Skip to main content

சி.சி.டி.வி. தரத்தால் தப்பிக்கும் குற்றவாளிகள்!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

குற்றங்களைப் போலவே அவற்றைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. கேமராக்களும் பெருகிவிட்டன. திரும்பும் திசையெல்லாம் அவை பொருத்தப்படுவதால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு தண்டிக்க முடிகிறது. இதனால், பொதுமக்களுக்கும் இவற்றின்மீது நம்பிக்கை கூடியிருக்கிறது. ஆனால், அதன் தரம்குறித்த எந்தவித சந்தேகத்தையும் எழுப்பாமலேயே, வைக்கும் நம்பகத்தன்மை ஏமாற்றத்தையே அளிக்கும் என்ற எச்சரிக்கையை முன்வைக்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

 

cctv


இதுகுறித்து குற்றச்சம்பவங்களைத் தடுப்பதற்கான நிறுவனம் நடத்திவரும் குற்றவியல் நிபுணர் ராஜீவ் ஸ்டீபன், "ஒரு உடலில் எந்த இடத்தில் எந்த தரத்தில் கண் இருந்தால் பலன் கிடைக்குமோ, அதே போலத்தான் சி.சி.டி.வி. கேமராக்களும்! அவற்றை வாங்கிப் பொருத்தி விட்டால் போதுமென்று நினைக்கும் பலர், அதன் விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. அதுதான், அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லாபத்தைத் தருகிறது. நானும் இந்தத் தொழிலில் இருப்பதால் சொல்கிறேன்…


பொதுவாக இந்தியாவிற்கு சீனாவில் இருந்துதான் சி.சி.டி.வி. கேமராக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் இந்திய மின்முறைக்கு சற்றும் பொருத்தமில்லாத இந்த கேமராக்களை ரூ.50 முதல் ரூ.2,500 வரை விலைகொடுத்து வாங்கி, ரூ.1,200 முதல் ரூ.3,000 வரை விற்கின்றனர். தோராயமாக ஒரு கேமராவில் 30 பாகங்கள் இருக்கும். ஒவ்வொன்றையும் வெவ்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த பாகங்களில் ஏற்படும் குளறுபடிகளால் ஒதுக்கப்பட்ட தரமற்ற கேமராக்கள்தான் இந்தியாவில் இறக்குமதி ஆகின்றன. அதனால், அவற்றின் ஆயுட்காலமும் சொல்லும்படியாக இல்லை. அதோடு கேமராவின் போர்டு மற்றும் மேலுறை தவிர மற்ற அனைத்துமே இலவசமாக அல்லது சொற்ப விலைகொடுத்து கூடுதலான எண்ணிக்கையில் வாங்கப்படுகின்றன. ஒருவேளை வாடிக்கையாளரின் கேமரா பழுதாகிவிட்டால் அதில் இந்த

 

cctv


பாகங்களை பொருத்தி, அதன்மூலம் லாபம் பார்க்கமுடியும். இதுதான் ரொம்ப நாளாக நடக்கிறது. அரசும் இந்த முறைகேடுகளைக் கண்டுகொள்வதில்லை. குப்பைகளைக் கொட்டும் சந்தையாகவே இந்தியா இருக்கிறது. வெறும் கேமராவை மட்டும் வாங்கி வைத்துவிட்டு, அது பலனளிக்கும் என்று எதிர்பார்ப்பது வேடிக்கையான விஷயம்''’என்றார்.


தமிழக காவல்நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தக்கோரி பொதுநல வழக்குத் தொடர்ந்து, அது நடைமுறைக்கு வரக்காரணமாக இருந்த பாடம் நாராயணன் நம்மிடம், "மேலைநாடுகளில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்ப தணிக்கை மூலம், ஒரு திட்டத்தின் வாழ்நாள் பலன்கள் மதிப்பிடப்படுகின்றன. நம் அரசுத்துறைகளில் தொழில்நுட்பப் பிரிவுகள் இருப்பதில்லை. இருந்தாலும், அதற்கான வல்லுநர்களை நியமிப்பதில்லை. சமீபத்தில்கூட சாலைப் பாதுகாப்புக்காக பத்தாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டதாகச் சொன்னார்கள். அவற்றில் தரமானவை எத்தனை என்பது யாருக்குத் தெரியும்? டெண்டர் விட்டு வருமானத்தைப் பெருக்குவதற்கான வாய்ப்பாகத்தான் இதைப் பயன்படுத்துகின்றனர். எனவே, கொள்முதல் செய்யப்படும் கேமராக்களின் தரத்தை உறுதிசெய்வதற்கான ஆய்வுக்கூடங்கள் இங்கு இருக்கவேண்டும்'' என்றார் அழுத்தமாக.


சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சி.சி.டி.வி. கேமராக்களின் உதவியால் குற்றச்சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளது என்றும், ஒவ்வொருவரும் அவரவர் வீடுகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அவற்றைப் பொருத்துமாறு வலியுறுத்தியிருக்கிறார். ஒவ்வொரு 50 மீட்டர் இடைவெளிக்கும் ஒரு சி.சி.டி.வி. கேமரா வீதம் 2019ஆம் ஆண்டுக்குள் சென்னையில் மட்டும் 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என அவர் கூறியிருந்தார். சென்னை மாநகராட்சியில் உள்ள முக்கியமான சாலைகளில் 15,345 சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தி, அவற்றின் மூலம் சாலைவிதிகளை மீறுபவர்களை எளிதில் அடையாளம் காணும் முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது போக்குவரத்து காவல்துறை.


இது நல்லமுயற்சி என்றாலும், சி.சி.டி.வி. கேமராக்களின் தரம்குறித்த கேள்விகளைத் தவிர்க்க முடியாத நிலையில், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தன்னனிடம் இதுபற்றி கேட்டோம், "வெளிநாடுகளில் குற்றச் சம்பவங்களைக் கண்காணித்து, குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காணும் கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், நம்மூரில் பயன்படுத்தப்படும் கேமராக்கள் ஆவிகள் நடப்பதுபோன்ற காட்சியையே தருகின்றன. சென்னை போன்ற பெருமாநகராட்சிகளில் அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது குறிப்பிட்ட இடங்களில் சி.சி.டி.வி.க்களைப் பொருத்தினால்தான் அனுமதி என்ற முடிவுக்கான வரைவுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. கூடியவிரைவில் நடைமுறைக்கு வரலாம். குற்றம் செய்பவர் முகமூடி அணிந்துகொண்டு கண்காணிப்புக் கேமராவை உடைத்தாலும்கூட, அதே பகுதியில் இருக்கும் மற்ற கேமராக்களின் மூலம் கண்டுபிடித்துவிட முடிகிறது.


சி.சி.டி.வி. கேமராக்களின் பயன்பாடு இனிவரும் காலங்களில் அத்தியாவசியமானதாக மாறும். அதேசமயம், தரக்கட்டுப்பாடு, தர மதிப்பீடு உள்ளிட்டவற்றில் சட்டப்பூர்வமான மாற்றங்கள் நிகழவேண்டும். மேலும், அவற்றின் குறைந்தபட்ச தரம் நிர்ணயிக்கப்படும் போதுதான் முழுமையான பலன்களை அனுபவிக்க முடியும்''’என்றார்.


சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் குற்றங்களைக் கண்காணிப்பது இருக்கட்டும். கேமராக்களின் தரத்தை கண்காணிக்கப் போவது யார்?
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.