ADVERTISEMENT

பஸ் தொழிலாளர்கள் போராட்டம் சரியா?

09:54 PM Jan 05, 2018 | Anonymous (not verified)

பஸ் தொழிலாளர்கள் போராட்டம் சரியா?

பஸ் தொழிலாளர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலவரையற்ற வேலைநிறுத்தம் என்பது பொதுமக்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது தெரிந்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



அவர்களுடைய போராட்ட உரிமையை நாம் மறுக்கமுடியாது. ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென்று போராட்டம் என்பதும், பஸ்களை கண்ட இடத்தில் நிறுத்திவிட்டு, பயணிகளை நடுவழியில் இறக்கிவிடுவதும், எந்த வகையில் நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

எதுவரைக்கும் டிக்கெட் எடுத்தார்களோ அந்த இடம்வரை கொண்டு போய்விட வேண்டியது பஸ் ஊழியர்களின் கடமை அல்லவா? பஸ் ஊழியர்களின் குடும்பத்தினரை இப்படி நடுவழியில் இறக்கி விடுவார்களா? என்றெல்லாம் பயணிகள் கேட்பதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

ஆனால், பஸ் ஊழியர்களும் மனிதர்கள்தானே. அவர்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பதை யோசித்து பாரத்தால், அவர்களுக்கும் அரசாங்கத்தை நிர்ப்பந்தம் செய்வதற்கு வேறு வழி இல்லை என்பது புரியவரும்.

அரசாங்கம் தனது ஊழியர்களுக்கு நியாயமாக செய்யவேண்டிய கடமைகளை முறையாக செய்ய வேண்டும் என்பதற்காகவே பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அதுமட்டுமில்லை, ஊழியர்களின் சேமிப்பு பணம் 7 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து செலவழித்த அரசாங்கம், இப்போது அதை கொடுக்க தயங்குவதால்தான் பிரச்சனையே உருவாகி இருக்கிறது.

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை கொடுக்கும் திட்டத்திற்கு 484 கோடி ரூபாய்.. பொங்கல் பை கொடுக்கும் திட்டத்துக்கு 210 கோடி ரூபாய்..

மொத்தமாக 694 கோடி ரூபாய் போகப்போகுது.. இந்த இலவச - வேட்டி சேலை, மற்றும் பொங்கல் பையால் உண்மையிலேயே பயனடையும் மக்கள் வெறும் 20 சதவீதம்தான்..

ஆக மொத்தமாக ஒதுக்கப்படும் 694 கோடி ரூபாயில், 550 கோடி ரூபாயை அமைச்சர்களும் அதிகாரிகளும் விழுங்கப் போகிறரார்கள். அதாவது ஊழல் மற்றும், அவசியமில்லாதவர்களுக்கு போய் வீணாகப்போகிறது..

ஆனால் இன்னொரு பக்கம், ஆண்டுக்கணக்கில் தங்களுடைய பணத்தைக் கேட்டு போராடிவரும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை..

இந்த அரசாங்கத்தை என்னவென்று சொல்வது.. மாவட்டம்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது. பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை கொடுக்கிறேன், பொங்கல் பை கொடுக்கிறேன்னு கஜானாவை காலி பண்றதெல்லாம் டூமச்.. த்ரீ மச் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மொத்தத்தில், எடப்பாடி அரசாங்கம் மேற்படி மூன்று செலவகளிலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால், புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி இருந்தால் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்தியிருக்கலாம் என்று விவரம் தெரிந்தவர்கள் கணக்கு சொல்கிறார்கள்.



இப்பவும் என்ன கெட்டுப்போச்சு. முதல்வரும் அமைச்சர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்தத் தொகையை தங்களுக்கு மிச்சப்படுத்தி இருப்பார்கள் என்று கமுக்கமாக சிரிக்கிறார்கள் எதிர்க்கட்சிக்காரர்கள்.

பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி போக்குவரத்து தொழிலாளர்கள்தான்.

- ஆதனூர் சோழன்
படங்கள் - அசோக் குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT