Skip to main content

தட்டிக்கேட்டால் வழக்கா..? என்னங்க சார் உங்க சட்டம்?

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

ஜனநாயகத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உலக அரங்கில் தனிச்சிறப்பு எப்போதுமே நம் இந்திய நாட்டுக்கு உண்டு. சமீப காலமாக, இந்தக் கூறுகளின் இருப்பு குறித்த சந்தேகம் பலருக்கும் எழுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் மத துவேஷங்கள் பரப்பப்படுவதும், எதிர்க்குரல்களை தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்கப்பார்ப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்தான் அந்த சந்தேகத்துக்கான காரணம். 

 

case filed on manirathnam for writing letter to modi

 

 

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆட்சியைப் பிடித்த சமயத்தில் பசு குண்டர்களால் கொல்லப்பட்ட பெஹுலுகான் தொடங்கி, சமீபத்தில் ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி சித்தரவதை செய்தே பிணமாக்கப்பட்ட தப்ரீஷ் அன்சாரி வரை எல்லாவற்றிற்குப் பின்னும் மதஅரசியல் வலுவாக பிணைந்திருக்கிறது. இஸ்லாமியர்களும், பட்டியலின மக்களும் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையைக் குறித்து வேதனைப் படுவதாக பிரதமர் மோடியே திருவாய் மலர்ந்தாலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாகத் திரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

இதையெல்லாம் எண்ணி வருந்தித்தான் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள், கும்பல் கொலைகளை இனியேனும் இந்த நாடு சகித்துக் கொள்ளக்கூடாது. உடனடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், இந்த நாடு அதன் ஜனநாயக முகத்தை இழந்துவிடும் என பிரதமர் மோடிக்கு கூட்டாக கோரிக்கை கடிதம் எழுதினார்கள். 

 

case filed on manirathnam for writing letter to modi

 

அந்தக் கடிதத்தில், “நமது நாட்டில் சமீபகாலங்களில் நிகழ்ந்த பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு நாடு; இங்கு எல்லா பேதங்களைக் கடந்தும் அனைத்து மக்களும் சமம் என்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெறவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறோம்.

முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், அதில் ஈடுபட்டதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் வெகுசிலரே. 

'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அல்ல. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் நேரும் அவப்பெயரை நீங்கள் தடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.  

 

case filed on manirathnam for writing letter to modi

 

ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடச் சொல்பவர்களால் நிகழும் வன்முறைகளைக் களையச் சொல்லும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, மீண்டும் பிரபலங்கள் சிலர் எழுதிய கூட்டுக்கடிதம் ஒன்று பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்தமுறை ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடுபவர்களுக்கு ஆதரவாக அது இருந்தது. கங்கனா ரனாவத், பிரஷூன் ஜோஷி, சோனால் மான்சிங் உள்ளிட்ட 61 பேர் எழுதி இருந்த அந்தக் கடிதத்தில், “ஜெய் ஸ்ரீராம் எனும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. எல்லா வன்முறைகளுக்கும் இவர்களே காரணம் என்று சொல்வது தவறு” என குறிப்பிட்டிருந்தனர். 

பிரதமர் மோடி தனக்கு எழுதப்பட்ட இந்த இரண்டு கடிதங்களுக்குமே எந்தவித சலனத்தையும் காட்டவில்லை. கடந்த ஜூலை மாதம் இந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட நிலையில், தற்போது மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வழக்குப்பதிய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

case filed on manirathnam for writing letter to modi

 

தனது புகார் மனுவில், “தேசத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்கள், சீரிய முறையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள் மற்றும் பிரிவினைவாதப் போக்குகளைக் கடைபிடிக்கிறார்கள்” போன்ற குற்றச்சாட்டுகளை இந்த 50 பிரபலங்களின் மீதும் சுமத்தியிருக்கிறார் சுதிர்குமார் ஓஜா. 

“கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவதால் மக்கள் ’ஆண்டி இந்தியன்’ என்றும் ’அர்பன் நக்சல்ஸ்’ என்றும் அடையாளப் படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கிறது. அதில் எதிர்ப்பு தெரிவிப்பதும் கூட அடங்கும்” என மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களும் தங்களது கடிதத்தில் அழுத்தமாகக் கூறியிருந்தனர். அதனாலேயே இன்று ஆண்டி இந்தியன்களாகவும், அர்பன் நக்சல்களாகவும் ஆக்கப்பட்டு, கூடவே வழக்கும் பதிந்திருக்கிறார்கள் அவர்களின் மீது. 

 


Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.