Skip to main content

ஆங்கிலேயர் கால தமிழ் எண் மைல்கல்  கண்டெடுப்பு

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

British Era Tamil Numerical Milestone Survey

 

விருதுநகரில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட சுமார் 150 ஆண்டுகள் பழமையான ஆங்கிலேயர் கால மைல்கல் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் செந்திவிநாயகபுரத்தில் அருப்புக்கோட்டை செல்லும் பழைய சாலையில் தமிழ் எண் பொறிக்கப்பட்ட மைல்கல், முத்து முனியசாமியாக வழிபாட்டில் இருப்பதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டறிந்தனர்.

 

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "ஆங்கிலேயர் ஆட்சியின் தொடக்க காலங்களில் மைல்கற்களில் ஊர்ப்பெயர்களை ஆங்கிலம், தூரத்தை ரோமன், தமிழ், அரபு எண்களிலும் பொறித்து வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மைல்கற்களை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். விருதுநகரில் தற்போது கண்டறியப்பட்டுள்ள மைல்கல்லில் VIRUDUPATI என ஆங்கிலத்திலும், விருதுபட்டி என தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. இங்கிருந்து விருதுநகர் ரயில் நிலையம் வரை உள்ள தூரத்தை 1 மைல் என அரபு எண்ணிலும், ‘௧’ என்ற தமிழ் எண்ணிலும் மைல்கல்லில் குறித்துள்ளனர். ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. கல்லில் கருப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளதால் இதன் எழுத்துகள் தெளிவாக இல்லை. இக்கல் வழிபாட்டில் உள்ளதால் பாதுகாப்பாக உள்ளது.

 

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து 1915ல் நகராட்சியான விருதுநகர், 1923க்கு முன் விருதுபட்டி என அழைக்கப்பட்டது. மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை ரயில் பாதை போட்டபோது, 1876ல் விருதுபட்டியில் இரயில் நிலையம் வந்தது. இதனால் இவ்வூர் முக்கிய வர்த்தக நகரானது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இது உதவியது. இப்போதும் கூட இவ்வூர் ரயில் நிலைய சுருக்கக் குறியீடு விருதுபட்டியைக் குறிக்கும் VPT தான். அருப்புக்கோட்டையின் உற்பத்திப் பொருட்கள் வண்டிகள் மூலம் விருதுபட்டி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஏற்றுமதி ஆயின. பொருட்களை விரைவாக கொண்டு செல்ல அருப்புக்கோட்டையிலிருந்து சரளைக்கல் சாலை போடப்பட்டபோது, இம்மைல்கல் வைக்கப்பட்டிருக்கலாம். தற்போது வைக்கப்படும் மைல்கல் போல இல்லாமல் ஒரு பக்கம் மட்டும் ஊர்ப்பெயர்கள் எழுதப்பட்டு சாலையைப் பார்த்தவாறு நிறுவப்பட்டிருக்கும்.

 

மேலும் விருது என்ற சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம், மரபுவழி எனப் பல பொருள்கள் உண்டு. முல்லை நில ஊர்கள் பட்டி எனப்படும். பெருங்கற்காலம் முதல் காசி, கன்னியாகுமரி பெருவழிப் பாதையில் வெற்றிச் சின்னமாக, வணிகம் சார்ந்த ஒரு ஊராக இருந்ததால் இவ்வூர் விருதுபட்டி என பெயர் பெற்றதாகக் கருதலாம். ராமநாதபுரம் மாவட்ட விவரச்சுவடி இவ்வூர் ‘விருதுகள் வெட்டி’ என முன்பு அழைக்கப்பட்டதாகக் கூறினாலும், ஆங்கிலேயர்களின் பதிவுகளில் விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தபோது, 1869-ல் வெளியிடப்பட்ட நூலில் விருதுபட்டி என்றே இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மைல்கல்லின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி.1875க்கு முன் நடப்பட்டதாகக் கருதலாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.