து அதில் 50 பேருக்கு பாசிட்டிவ்னு வந்ததுன்னா சமூகப் பரவல் இல்லைன்னு சொல்லலாம். இத்தகைய டெஸ்டில் ஐ.ஜி.ஜி., ஐ.ஜி.எம். என 2 வகை இருக்கு. ஐ.ஜி.ஜி. பாசிட்டிவ்வாக இருந்தால் நோய்க் குணமடையவில்லைன்னு அர்த்தம். அதுவே ஐ.ஜி.ஜி. நெகட்டிவ்வாகவும், ஐ.ஜி.எம். பாசிட்டிவ்வாகவும் இருந்தால் குணமடைந்து விட்டார்கள்னு பொருள். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரித்துவிட்டது எனச் சொல்லலாம். இவைகளைச் செய்து பார்க்காமல் சமூகப் பரவலைக் கணக்கிட முடியாது. அதேபோல, ஹேபாக்ஸியா தாக்கம் என்பதெல்லாம் மிக அபூர்வம். லட்சத்தில் ஒருவரைத்தான் தாக்கும். அதனால், எல்லா வியாதிகளையும்போல கரோனாவும் ஒரு வியாதிதான். ஆனா, மருந்து கண்டுபிடிக்கப்படாத வியாதி. அதனால் அதனை எதிர் கொள்ளணுமே தவிர பயப்படத் தேவையில்லை. இன்றைய நிலையில், ஆக்ஸ் போர்ட் யுனிவர்சிட்டி கண்டுபிடித்துள்ள மருந்து ஒரு வரப்பிரசாதம்! பலர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார் மிக இயல்பாக.


 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.