Skip to main content

பா.ஜ.க.வின் அஜெண்டா... ரகசிய பேரம்? ராகுல் அதிர்ச்சி!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

dddd

 

சட்டமன்ற தேர்தலில் ‘மிஷன் 200' என்கிற இலக்கை அடைவதற்கான திட்டத்தில் செயலாற்றி வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். 200 தொகுதிகளில் உதயசூரியன் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் டார்கெட். இதனைப் பக்குவமாக கூட்டணி கட்சிகளிடமும் தெரிவித்து வருகிறது அறிவாலயம்.

 

இதில் காங்கிரசுக்கு மட்டும் இரட்டை இலக்க அளவில் சீட் என்றாலும், தி.மு.க. சொல்லும் எண்ணிக்கையை ஏற்கும் மனநிலையில் காங்கிரஸ் இல்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்வையிட மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, சீட் பற்றி தி.மு.க. தலைமையிடம் பேசி முடிக்கலாம் என்கிற ப்ளானும் நிறைவேறாததால் அவர் அப்செட் என்கிறார்கள்.

 

ராகுல் காந்திக்கு நெருக்கமான தமிழக எம்.பி. ஒருவர், “தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுக்க அதி.மு.க. - பா.ஜ.க. கட்சிகள் ஏகப்பட்ட திட்டங்களைப் போட்டுள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக 190-200 இடங்களில் போட்டியிட தி.மு.க. தீர்மானித்திருப்பதால் காங்கிரசுக்கு 15 இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்றும் தி.மு.க. தரப்பிலிருந்து ராகுல் காந்திக்கு தெரியப்படுத்தப்பட்டுவிட்டது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. 2011-ல் 63 சீட்டுகளும், 2016-ல் 41 சீட்டுகளும் தி.மு.க. கூட்டணியில் பெற்ற காங்கிரஸ், அதே எண்ணிக்கையைக் கேட்டு அடம்பிடிக்கவில்லை. ஆனால், 30 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ள முடிவு செய்திருந்தார் ராகுல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் மட்டும் கூட்டணி; புதுச்சேரிக்கு வேண்டாம் அல்லது தமிழகம் போல புதுச்சேரியிலும் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி எனவும் தி.மு.க. தெரிவித்ததில் ராகுலுக்கு கூடுதல் அதிர்ச்சி.

 

இப்படிப்பட்ட சூழலில்தான், ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக தனி விமானத்தில் மதுரைக்கு வந்த ராகுல்காந்தி, மதுரை தாஜ் ஹோட்டலில் மு.க.ஸ்டாலினை சந்திக்க நினைத்தார். அதுகுறித்து தி.மு.க. தலைமைக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இந்த விசயங்கள் எதுவுமே தமிழக காங்கிரசுக்குத் தெரியாது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு ராகுல் வருவதே முதல்நாள்தான் கே.எஸ்.அழகிரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.

 

மதுரையில் ஜல்லிக்கட்டைப் பார்க்க ராகுல் வந்தபோது, அவர் அருகில் இருந்தார் உதயநிதி. சாதாரணமாக பேசிக்கொண்டனர். சீட் பற்றி ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி பேசுவார் என சொல்லப்பட்டதால் அப்செட்டாகி, தாஜ் ஹோட்டல் விசிட்டை ரத்து செய்து, பொது மக்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு டெல்லிக்குப் பறந்துவிட்டார் ராகுல். அவரை ஸ்டாலின் சந்தித்திருந்தால், சீட் விஷயத்தைத் தாண்டி கூட்டணியின் கௌரவம் வெளிப்பட்டிருக்கும். தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் அஜெண்டாவுக்கு தி.மு.க. சம்மதிக்கிறதோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

 

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களைக் காலி செய்து வரும் மோடியும் அமித்ஷாவும், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க.விடம் ரகசிய பேரங்களை நடத்தியுள்ளதாகவும், அதனால்தான் அங்கே கூட்டணி இல்லை என்று சொல்வதாகவும் ராகுல், சோனியா உள்பட மூத்த தலைவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது. புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி இல்லையெனில், அது தமிழகத்திலும் கூட்டணி முறிவுக்கு வழி வகுக்கும்.

 

dddd

 

மதுரையிலிருந்து டெல்லி திரும்பியதும் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் முகுல் வாஸ்னிக், ஏ.கே.அந்தோணி, வேணுகோபால் ஆகியோரிடம் விவாதித்துள்ளார் ராகுல்காந்தி. அப்போது, கூட்டணியிலிருந்து காங்கிரசே விலகிச் செல்ல வேண்டும்கிற சூட்சமத்தை தி.மு.க. கையாள்கிறது. அது அவர்களுக்குத்தான் நட்டம். புதுச்சேரியை நாம் விட்டுக்கொடுத்தால் தமிழகத்திலும் கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளனர். ராகுலும் அந்த யோசனையில் இருப்பதால் சோனியாவின் முடிவுக்காக காத்திருக்கின்றனர்'' என்று விரிவாக சுட்டிக்காட்டினார் காங்கிரஸ் எம்.பி.!

 

தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்தபோது, "காங்கிரஸை ஸ்டாலின் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், காங்கிரசுக்கு மட்டுமல்ல, தோழமைக் கட்சிகளுக்கு அதிக இடங்களில் சீட்டுகள் ஒதுக்குவது அதி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்குத்தான் சாதகமாகும். இதைத் தடுக்க, அந்த கூட்டணிக்கு எதிராக தி.மு.க. போட்டியிடுவதுதான் புத்திசாலித்தனம். காங்கிரஸ் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு சொற்ப எண்ணிக்கையில் ஜெயிப்பதை விட, குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டு அத்தனை சீட்டுகளும் ஜெயிப்பதுதானே லாபம்? புதுச்சேரியைப் பொறுத்தவரை, தனித்துப் போட்டியிடலாம் என அங்குள்ள தி.மு.க. சீனியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

 

தற்போதைய சூழலில், முதல்வர் நாராயணசாமியை மீண்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் நிச்சயம் பா.ஜ.க. - அதி.மு.க. கூட்டணி ஆட்சியைப் பிடித்துவிடும். அமைச்சர் நமச்சிவாயம் உட்பட 5-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவ தயாராகி வருகிறார்கள். பா.ஜ.க.வைத் தடுக்கும் வியூகத்தில்தான் தி.மு.க. உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினிடம் இதனைச் சொல்லியுள்ளார். அதி.மு.க. - பா.ஜ.க. தலைவர்கள் போடும் கணக்குகளைக் கவனித்துதான், அதனை முறியடிக்க பல்வேறு வியூகங்களுடன் தோழமைக் கட்சிகளை அணுகுகிறது தி.மு.க.'' என்கின்றனர் தி.மு.க. எம்.பி.க்கள்.

 

புதுச்சேரியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதன் மூலம் பல்வேறு மாங்காய்களை அடிக்கத் திட்டமிடும் அமித்ஷா, புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்குள் கொண்டு வரும் அசைன்மெண்டை துவக்கியிருக்கிறார். கடந்த வாரம் டெல்லிக்கு ரகசிய விசிட் அடித்த நமச்சிவாயம், அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை சந்தித்து ஆலோசித்துள்ளார். அவர் உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்கவைத்து, முதல்வர் நாராயணசாமியின் பெரும்பான்மை பலத்தைக் குறைக்க பா.ஜ.க. திட்டமிடுகிறது. புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்த்து, தேர்தலுக்கு முன் கவர்னர் ஆட்சியைக் கொண்டு வருவதுதான் திட்டம்.

 

புதுச்சேரி மக்கள் தேசிய சிந்தனைக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என அமித்ஷாவிடம் சில சர்வேக்களின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. புதுச்சேரிக்கான ஸ்பெஷல் ப்ளான்களும் ரெடியாகி வருகின்றன.

 

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.