Skip to main content

"நீ பொண்ணு, நான் பையன். நான் ஈஸியா தப்பிச்சுடுவேன்'' என்று கெத்தாக பேசுகிறான்... இளம்பெண் கண்ணீர்... காவல்துறை கண்டுகொள்ளவில்லை எனப் புகார்!

Published on 19/08/2020 | Edited on 22/08/2020

 

4543

 

ஒரு பெண்ணிடம் காதல் வலைவீசி, அவளது உடம்பில் பிளேடால் பெயர் எழுதவைத்து விட்டு ப்ளாக்மெயில் செய்து பணம் பறித்தது… இன்னொரு இளம்பெண்ணிடம் அதுவும் போலீஸாக இருப்பவரிடம் டாக்டர் போல் நடித்து உனது காதலன் எங்களது மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளான். ஆபரேஷனுக்கு பணம் அனுப்புங்கள்’ என சீட்டிங் செய்தது, கல்லூரி மாணவியிடம் காதல் வலை வீசியது என ஒரே இளைஞன் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் புகார் கொடுத்தும் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதுகுறித்து, நாம் விசாரித்தபோது… பாதிக்கப்பட்ட பெண் மே -28 ஆம் தேதி புகார் கொடுத்து, அப்போதைய, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுக்குப்பிறகு ஜூன் - 4 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து 72 நாட்களாகியும் கைதுசெய்யாமல் அவன் முன்ஜாமீன் வாங்கும்வரை உறுதுணையாக இருந்திருக்கிறது, சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. மேலும் பல காவல்துறை உயரதிகாரிகளும் சீட்டிங் இளைஞனைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள்.

 

தெருநாய்கள் மீது பரிவுகாட்டும் சமூகசேவகரும் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஆசிரியையுமான நிஷாவுக்கும் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) போரூர் மதாநந்தபுரத்தைச் சேர்ந்த ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்த அனந்தபத்மநாபனுக்கும் நட்பு ஏற்படுகிறது. "நான், ஏற்கனவே லவ் பண்ணின பொண்ணு என்னை விட்டுட்டு போயிட்டா. நீயும் சித்தி கொடுமையால கஷ்டப்படுற. நானும் எங்கப்பாவோட இரண்டாவது மனைவிக்குப் பிறந்ததால கஷ்டப்படுறேன். உன்னோட, வலிகள் எனக்குத் தெரியும். நீ என்னை லவ் பண்ணனும்னுகூட அவசியமில்ல. நான், உன்னை லவ் பண்ணிக்கிறேனே? ப்ளீஸ்'' -இப்படியொரு புது டெக்னிக்குடன் அனந்த பத்மநாபன் காதல் வலை வீச, ஒரு கட் டத்தில் அதில் விழுந்தார் நிஷா. தன்னைவிட வயதில் மூத்தவரான நிஷாவிடம், தெருநாய்களைக் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்க்க வேண்டியிருப்பதாகச் சொல்லி அடிக்கடி பணம் வாங்கிக் கொண்டே இருந்தான் அனந்த பத்மநாபன். இதுவே லட்சங்களைத் தாண்ட ஆரம்பித்தது.

 

543

 

திடீரென்று, ஒருநாள் நிஷாவிடம் 50,000 ரூபாய் பணம் மொத்தமாக கேட்க, இருவருக்குள்ளும் கருத்துமோதல் ஏற்படுகிறது. மூன்று நாட்கள் கழித்து வந்த அனந்தபத்பநாபன், "ஸ்வைதாகிட்ட (கனடாவில் போலீஸாக இருக்கும் இளம்பெண்ணின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) 50,000 ரூபாய் வங்கிட்டேன்'’ என்று நிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்தான். "என்ன ஆனந்த்… அவ, ஏற்கனவே உனக்கு ஐ லவ் யூ சொன்னான்னும் அவளுக்கு வேற யார்கூடவே நிச்சயமாகிடுச்சுன்னும் என்கிட்ட சொன்ன. அப்பவே, அவகூட பேசக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன். இப்படி நடந்துக்கிறது நம்பிக்கை துரோகமில்லையா? யாராவது ஒருத்தரை லவ் பண்ணு. இப்படி, சீட்டிங் பண்ணாத'' என்று பிரேக்-அப் சொன்னார் நிஷா. அனந்த பத்மநாபன் தனது நண்பனின் மூலம் நிஷாவைக் கெஞ்சி சமாதானப்படுத்த மீண்டும் தொடர்ந்தது காதல்.

 

சில நாட்களுக்குப் பிறகு, அனந்த பத்மநாபனின் ஃபோனுக்கு திடீரென்று ஒரு அழைப்பு. அதன், ட்ரூ காலரில் ஒரு பெண்ணின் ஃபோட்டோ வருகிறது. போனை பிடுங்கி பரிசோதித்த நிஷாவுக்கு அதிர்ச்சி. யாரிடம் பேசமாட்டேன் என்று சத்தியம் வாங்கினானோ அதே ஸ்வைதாவிடமிருந்துதான் ஃபோன். நிஷாவை போலவே ஸ்வைதாவையும் என்னவளே’ என்று சேவ் செய்து வைத்திருந்தான். விடிய விடிய வாட்ஸ்-அப் காலில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருக்கிறான்.

 

654

 

"அவ… உன்கிட்ட சொல்லிடுவேன்னு ப்ளாக்மெயில் பண்றா நிஷா. அவளை, சமாளிக்கத்தான் பேசினேன்'' என்று சொல்லி மீண்டும் சமாளித்தான். குடும்பத்தினரை வைத்துப் பேசினான். மீண்டும் காதல் தொடர்ந்தது. திடீரென்று நிஷாவை நிராகரிக்க ஆரம்பித்தான். "இங்கப்பாரு ஆனந்த். உன்னை நான் உண்மையா லவ் பண்றேன்னு நிரூபிக்க என் உடம்புல பிளேடால எழுதவெச்சு, இரத்தம் சிந்தவெச்சிருக்க. அதுவும், கல்யாணம் பண்றேன்னு சொல்லி என்கூட ஒண்ணா இருந்துட்டு இப்போ அவாய்ட் பண்றியே... இது, மிகப்பெரிய குற்றம். தயவு செஞ்சு மன்னிச்சுடு'' என்று காலில் விழுந்து கெஞ்சினார் நிஷா.

 

"நீ எனக்கு மட்டுமே அடிமையா கிடக்கணும்ங்குறதுக்காக உன் உடம்புல பிளேடால என் பேரை எழுத வெச்சேன். ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணினாத்தான் அதை அழிக்கமுடியும். அதனால நான், சொல்றபடி மட்டும் நடந்துக்கோ'' என்று எச்சரித்தபடி தொடர்ந்திருக்கிறான். அதேநேரத்தில், ஸ்வைதாவிடமும் காதல் வலைவீசி பணம் பறித்திருக்கிறான் அனந்த பத்பநாபன். அதற்கு, அவன் போட்ட ட்ராமா தமிழ் சினிமா காட்சிகளையே ஓவர்டேக் செய்கிறது.

 

567

 

கனடாவில் இருக்கும் ஸ்வைதாவுக்கு திடீரென்று ஒரு நாள் பெண் டாக்டர் ஒருவரின் செல் நம்பரிலிருந்து வாட்ஸ்-அப் மெசேஜ் வருகிறது. "உங்க பாய் ஃப்ரெண்டு உடம்பு முடியாம ஹாஸ்பிட்டலில் ஆபரேஷனுக்கு அட்மிட் ஆகியிருக் காரு. அவர்கிட்ட, பணமில்லாததால 22,000 ரூபாய்ல 13,000 ரூபாய் நான் கட்டிட்டேன். ஆனா, மேஜர் சர்ஜரிக்கு 1 லட்ச ரூபாய் ஆகும். உங்க பெயரையேதான் சொல்லிக்கிட்டே இருக்காரு'' என்று மெசேஜ் வந்துள்ளது. ஆனால், பிறகுதான் தெரிந்தது, பெண் டாக்டர் பேசுவதுபோல ஸ்வைதாவிடம் பணம் கேட்டு சாட்டிங் செய்ததே அனந்த பத்பநாபன்தான். அதுவும், நிஷாவிடம் பேசிக்கொண்டிருக்கும் செல்ஃபோன் நம்பர். அது மட்டுமல்ல, அஸ்வினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற கல்லூரி மாணவியிடமும் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருப்பது இரண்டு இளம் பெண்களுக்கும் தெரியவந்து அதிர்ச்சி யடைந்திருக்கிறார்கள்.

 

மேற்கண்ட தகவல்களை நம்மிடம் கூறி கண்ணீர்வடித்த நிஷா, "இப்படி, தொடர்ந்து என்னைப்போன்று பல பெண்களை காதல் என்கிற பெயரில் ஏமாற்றி பணம் பறிப்பதை அவன் நிறுத்தணும். அவன் இஷ்டத்துக்கு அனுபவிக்கணும்னு தான் காதல்ங்குற பெயர்ல பெண்களின் உடலில் பிளேடால் பெயரை எழுதச் சொல்றான். இனிமேலும் வேறு எந்தப் பெண்ணும் இவ்ளோ கொடூரங்களையும் ஏமாற்றங்களையும் அனுபவிக்கக்கூடாதுன்னுதான் எனது குடும்பத்தினருடன் அவனது வீட்டிற்குப் போயி நியாயம் கேட்டோம். கூலாகக் கேட்டுக்கொண்டிருந்த அவனது அம்மா துளசியும் அப்பா பார்த்தசாரதியும், "என் பையன் கேவலமானவன்தான். நாங்களே, ஒத்துக்கிறோம். இவ்ளோ கேவலமானவன்னுதான் தெரியுதுல்ல. நீ எதுக்கும்மா அவன்கூட பேசின?''ன்னு அசால்டா கேட்டாங்க. அவங்க அம்மாவும் அவனுக்கு சப்போர்ட்டு.

 

"உன்னால ஒண்ணும் பண்ண முடியாது. போலீஸ்கிட்ட போவியா... மீடியாக்கிட்ட போவியா... யாராலையும் என்னை ஒண்ணும் பண்ணமுடியாது. நீ பொண்ணு, நான் பையன். நான் ஈஸியா தப்பிச்சுடுவேன்'' என்று கெத்தாக பேசி அனுப்பினான் அனந்தபத்மநாபன். அவன், சொன்னது போலவேதான் காவல்துறையில் நடந்தது'' என்று கண் கலங்குகிறார்.

 

தான், வேலைபார்க்கும் லிமிட்டில் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதியும் டி.சி. ஜெயலட்சுமியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. "உன் புகாரை மட்டும்தான் உட்கார்ந்து பார்த்துக்கிட்டிருக்க முடியுமா?'' என்று அலட்சியப்படுத்தி அனுப்பிவிட்டார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவு டி.சி. ஜெயலட்சுமி. வேண்டுமென்றே, அனந்தபத்மநாபனை கைதுசெய்யாமல் பாதிக்கப் பட்டவர்களையே அலைக்கழித்திருக்கிறார்.

 

"அப்போதைய, கமிஷனர் உத்தரவுப்படி எஃப்.ஐ.ஆர். போட்டபிறகும் கூட அவனது, அப்பா பார்த்தசாரதி ஸ்டேஷனுக்கு வந்து அவனுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலில் இருக்கான்னு பொய் சொல்லிட்டுப்போறாரு. அட்மிட் ஆகியிருக்கானான்னுகூட செக் பண்ணாம பேசி அனுப்பிட்டாங்க இன்ஸ்பெக்டர் ஜெயபாரதியும் எஸ்.ஐ. மாணிக்கவாசுகியும்'' என்ற குற்றச்சாட்டு எழ, மயிலாப்பூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதியை தொடர்புகொண்டு கேட்டபோது, "நீங்க எதுக்கு இதுபற்றி கேட்குறீங்க?'' என்றவர், "ஹலோ… ஹலோ'' என்று வேண்டுமென்றே சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்தார். மீண்டும் தொடர்புகொண்ட போது அட்டெண்ட் செய்யவில்லை.

 

http://onelink.to/nknapp

 

டி.சி. ஜெயலட்சுமிக்கு மெசேஜ் அனுப்பியும் ஃபோன் அட்டெண்ட் செய்யவில்லை. இப்போதும், புகார் கொடுத்த பெண்ணை மிரட்டிக் கொண்டிருக்கிறது அனந்தபத்ம நாபன் தரப்பு. இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட அனந்தபத்மநாபனை தொடர்புகொண்டபோதும் மெசேஜ் அனுப்பியபோதும் விளக்கம் அளிக்கவில்லை.

 

இதுபோன்ற, சீட்டிங் இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுப்பதே அரிது. அப்படிப் புகார் கொடுக்கும் போது நடவடிக்கை எடுக்காமல் முன்ஜாமீன் வாங்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு நீதிமன்றத்தைக் காரணம் காண்பித்துத் தப்பித்துக்கொள்கிறார்கள் காவல் துறையினர். இந்தப் புகாரிலேயே, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இவனிடம் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் எப்படிப் புகார் கொடுக்க முன்வருவார்கள்?

 

பொள்ளாச்சி காமக் கொடூரர்களையும் கன்னியாகுமரி காசி போன்ற பாலியல் மிருகங்களையும் உருவாக்குவதற்கு போலீஸின் இத்தகைய அலட்சியப் போக்கே காரணமாகிறது.

 

 

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.