Skip to main content

பட்ஜெட் 2020: முக்கியத்துவம் பெருகின்றவை எவை? – ஒரு பார்வை!

Published on 01/02/2020 | Edited on 03/02/2020

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2020-2021 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற காஷ்மீரி மொழிக்கவிதை ஒன்றை வாசித்துக் காட்டி, தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார். இந்த பட்ஜெட் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல், சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் ஆகிய மூன்று நோக்கங்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது.

 

 Budget 2020: What's Increasingly Important? - one look!


விவசாயத்தைப் பெருமிதப்படுத்தி ஆத்திச்சூடியில் எழுதப்பட்டிருக்கும் பூமி திருத்தி உண் என்ற வரிகளைப் படித்துக்காட்டி, விவசாயத்திற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.


விவசாயம்


விவசாயத் துறையை மேம்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட்டில் 16 அம்ச திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் விதமாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்களை அமைக்க, 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


கிராமங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தான்யலட்சுமி என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இதன்கீழ் விதைகளை சேமித்து விநியோகிக்கும் செயல்பாடுகளில் கிராமப்புற பெண்கள் ஈடுபடுவார்கள். பெண்களுக்கான திட்டங்களுக்காவே 28 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். விளைபொருட்களைக் கொண்டுசெல்ல தனி ரயில்கள் கிசான் ரயில் என்ற பெயரில் இயக்கப்படவுள்ளன. தேசிய, சர்வதேச விமானப் போக்குவரத்து மூலம், விவசாயப் பொருட்களை கொண்டுசெல்ல, கிருஷி உடான் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும். விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி நிதி கடனாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மொத்தமாக விவசாயத் துறைக்கு மட்டும் 2.83 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


சுகாதாரம்


தூய்மை இந்தியா திட்டத்திற்காக 12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள். காசநோயை இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க, 2025-ஆம் ஆண்டு காலக்கெடுவாக நிர்ணயிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டை விட 13 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கியதன் மூலம், இந்த ஆண்டுக்கான சுகாதாரத்துறைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 112 மாவட்டங்களில் சிகிச்சை அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுபோக, சுத்தமான காற்றுக்காக தனியாக 4 ஆயிரத்து 150 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

 

 Budget 2020: What's Increasingly Important? - one look!



கல்வித்துறை


கல்வித்துறைக்காக இந்த ஆண்டு 99 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். விரைவில் புதிய கல்விக்கொள்கை அறிவிக்கப்படு. கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேசிய போலீஸ் மற்றும் தேசிய தட அறிவியல் துறைக்கென பிரத்யேக பல்கலைக்கழகம் அமைக்கப்படும். திறன் மேம்பாட்டுக்கென தனியாக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

அரசுப் பணியாளர் தேர்வு செய்யப்படும் முறையில், புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப் படவுள்ளன. தொடக்க நிலை அரசு பணியாளர்களைத் தேர்வுசெய்ய, தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.


நீர்வளம்


இனிவரும் நாட்களில் குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் செய்ய, நாடு முழுவதும் வீடுகளுக்கு குடிநீர்க் குழாய்கள் மூலம் நீர் வழங்க, ஜல் ஜீவன் என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. இதற்காக, 3.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. மேலும், நீர் வளத்திற்கென 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


வருமான வரி
 

 Budget 2020: What's Increasingly Important? - one look!

 

தனிநபர் வருமானத்தில் 5 லட்ச ரூபாய் வரை பெறுவோர், வருமான வரி கட்டத் தேவையில்லை. 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் இனி 10 சதவீதமும், 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பெறுவோர் 15 சதவீதமும், 12.5 லட்ச ரூபாய் வரை பெறுவோர் 20 வருமான வரி செலுத்தினால் போதும். 15 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுவோருக்கான வருமான வரியில் 30 சதவீதம் என்ற பழைய நிலையே தொடரும். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.


தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக 85 ஆயிரம் கோடி ரூபாயும், பழங்குடியினர் நலனுக்காக 53 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை முற்றிலுமாக ஒழிக்க, விரைவில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. அதேபோல், நீண்ட காலமாக விவாதத்தில் இருக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவு பற்றியும் நிதியமைச்சர் பேசியிருக்கிறார். மருத்துவத்துறையிலும் தனியார் மயத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்து, அதன்மூலம் 2.1 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


அரசின் பொருளாதார செயல்பாடுகளின் மூலம், 2021-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும். அரசின் மொத்த செலவு 30 லட்சம் கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை மூன்றரை சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.


சுமார் 2 மணி 43 நிமிடங்கள் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் மிகநீண்ட பட்ஜெட் உரையை வாசித்த இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கால அளவை பொறுத்து மிகப்பெரிய உரையாக இதனை எடுத்துக்கொண்டாலும் வேலைவாய்ப்பு, இளைஞர்களின் எதிர்காலம் போன்ற அடுத்த தலைமுறைக்கு தேவையான பல விஷயங்கள் தேடித் துழாவினாலும் கிடைக்காத வகையில், திட்டங்கள் ரீதியாக குறுகிய உரையாகவே பார்க்கவேண்டியுள்ளதாக பல கருத்துகளும் எழுந்து வருகின்றன. மிகநீண்ட பட்ஜெட் உரை என்பதை கடந்து, பல வளர்ச்சி திட்டங்கள் இதில் இருக்கின்றன என பாஜகவினர் கூறும் அதேநேரம், இது ஒரு வெற்று அறிக்கை என ஒருதரப்பு இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.