Skip to main content

4 டூ 44... பாஜகவின் விஸ்வரூப வெற்றி! சாத்தியமானது எப்படி?

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

ghmc

 

 

நேற்று வெளியான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கும். தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பாஜக மற்றும் ஒவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். போன்ற கட்சிகளின் தொண்டர்களுக்கு இன்பதிர்ச்சியாகவும் அமைந்திருக்கும்.

 

இந்தியாவின் நான்காவது பெரிய மாநகராட்சியாக செயல்பட்டு வருவது ஹைதராபாத். அப்படிப்பட்ட மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெறுவது என்பது தேசிய கட்சிகள் அந்த மாநில கட்சிகளுக்கு ஒரு முக்கியமானது, கௌரவமானது என்று பல கோணங்களில் எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே கண்டிப்பாக கடுமையான போட்டி நிலவும், அப்படிதான் இங்கும் நிலவியது. 

 

மொத்தம் 150 வர்டுகளுக்கு நடைபெற்ற இந்த மாநகராட்சி தேர்தலில் 149 வார்டுகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள ஒரு தொகுதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த வார்டின் முடிவு வெளியாகவில்லை. இந்தத் தேர்தலில் தெலங்கானா ராஷ்த்ரிய சமிதி 55 வார்டுகளில் வெற்றிபெற்று, அதிக வார்டுகளில் வெற்றிபெற்ற கட்சியாக இருந்தாலும் இது ஒரு மிகப்பெரிய சரிவு. ஆமாம், கடந்த தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் 44 வார்டுகள் குறைவாக வென்றுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது பாஜக, 48 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 4 வார்டுகளில் மட்டும்தான் வெற்றிபெற்றிருந்தது. ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 44 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையான 44 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்தது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

 

பாஜகவின் இந்த அசூர வளர்ச்சி பலரையும் வாய்பிழக்க செய்துள்ளது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அமித்ஷா, யோகி ஆதித்யநாத், தேஜஸ்வி சூர்யா, பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இராணி, ஜே.பி. நட்டா ஆகிய அனைவரும் ஹைதராபாத்தில் முகாமிட்டார்கள். எப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை மாநகராட்சி பிரச்சாரம் சூடுப்பிடித்தது. பாஜக ஒரு பக்கம் இஸ்லாமிய விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஹைதராபாத்தின் பழமை வாய்ந்த பெயரான பாக்யாநகர் பெயர், பாஜக ஆட்சியில் ஹைதராபாத்தை என்ற பெயரை தூக்கிவிட்டு சூட்டப்படும் என்று யோகி ஆதித்யநாத் பேசியது சர்ச்சையானது. சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ஆர், நமக்கு எதிரியல்ல என்பதை தெரிந்துகொண்ட பாஜக, ஒவைஸியை தாக்கியே பிரச்சாரம் செய்தது. அதேபோல கே.டி.ஆருக்கு பதிவிடுவதும், ஓவைஸிக்கு பதிவிடுவதும் ஒன்றுதான் என்று பிரச்சாரம் செய்தது. இதன் மூலமாக இந்துக்களின் வாக்கு வங்கியை அள்ளியது. இந்த தேர்தலில் பாஜகவின் இப்படியான பிரச்சாரங்களால் மத அரசியல் நன்கு கலக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், ஹைதராபாத் பல தரப்பு மக்களும், இந்தி, உருது பேசுபவர்களும் அதிகம் இருப்பதனால் வாக்கு அரசியலுக்காக வெறுப்பு பிரச்சாரத்தில் மாநில கட்சிகள் ஈடுபடாது. என்னதான் ஓவைஸியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குறைந்தளவிலான தொகுதிகளில் போட்டியிட்டு 44 இடங்களில் வெற்றிபெற்றிருந்தாலும், பாஜக வாக்குகளை பிரிப்பதால் அடுத்த தேர்தல்களில் அது அவர்களுக்கு தலைவலியாக மாறலாம்.

 

2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆளும் கட்சியான பிறகு மத அரசியல், பிளவு என்பது பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. அதன்படிதான் தெலங்கானாவில் பாஜக இந்த முக்கியமான தேர்தலில் 12 மடங்கு வளர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரிதாக தங்களின் பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை, மக்களுக்கும் அவர்கள் மீது நம்பிக்கையின்றி இருப்பதன் வெளிப்பாடாகவே இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கிறது. மத்தியில் பாஜகவுக்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ், ஏற்கனவே வலுவாக இருந்த ஓர் மாநிலத்தில் மிகவும் மோசமாக வலுவிழந்திருக்கிறது. தலைவர் யார்? உட்கட்சி பூசல், ஜூனியர் சீனியர் மோதல் என்று நாட்டு பிரச்சனைக்கு சமமாக கட்சிக்குள்ளும் ஒரு பிரச்சனையை வைத்திருக்கிறது காங்கிரஸ், அதன் வெளிபாடுதான் காங்கிரஸின் தொடர் தோல்வி. அப்படியே அவர்கள் வெற்றிபெற்றாலும் சூழ்ச்சியில் விழும் அளவிற்குதான் தங்கள் கட்சி வேட்பாளர்கள் சிலரை வைத்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து வலுவாக இருந்த டி.ஆர்.எஸ். கட்சியின் பலத்தை சோதித்துபார்த்த பாஜக, அவர்களின் 2023ஆம் ஆண்டு தேர்தல் வெற்றி கனவை சின்னாப்பின்னமாக உடைத்திருக்கிறது.

 

தற்போது நடைபெற்ற மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற பகுதிக்குள் 24 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. மொத்தம் 120 தொகுதிகள் எனும்போது, இந்த பகுதிக்குள் 20 சதவீத தொகுதிகள் அடங்குகிறது. தற்போதைய மாநகராட்சி தேர்தல் வெற்றியை பார்க்கும்போது, பாஜக இந்த பகுதிகளுக்குள் 7 முதல் 8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அதிலாபாத், கரிம் நகர் மற்றும் நிஜாமாபாத் உள்ளிட்ட வட தெலங்கானா பகுதி தொகுதிகளில் வெற்றிபெற்று வலுவான நிலையில் இருப்பதன் மூலம் பாஜக வளர்ச்சியடைந்துகொண்டுதான் இருக்கிறது. தெலங்கானாவில் கடந்த இரண்டு வருடங்களில் பாஜக நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணியாக இருப்பது கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பிறகு ஹைதராபாத்தில் ஆர்.எஸ்.எஸின் வளர்ச்சி. அதற்கு ஒரு உதாரணம் 2019ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஹைதராபாத் வந்தபோது நடந்த பேரணியைக் குறிப்பிடலாம்.

 

மேற்கு வங்கத்தில் மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் நிலையை எட்டியது பாஜக, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து 18 தொகுதிகளில் வெற்றியைக் கண்டது. இதற்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸின் திட்டமிட்டுதல், பிரச்சாரங்கள், வெறுப்பு அரசியல் போன்று அவர்களின் அடிப்படை விஷயங்கள் காரணமாக அமைந்தது. அந்த மாநிலத்தில் யாராலும் அசைக்க முடியாத ஒரு அரசியல் தலைவராக பார்க்கப்பட்ட மம்தாவை பாஜக அசைத்து பார்த்திருக்கிறது. திரிணாமூல் vs காங்கிரஸ் என்பதை திரிணாமூல் vs பாஜக என்று அனைத்துவிதமான களத்திலும் மாற்றி அமைத்திருக்கிறது.

 

கலவரத்தில் தொடங்கி தேர்தல் களம் வரை இருவரும் எதிர், எதிர் என்றாகிவிட்டது. அடுத்த வருடம் நடைபெற உள்ள மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது பாஜக. இதேதான் ஒடிஷா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்கட்சியாக இருக்க காரணம் என்று புரியவைக்கிறது. எங்கெல்லாம் காங்கிரஸ் இரண்டாம் நிலையில் இருந்ததோ, அங்கெல்லாம் பாஜக தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.