Skip to main content

அதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

திரைத்துறையினரை மட்டுமல்ல ஆளும்கட்சியினரையும் மிரள வைத்திருக்கிறது விஜய் தொடர்பான வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை. சினிமா வி.ஐ.பி.க்களோ, அரசியல் வி.ஐ.பி.க்களோ இரண்டு, மூன்று பேர் தனியாக சந்தித்துக் கொண்டாலே, ரெய்டு குறித்த கவலைகளைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள்.

டெல்லியில் கோலோச்சும் தமிழக அதிகாரிகளிடம் ரெய்டு குறித்து விவாதித்தபோது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மோடி அரசாங்கத்தை உற்றுக் கவனித்தால், வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் நடத்திய சோதனைகளில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகம்தான் என்கிற உண்மை புரியும். தேர்தல் வெற்றியை பணத்தின் மூலம் பெறலாம் என்கிற நம்பிக்கையையும் அதன் ருசியையும் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியாளர்களும் கடைப்பிடிக் கின்றனர்.

 

vijay



தேர்தலுக்காக பணத்தை பதுக்கும் அ.தி.மு.க.வின் திட்டத்தை அவ்வப்போது முறியடிக்க வேண்டும் என்பது பா.ஜ.க. தலைமையின் மறைமுக அஜெண்டா. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆளும்கட்சி தலைமை பதுக்கி வைத்த பணக்குவியல்களை 2018-லேயே வருமான வரித்துறை கணக்கெடுத்திருந்தது. அதில், எடப்பாடியின் நெருங்கிய உறவினர்களும், அவரது நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர்களும் சிக்கினர். குறிப்பாக, எடப்பாடியின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைத் துறையின் காண்ட்ராக்டர் செய்யாதுரை, எடப்பாடியின் உறவினர்களான ஈரோடு ராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் நிறுவனங்களிலும் பங்களாக்களிலும் ரெய்டு நடத்தி சுமார் 1,300 கோடி ரொக்கமாகவும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது வருமானவரித்துறை. நாடாளுமன்றத் தேர்தலுக்காக சேமித்து வைக்கப்பட்ட பணம் என்பதை விசாரணையில் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரெய்டு சமாச்சாரத்தை சுட்டிக்காட்டியே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தது பா.ஜ.க. இதற்கு பல காரணங்கள் இருந்தன. அது வேறு விசயம்.


தேர்தல் நேர ரெய்டு என்ற விமர்சனம் வராதபடி குறைந்தட்சம் 10 மாதங்கள் முன்பே ரெய்டுகளை நடத்துவது பா.ஜ.க. பாலிசி. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அ.தி.மு.க.வுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியைத் தொடர பா.ஜ.க. விரும்பவில்லை. எம்.பி. தேர்தலில் 25 சீட்டுகளில் நாம் ஜெயிப்போம் என அ.தி.மு.க. கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கூட்டணி போட்டது பா.ஜ.க. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் மக்களின் முடிவு வேறுமாதிரி இருக்கும் என பா.ஜ.க. தலைமைக்கு உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது.

 

 

dmk



இதற்கிடையே, அரசியல் கட்சி துவங்குவதை பா.ஜ.க. தலைவர்களிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் ரஜினி காந்த். அதேசமயம் அரசியல் என்ட்ரிக்கான வெற்றி வாய்ப்புகளையும் அவர் கவனிக்கிறார். அதற்கேற்ப, ரஜினி தரப்பால் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களுக்கு டெல்லி ஒப்புக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில், ஆட்சியில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு இருக்கக்கூடாது என்பது முக்கியமானது. அப்படி நடந்தால் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க ரஜினி தயங்கமாட்டார் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ரஜினியுடன் கூட்டணி உருவானால் பணத்தை வைத்து தேர்தலை எதிர்கொள்ள நினைக்கும் ஆளும் கட்சிக்கு முதலில் செக் வைக்க வேண்டும் என திட்டமிடுகிறது பா.ஜ.க. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த ரெய்டுகள்.


அதாவது, பணப் பரிவர்த்தனைகள் எதுவும் ரொக்கமாக இருக்கக்கூடாது என்பது மோடியின் செயல்திட்டம். ஆனால், தமிழகத்தில் கோடிக்கணக்கான பணம் ரொக்கமாகவே குவிக்கப்பட்டு வருகிறது என வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் பிரதமர் அலுவலகத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரிப்போர்ட் அனுப்பி வருகின்றன. இது குறித்து ரகசிய விசாரணை நடத்திய டெல்லி, தேர்தலை எதிர்கொள்ள இப்போதே ஆளும் கட்சி பிரமுகர்களும், பா.ஜ.க.வையும் ரஜினியையும் வீழ்த்த வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளும் சினிமா பிரபலங்கள் மூலம் பணத்தை தமிழகத்துக்குள் குவிக்கின்றன என்பதை தெரிந்துகொண்டு, அதனைக் கைப்பற்றவே வருமானவரித் துறைக்கு உத்தரவுகள் பறந்தன. மேலும் பலர் குறிவைக்கப்பட்டிருப்பதால் பணப்பதுக்கலை சுத்தமாக துடைத்தெறிந்து விட்டு அதன்பிறகு ஆட்சியை கவிழ்ப்பதற்கான செயல்திட்டம் விறுவிறுப்பாகும். ஆகஸ்ட் வரைதான் ஆளும்கட்சிக்கு ஆயுள்'' என்கின்றனர். தி.மு.க.வின் பண விநியோகத்தைத் தடுக்கவும் வியூகம் வகுத்துள்ளது பா.ஜ.க.

மேலும் விசாரித்தபோது, "நடிகர் விஜய் மீது வருமானவரித்துறையை விட அமலாக்கத்துறைதான் அதிகம் குறி வைத்திருக்கிறது. மோடி-ரஜினி கூட்டணி உருவானால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க கிறிஸ்துவ அமைப்புகள் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும். விஜய்யும் அதற்கு ஒப்புக்கொள்வார். அதனால், அந்நியச் செலாவணி விவகாரத்தில் விஜய்யை சிக்க வைக்க பல்வேறு வழிகளை ஆராய்ந்து சில டாகுமெண்டுகளை எடுத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர். அதன் விசாரணைதான் விஜய்க்கு சிக்கலை அரசியல்ரீதியாக ஏற்படுத்தும்'' என்கிறது அதிகாரிகள் தரப்பு.


 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.