Skip to main content

பிடி சோற்றுக்குள் முழுப் பூசணியை மறைக்க முடியுமா மோடி? 

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

budget

 

ஆண்டுக்கு ரெண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று ஆரவாரமாக பேசி ஆட்சிக்கு வந்த மோடி, தான் விரித்த பொய் வலையில் தானே சிக்கிக்கொண்டார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக தனது பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவதற்காக, 2011 ஆம் ஆண்டிலிருந்தே பொய்ப் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. எதிர்க்கட்சிகளில் ஆறு நாளைக்கு ஆறு பிரதமர் என்று கேலி பேசுகிறார் பாஜக தலைவர் அமித் ஷா. ஆனால், பாஜகவுக்காக ஒரு பிரதமர் வேட்பாளரை பில்டப் செய்வதற்கு 3 ஆண்டுகளும் 30 ஆயிரம் கோடி ரூபாய் பிரச்சார செலவும் ஆனதை வசதியாக மறந்துவிட்டார்.
 

இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமருக்கென்று உடை வடிவமைப்பாளரும், அலங்கார நிபுணரும் மோடியின் ஆட்சியில்தான் நியமிக்கப்பட்டார்கள். இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களையே உபயோகிக்க வேண்டும், மேக் இன் இந்தியா, கதர் மற்றும் கைத்தறி வளர்ச்சி என்று மேடயில் முழங்கிய மோடி, 10 லட்சம் ரூபாய்க்கு தங்க இழைகளால் நெய்யப்பட்ட கோட் சூட்டை அணிந்து காட்சி அளித்தார்.
 

வளர்ச்சி, வளர்ச்சி என்று மோடி பேசியதெல்லாம் இந்த வளர்ச்சியைத்தானா என்று சாமானியர்களே கேட்கும் நிலை உருவானது. எதற்கெடுத்தாலும் ஏழைத்தாயின் மகன் என்றும், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றும் அழுது புலம்பும் மோடி, அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சேவகம் செய்ததைத் தாண்டி எதுவுமே செய்யவில்லை என்ற உண்மை நாட்டு மக்களுக்கு தெரிந்துவிட்டது.
 

மோடி ஒரு மோசடிப் பேச்சாளர் என்பது அம்பலமான பிறகு, இந்திய மக்கள் விழித்துக்கொண்ட பிறகு கடைசிக்கட்ட ஏமாற்று முயற்சிகளை பாஜகவும் மோடியும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை வெளியிடாமல் மறைத்து வந்த மோடி அரசின் பித்தலாட்டத்தை அந்த புள்ளியியல் துறையில் இருக்கும் அதிகாரிகளே அம்பலப்படுத்தியுள்ளனர். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 

2011-2012 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய ஒன்றியத்தின் வேலையில்லா திண்டாட்டம் 2.2 சதவீதமாக இருந்தது. ஆனால், அது இப்போது நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமாகம், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது என்று தேசிய புள்ளியியல் கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது. தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் புள்ளிவிவர அறிக்கையை வெளியிடாமல் பதுக்கி வைத்ததின் மூலம் நம்பகத்தன்மையை அரசு இழந்திருக்கிறது என்று தொழில்துறை பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையிலேயே ஏராளமான வேலைவாய்ப்பின்மையை நாங்கள் அறிந்தோம். மோடியின் பணமதிப்பிழப்பு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தோம் என்கிறார் ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக பேராசிரியர் அமித் பஸோல்.
 

பணமதிப்பிழப்புக்கு பிறகு வேலையின்மை அதிகரிக்கும், தொழிலாளர் பங்கேற்பு விகிதாச்சாரம் குறையும் என்று நாங்கள் ஏற்கெனவே கூறியதை இந்த புள்ளிவிவரம் உறுதிசெய்கிறது என்றார் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ். வேலையின்மை அதிகரிக்கும்போது தொழிலாளர் பங்கேற்பு விகிதாச்சாரம் குறைந்தால் கடுமையான விளைவை ஏற்படுத்தும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனாமித்ரா ராய் சவுதரி கூறினார்.
 

தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் புள்ளிவிவரத்தின்படி 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் மத்தியில்தான் வேலையின்மை அதிகரித்திருக்கிறது என்று வேலை தேடும் இளைஞர் அமைப்பின் நிறுவனரான அனுபம் தெரிவித்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கோபத்தை நாங்கள் பார்த்தோம் என்கிறார் அவர். உண்மை நிலைமை இப்படி இருக்க மத்திய அரசு முழுப்பூசணிக்காயை பிடி சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியை பட்ஜெட் மூலம் மறைக்க பார்க்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையிலேயே கூறியிருக்கிறார்.
 

“பணமதிப்பிழப்புக்கு முன்னர் மாதத்தில் 20 நாட்கள் வேலை செய்தோம். ஆனால், இப்போது 10 நாட்கள் வேலை கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது” என்று பியூஷ் கோயலுக்கு கிராமப்புற மக்கள் பதில் அளிக்கிறார்கள்.

 

 

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.