Skip to main content

நாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.ஸை முதல்வராக்குவோம் - பாஜக தலைமை அதிரடி!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

அ.தி.மு.க.வில் கடந்த பதினைந்து நாட்களாக வீசிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.சுக்கும் இடையே வீசிய புயலின் சுவடே தெரியாமல் புதன்கிழமை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் மிக அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்த அமைதிக்கு காரணம் எடப்பாடி அரசுக்கு எதிராக மத்திய அரசிலும் பா.ஜ.க.வின் தலைமையிலும் வீசிக் கொண்டிருக்கும் புயல் என்கிறார்கள் மத்திய அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

ministers



புதனன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஐஸ்க்ரீம், மிக்சர், ஸ்வீட் என பலகாரங்கள், காபி, டீ என பரிமாறிக் கொண்டே இருந்தார்கள். பொதுவாக கூட்டம் முடிந்த பிறகுதான் இவையெல்லாம் வரும். கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இப்படி பலகாரங்களை கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்கள் என்று நிர்வாகிகள் தங்களுக்குள் பேசினர். கட்சியின் முக்கிய தலைகள் மட்டுமே பேசின. அதில் இ.பி.எஸ்., "உள்ளாட்சித் தேர்தலில் கட்சி பிரதிநிதிகள் வெற்றி பெற வேண்டும்' என வலியுறுத்தினார். கே.பி.முனுசாமி, "கட்சி கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களில் பேசக்கூடாது' என்றார். வைத்திலிங்கம், "ஒற்றைத் தலைமை தேவையில்லை' என்றார். கூட்டம் முடிந்தது என கிளம்பி விட்டார்கள்.

 

admk



கூட்டத்திற்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் தோல்விக்குக் காரணம்' என சொன்ன அமைச்சர் சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்திற்கு வரவில்லை. தலைமை மாற்றம் பற்றி பேசிய ராஜன் செல்லப்பாவிடமிருந்து கூட்டத்தில் சத்தம் எழவில்லை. குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வைத்தியம் செய்துகொள்ள போய்விட்டார் என்றனர். எல்லோரும் அமைதி காத்ததால், வந்திருந்த நிர்வாகிகள் புறப்பட்டார்கள்.

 

bjp



ஏனிந்த அமைதி என அ.தி.மு.க. தலைவர்களிடம் கேட்டபோது, ""மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுப்பு, இன்னும் 15 நாட்களுக்குள் முக்கிய அமைச்சர் கைது, இரண்டு மாதங்களில் ஐந்து அமைச்சர்கள் கைது என புதிய மத்திய அரசு எடப்பாடி மீது கடும் கோபத்தில் இருப்பதாக பட்டியலிட்டனர். குருமூர்த்தி தனது பத்திரிகையில் அ.தி.மு.க.வை கிண்டலடித்து போட்ட கார்ட்டூனை கண்டித்ததோடு ராஜன் செல்லப்பா, குன்னம் எம்.எல்.ஏ. மூலம் ஓ.பி.எஸ்.சை குறிவைத்து ஒற்றைத் தலைமை என பேசியது டெல்லியை டென்ஷனாக்கிவிட்டது.

 

bjp



நாங்கள் நினைத்தால் ஓ.பி.எஸ்.சை முதல்வராக்குவோம். எடப்பாடியை கொடநாடு வழக்கில் கைது செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும். ஓ.பி.எஸ்.சை முதல்வராக்கி இன்று எடப்பாடியோடு இருக்கும் அத்தனை எம்.எல்.ஏ.க்களையும் ஆதரிக்க வைக்க எங்களால் முடியும். இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் இதையெல்லாம் செய்தவர்கள் நாங்கள். யாரிடம் விளையாடுகிறீர்கள்' என அமித்ஷா விடமிருந்து எச்சரிக்கை வந்தது. அத்துடன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தையும் டெல்லிக்கு அழைத்தார் அமித்ஷா. அதையடுத்து அமைச்சர்கள் தங்க மணி, வேலுமணி ஆகியோர் அமித்ஷாவையும், பியூஷ் கோயலையும் சந்தித்தனர். டெல்லியில் சரணாகதி புராணம் பாடிவிட்டு வந்த பிறகுதான் நிர்வாகிகள் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடந்தது.

 

governor



நிர்வாகிகள் கூட்டத்தில் எந்த வில்லங்கமான விவாதமும் வரக் கூடாது. "வாயை மூடி பேசவும்' என டெல்லி உத்தரவிட்டபடியே அமைதியாக ஒரு கூட்டத்தை எடப்பாடி நடத்தினார். அதற்கு ஓ.பி.எஸ்.சும் ஒத்துழைப்பு தந்தார்'' என டெல்லியில் வீசிய புயலை பற்றி விளக்குகிறார்கள். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி உள்பட சேனல் மைக்குகள் முன் உரை யாற்றுபவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட் டுள்ளது. அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டம் முடிந்தவுடன் டெல்லி புயலின் வேகத்தைக் குறைக்க கவர்னரை சந்தித்தார் எடப்பாடி.


டெல்லி புயலை நேரடியாக எதிர் கொண்டவர்கள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும்தான். "கோவை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சூலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை விட 19,000 வாக்குகள் குறைவாக பெற்றார். சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. 10,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெறுகிறதே, கிட்டத்தட்ட 30ஆயிரம் வாக்குகள் இந்த இடைவெளிக்குள் அதிகமானது எப்படி?' என வேலுமணியை அமித்ஷா மிக கோபமாக கேட்டார். பா.ஜ.க. வெற்றியில் அ.தி.மு.க. அக்கறை காட்டவில்லை என்பதுதான் அமித்ஷாவின் குற்றச்சாட்டு.


மோடியா-லேடியா' என ஓப்பனாக சவால்விட்டுப் பேசிய கட்சியில், இப்போது மோடி-அமித்ஷா உத்தரவின்படி அத்தனை பேரும் வாயை மூடி பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
 

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.