Skip to main content

காவிரி பாதுகாப்பு மண்டலம்! "தமிழக அரசின் சட்டம் வெறும் கானல் நீர்!" -உண்மையை தோலுரிக்கும் ரிப்போர்ட்! 

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

 

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், தமிழ் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடந்த வாரம் சேலம் மாவட்டம் தலைவாசலில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிவிப்பு  மக்களிடம் நம்பிக்கையை விதைத்தது. பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன. 

 

மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள சட்டம், மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்கிறது  'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு.  

 

sundarrajan



 

இது குறித்து நம்மிடம் விவரித்த இந்த அமைப்பின் தலைமை அமைப்பாளர் சுந்தரராஜன், "இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது என்று இந்த சட்டத்தின் 4(2)(1)a பிரிவு அறிவித்திருப்பது அமைச்சரின் நோக்கவுரைக்கு எதிராகவே உள்ளது. 


அமைச்சரின் நோக்கவுரையில், 'கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகளால் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிட்டது' என்று தெரிவித்துள்ளார். அப்படியெனில் நடைபெற்ற ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த சட்டமே கொண்டு வரப்படுகிறதென்றால்  அந்த ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுவதை அனுமதிப்பது இந்த சட்டத்திற்கே புறம்பானது ஆகாதா?    

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் இயக்குனரகம் புதிதாக அறிவித்துள்ள கொள்கையின்படி(HELP) அனைத்து கிணறுகளும் (ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட) ஹைட்ரோகார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்க் கிணறுகளாக இருக்கும் , கிணறுகள்கூட நாளை நீரியில் விரிசல் (fracking) முறைப்படி மீத்தேன் உள்ளீட்ட எந்த ஹைட்ரோ கார்பனையும் எடுத்துக்கொள்ள முடியும் என்று ஆகிவிடும். அதானால் செயல்படக்கூடிய கிணறுகளை கைவிடமாட்டோம் என்று அறிவித்திருப்பது எந்த பயனையும் தராது. 


 

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்த சட்டம் பாதிக்காது என்கிற சரத்து இருப்பது இந்த சட்டத்தின் தேவையை முழுமையாக நிராகரிக்கிறது. சென்ற ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 489 கிணறுகள் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜிசி க்கும் ஒப்பந்தமாகிவுள்ளன. 

இந்த புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கின்ற 700 கிணறுகளையும் செயல்பட அனுமதித்தால் வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகிவிடும்.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பெட்ரோலிய கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்  (PCPIR) அறிவிப்பும் திரும்பப்பெறப்படவில்லை. இந்த முதலீட்டு மண்டலத்தின் கீழ் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களில் உள்ள 57,000ஏக்கர் நிலப்பரப்பு அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் ஒரு பகுதியாக கடலூரில் 50,000 கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், நாகபட்டினத்தினத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட சிபிசில் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை 10 மில்லியன் டன்களாக உயர்த்தவும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பெட்ரோலிய நிறுவனங்களும் feeder ஆலைகளாகும், அதாவது இந்த ஆலைகளிலிருந்து வரக்கூடிய பொருட்களை வைத்து பல்வேறு பெட்ரோலிய மற்றும் ரசாயண பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைக்கப்படும். இதுவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற விஷயத்தையே தகர்த்துவிடும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு  விஷயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிற சரத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற கோட்பாட்டை அர்த்தமற்றதாக்கிவிடும். குறிப்பாக கெயில், ஐஓசி, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் எரிவாயு குழாய்களுக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு எதிராகவே இந்த சட்டம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை எடுத்துச்செல்வது எந்தவிதத்தில் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற விவசாயிகளின் கேள்விகள் நியாயமானதே. 

முதலமைச்சர் தலைவாசலில் அறிவிப்பை வெளியிடும் போது, காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியது என்று அறிவித்தார். ஆனால் இன்றைக்கு சட்டவரைவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களின் அனைத்து பகுதிகளையும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் சில வட்டங்களையும் சேர்த்துதான் காவிரி டெல்டா மாவட்டங்கள் என்று அறிவித்திருப்பது விடுபட்ட மாவட்ட மக்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களும், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டமும், திருச்சி மாவட்டத்தில் குறைந்தபட்சம் லால்குடி பகுதியை சேர்க்காமல் விட்டிருப்பது தமிழகத்தின் உணவு பாதுகாப்பிற்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாது. 

பேராசிரியர் ஜனகராஜனின் ஆய்வுகளின்படி டெல்டா உள்ளிறங்கிவருகிறது (delta is sinking) என்பது  தெரியவந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள கடற்கரை பகுதியில்  கடந்த 20ஆண்டுகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பை தமிழகம் இழந்துள்ளது. அடுத்த 20ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டம் கடல்மட்டத்திற்கு கீழே சென்றுவிடுமென்றும் அந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள், பசுமைப்புரட்சிக்கு பிறகான நிலத்தடி நீர் சார்ந்த விவசாய முறைகள், காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காமல் இருப்பது, ஹைட்ரோகார்பன் திட்டங்கள், ஆற்றுமணல் கொள்ளை போன்றவை இதற்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. 



காவிரி பாதுகாப்பு மண்டலம் சட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பது பற்றி எந்தவிதமான சரத்தும் இல்லை, தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்வதில்  காவிரி மற்றும் அதன் துணைநதிகளின் பங்கு சுமார் 60%. மணல்கொள்ளையை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் அறிவிக்காமல் இருப்பது டெல்டா மாவட்ட வேளாண்மையை துளிகூட காப்பாற்றாது. 

மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் உட்புகுந்து விவசாயம் முழுவதும் பொய்த்துபோவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

காவிரிவேளாண் மண்டலத்தை மேலாண்மை செய்வதற்கான உயர்மட்ட குழுவில் நிபுணர்களின் பற்றாக்குறையால் அதனுடைய பணிகளை முழுமையாக செய்யமுடியுமா என்கிற கேள்விதான் மேலெழுந்து உள்ளது.
 

உலகிலுள்ள அற்புதமான வெகு சில சமவெளிப்பகுதிகளில் காவிரி டெல்டாவும் ஒன்று. இப்படிப்பட்ட சமவெளி பகுதி அமைவதற்கான காரணம் தமிழகத்தின் நிலவியல் அமைப்பு. மேற்குப்பக்கம் மலைகள் கிழக்கு பக்கம் கடல். இந்த நிலவியல் அமைப்புதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நீரை கட்டுப்படுத்தி விவசாயத்தை செழிக்கவைத்தா ஒரு பெரிய பண்பாட்டிற்கு காரணமாக இருந்தது என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலவியல் அமைப்பை பாதுகாப்பதும் நம்முடைய உணவை பாதுகாப்பதும் ஒன்றுதான்.      

 

காவிரி பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக அறிஞர்கள், ஆய்வாளர்கள், நிபுணர்கள், விவசாயிகள், சட்ட நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசு இந்த சட்டவரவை அந்த குழுவிடம் ஒப்படைத்து முழுமையான சட்டத்தை இயற்றவேண்டும் என்று கோருகிறோம். மக்கள் நியாமான கோரிக்கைகளை வைத்துதான் போராடினார்கள் என்பதை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது, அதனால் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோருகிறோம் " என்கிறார் மிக அழுத்தமாக.

Next Story

இந்தியா கூட்டணி ஜெயித்தால் மேகதாது அணை கட்டப்படும்; முதல்வர் மௌனம் ஏன்? - அன்புமணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 Anbumani condemns that Mekedatu Dam will be built if the Indian alliance wins

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மேகதாது அணை கட்டப்படும் என சித்தராமையா பேச்சு கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே  மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியிருக்கிறார்.  பெங்களூர் தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியை  ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர், ‘’மேகேதாதுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்’’ என்று கூறியிருக்கிறார்.  சித்தராமையாவின் இந்தப்  பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படியும்,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படியும்  காவிரி  ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்களிடமிருந்து இதற்கான வாக்குறுதியை நாடாளுமன்றத்தில் பல முறை நான் பெற்றுள்ளேன். உண்மை நிலை இவ்வாறு இருக்க மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டப்படும் என்று சித்தராமையா கூறுவது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் பயன்படுத்துவது ஆகும். சித்தராமையாவின் இந்தப் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

காங்கிரஸ்  ஆட்சியில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்களாகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில்  மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களைக் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. ஆனாலும்  அவர் அமைதியாக  இருப்பதன் பொருள் காங்கிரசின் நலன்களுக்காகவும், கர்நாடகத்தின் நலன்களுக்காகவும்  காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கத் துணிந்து விட்டார் என்பதுதான்.

1970-ஆம் ஆண்டுகளில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே  4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக  தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார். 2008-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக  ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளைக் கலைஞர்  நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின்,  இப்போது மேகதாது அணைக் கட்டும்  விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்தத் துரோகத்திற்கு மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது’ - கர்நாடகா அரசு திட்டவட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Karnataka government planed Can't release water to Tamil Nadu

கர்நாடகா மாநிலம், பெங்களூர் நகரத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தான் ஒரே வழி என கர்நாடகா மாநில அரசு முடிவு செய்து, அணை கட்டுமான பணிகளுக்கு ஆர்வம் காட்டி வந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில், மேகதாது அணை கட்டப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்த சூழலில், கடந்த மார்ச் 21ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டத்தில் பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு தமிழக அரசு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, தமிழ்நாட்டுக்கு பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக தலா 2.8 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசை காவிரி ஒழுங்காற்று குழு கேட்டுக்கொண்டது. 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (04-04-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதில், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி தண்ணீரையும், ஏப்ரல், மே மாதங்களுக்கான தண்ணீரையும் தடையின்றி திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவில் குடிநீர் பிரச்சனை மற்றும் வறட்சி நீடித்து வருவதால் தமிழ்நாட்டிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட முடியாது. மேலும், நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என கர்நாடகா தரப்பு அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.