Skip to main content

குஜராத்தில் முடிசூடும் பாஜக? இமாச்சலில் ஆட்சியைப் பிடிக்குமா காங்கிரஸ்...? - பரபரப்பான சூழ்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

kl;

 

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கிடக்கிறார்கள். குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜகவுக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 

 

குறிப்பாகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 182 தொகுதிகளில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. கடந்த தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி 70க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று கடுமையான நெருக்கடியை பாஜக தரப்புக்கு ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது எவ்வித சிறு சலசலப்புக்கும் இடம் தராமல் பாஜக மிக உறுதியாக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் அனைவரும் ஒருசேரத் தெரிவித்துள்ளனர். 

 

இதனால் அதிகப்படியான எதிர்பார்ப்பில் இருக்கும் பாஜகவினர் குஜராத்தில் வரலாற்று வெற்றியை நிச்சயம் பதிவு செய்வோம் என்று உறுதிப்படக் கூறுகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத வகையில் தொடர்ந்து எட்டாவது முறையாக நாங்கள் ஆட்சியமைப்போம் என்று பெரிய நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆனால் டெல்லியில் இன்று நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததைப் போல் குஜராத்தில் நடைபெறாது என்று என்ன நிச்சயம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதற்குக் காரணமாக டெல்லி மாநகராட்சியைக் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாஜக வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

இதனைச் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குஜராத் பாஜகவுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட மாநிலம் அல்ல, இந்த முறை பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இழுபறி நிலை இருப்பதைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பல கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு சில இடங்கள் காங்கிரஸ் கட்சியை விடக் கூடுதலாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் சில செய்தி ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது. 


 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.