Skip to main content

வன்முறையாட்டத்தில் பாஜக; யுத்தகளமாகும் திரிபுரா! 

Published on 21/03/2023 | Edited on 28/03/2023

- க.சுப்பிரமணியன்
 

BJP Tripura issue CPIM condemn

 

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடந்து சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரிபுராவில் பாஜகவும், நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியும், மேகாலயாவில் என்.பி.பி. கட்சியும் ஆட்சியை பிடித்தன. திரிபுராவில் பா.ஜ.க. வெற்றிபெற்றதையடுத்து மாநிலம் முழுவதும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள், அவர்களது வீடுகள், கடைகள் மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் 668 இடங்களில் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே தொடர்ச்சியாக திரிபுரா முழுவதும் குண்டர்களால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் அடங்கிய உண்மை கண்டறியும் குழு பிப்ரவரி 10-ஆம் தேதி திரிபுராவுக்குக் கிளம்பியது. இக்குழுவினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டனர்.

 

இரண்டு நாள் ஆய்வுக்குத் திட்டமிட்டிருந்த நிலையில், பிப்ரவரி 10-ஆம் தேதி மாலை செபாஜிஜாலா மாவட்டம், நேஹல்சந்திரா நகரில் உண்மை கண்டறியும் குழுவே பா.ஜ.க. குண்டர்களால் தாக்கப்பட்டது. இக்குழுவினர் சென்ற வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் இரண்டு நாள் சுற்றுப்பயணம் இடையிலேயே தடைபட்டது. இதையடுத்து உண்மையறியும் குழுவினர் திரிபுரா ஆளுநர் எஸ்.என்.ஆர்யாவை பிப்ரவரி 11-ஆம் தேதி சந்தித்து, மூன்று பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர். அதில், அமைதி திரும்பவும், அரசியல் விரோதத்தை அகற்றவும், மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

 

பின்பு பி.ஆர். நடராஜன், பிகாஷ் ரஞ்சன், எளமரம் கரீம், ரஹீம், பினோய் விஸ்வம், காங்கிரஸின் அப்துல் கலீக், ஆர்.ரஞ்சன் ஆகியோரடங்கிய உண்மையறியும் குழு, அகர்தலாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியது. பாராளுமன்றத்தில் இவ்விஷயத்தை எழுப்பி தேசத்தின் கவனத்தை ஈர்ப்போம். திரிபுராவில் சட்டம் ஒழுங்கு குலைந்துவிட்டது எனக் குற்றஞ்சாட்டினர்.

 

சி.பி.ஐ. ராஜ்யசபா உறுப்பினர் விஸ்வம், “நாங்கள் திரிபுராவை அடையும்வரை வன்முறை இத்தனை தீவிரமாக இருந்திருக்கும் என நினைக்கவில்லை. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் திட்டமிட்டு வன்முறையை மேற்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் தாக்கப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள். பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்குதலை மேற்கொண்டு சூறையாடியுள்ளனர். பலர் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்.

 

வன்முறை டெல்லியிலிருந்து திட்டமிடப்பட்டது. திரிபுராவை வன்முறைக் களமாகவும் பாதுகாப்பற்ற இடமாகவும் மாற்றுவதில் உள்துறை அமைச்சகமும், அதை நடத்துபவருமே பங்கு வகிக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். பலர் அனைத்தையும் இழந்து நின்றதைப் பார்த்தோம். மோசமாகக் காயமடைந்துள்ளனர். கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களின் மறுவாழ்வுக்கு முறையான வழிவகைகள் செய்யப்பட வேண்டும்” என்றார்.

 

கரீம், கலீக், ஜிதேந்திர சௌத்ரி, அஜய் குமார் ஆகிய எம்.பி.க்கள் அடங்கிய உண்மையறியும் குழுவே குண்டர்களால் தாக்கப்பட்டதென்றால் நிலவரத்தைப் புரிந்து கொள்ளலாம். அதுவும் போலீஸ் துணைக்கு வரும்போதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குழுவுடன் துணைக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் கோபால் ராயின் கார் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

 

 

திரிபுரா தாக்குதல்கள் பற்றி கேள்வியெழுப்பிய அஜய்குமார், “திரிபுராவின் சாதாரண மக்களின் மீதான தாக்குதல்களில் போலீசார் ஏன் தொடர்ந்து பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள்? பிரதமரும், உள்துறை அமைச்சரும் இவ்விஷயம் குறித்து மௌனமாகவே இருப்பது ஏன்?” என்றார். உண்மை கண்டறியும் குழுவின் மீதான தாக்குதலை காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. அதேசமயம், அவர்களது வருகை பற்றி எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்கின்றனர்.

 

திரிபுராவைப் பார்வையிட்ட பின் வங்காளத்தைச் சேர்ந்த சி.பி.ஐ.(எம்) எம்.பி. ரஞ்சன் பட்டாச்சார்யா சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை நோக்கி, “திரிபுரா வந்து உங்கள் ஜனநாயகத்தின் தாயைப் பார்வையிடுங்கள்” எனப் பரிகாசம் செய்துள்ளார்.

 

2018-ல் திரிபுராவில் வெற்றிபெற்றதும் பா.ஜ.க. முதலில் செய்த வேலை பெலோனியா பகுதியில் லெனின் சிலையைத் தகர்த்ததுதான். 2023 தேர்தலிலும் பிரச்சாரத்தின்போதே கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. வெற்றிபெற்ற கையோடு நரவேட்டை ஆடித்தீர்த்திருக்கிறது.

 

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்தியாவின் ஜனநாயகத்தை லண்டனில் இழிவுபடுத்திவிட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி, கடுமையான கண்டனங்களை எழுப்பி, நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.