Skip to main content

தமிழர்களை போல் முருகனும் பா.ஜ.கவை ஏற்கமாட்டார்... வரலாறு படித்து விட்டு வாருங்கள் முரளிதர் ராவ்... எஸ்.எஸ்.சிவசங்கர் பதில்

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
bjp

 

 

தமிழர்களை போல், முருகனும் பா.ஜ.கவை ஏற்கமாட்டார் என கூறியுள்ளார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர். மேலும் தமிழக வரலாறு தெரியாமல் முரளிதர் ராவ் பேட்டி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

இதுதொடர்பாக எஸ்.எஸ்.சிவசங்கர் நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவிக்கையில், 

 

"தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்களே", என்று பா.ஜ.க மாநில பொறுப்பாளர் முரளிதர் ராவ் பேட்டி கொடுத்துள்ளார்.

 

முரளிதர் ராவ் பேட்டியிலேயே பா.ஜ.கவினரின் அகம்பாவம் வெளிப்படுகிறது. 

 

கடவுள் முருகனுக்கு எதிரானவர்கள் பா.ஜ.கவிற்கு எதிரானவர்கள் என்று சொன்னால், இவர்கள் கடவுள் முருகனை மதிப்பதாக அர்த்தம். ஆனால் முரளிதர் ராவ் சொல்வது பா.ஜ.கவை எதிர்ப்பவர்கள் கடவுள் முருகனுக்கு எதிரானவர்கள்.

 

முரளிதர் ராவ் சொல்வதை எப்படி அர்த்தம் கொள்வது?

 

கடவுள் முருகன் பா.ஜ.கவின் தொண்டரா, பா.ஜ.கவின் எதிரிகளை அவரின் எதிரிகளாக கொள்ள?

 

கடந்த மாதம் கடவுள் முருகனை  பா.ஜ.கவினர் எப்படி அவமானப் படுத்தினார்கள் என்பதை தமிழகமே பார்த்தது. அதே போல் தான் முரளிதர் ராவும் கடவுள் முருகனை அவமானப்படுத்துகிறார்.

 

ஒட்டடை அடிக்கும் டஸ்டரில் பேப்பர் சுற்றி வேல் என ஏமாற்றினார் ஒரு பா.ஜ.க தலைவர். ராமரை வீட்டினுள்ளும், முருகனை வாசலிலும் வைத்து வணங்கினார் ஒரு பெண் தலைவர். ஒருவர் முதல் இரவுக்கு போகும் வள்ளிகந்தன் போல் கழுத்தில் மல்லிகைப் பூவை சுற்றிக் கொண்டு கையில் அட்டை வேலை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தார். இன்னொருவர் பூஜை அறையில் இடம் கொடுக்க மனமில்லாமல், சமையலறையில் முருகன் படத்தை வைத்து வணங்குவதாக நடித்தார். கணித மேதை ஒருவர், பாக்கெட் டைரி முருகன் படத்தை வைத்து பூஜிப்பதாக பாவ்லா காட்டினார். 

 

கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகவாதிகள் கூட கடவுளரை இப்படி அவமானப் படுத்த மாட்டார்கள். முருகனை "படுத்தி" எடுத்து விட்டார்கள், இந்த "மேல்மட்ட" பா.ஜ.கவினர்.

 

அவர்கள் அப்படி தான் செய்வார்கள். காரணம், அவர்கள் முருகனை வணங்குபவர்கள் கிடையாது. விநாயகனை வணங்குபவர்கள் அவர்கள். வினாயகனிடம் உள்ள 'ஒன்று' முருகனிடம் கிடையாது. அவர்களை பொறுத்தவரை முருகன் காடு, மலையில் இருக்கும் தமிழ் கடவுள். அதனால் முருகனை வணங்க மாட்டார்கள். அதனால் தான், அவர்களின் வேல் பூஜை நாடகம் பல்லிளித்தது. 

 

S. S. Sivasankar

 

அவர்கள் எல்.முருகனை மாநிலத் தலைவராக நியமித்ததையே ஏற்க முடியாமல் தவிப்பவர்கள். கடவுள் முருகனையும் அப்படி தான் தவிப்பார்கள்.

 

பாவம் முரளிதர் ராவ், அவருக்கு இந்த நுட்பம் புரியாமல், பேட்டி கொடுத்திருக்கிறார். முரளிதர் ராவ்க்கு தமிழ்நாட்டு வரலாறும் தெரியாது.

 

தி.மு.க ஆட்சி 1967ல் முதல் முறை அமைந்த போது, தி.மு.கவினர் திராவிடர் கழகத்து தயாரிப்புகள், அதனால் நாத்திகர்களாக தான் இருப்பார்கள், அவர்கள் கோவில்களை புறகணிப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது. அப்படி பிரச்சாரமும் செய்யப்பட்டது. ஆனால் அறநிலையத்துறை மூலம் பல கோவில்களுக்கு கும்பாபிசேகம் செய்யப்பட்டது, ஓடாமல் இருந்த தேர்கள் ஓட வைக்கப்பட்டது, கோவில்களில் திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டன.

 

இவற்றை பார்த்த முருகப் பெருமான் புகழ்பாடும் திருமுருக கிருபானந்த வாரியார், ''நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர் என்று எம்பெருமானே மகிழ்வார்", என அன்றைய முதல்வர் கலைஞரை புகழ்ந்தார். வாரியார் சொன்ன 'எம்பெருமான்' கடவுள் முருகன் தான்.

 

பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில், திருச்செந்தூர் முருகக் கடவுளின் "வேல்" திருடு போனது. அப்போது, அதனை கண்டித்து நடைபயணம் போய் போராட்டம் நடத்தியவர் தி.மு.க தலைவர் கலைஞர் தான். 

 

ஆட்சியில் இருந்த போது முருகனுக்கு விழா எடுத்தவரும் கலைஞர் தான், எதிர்கட்சியாக இருந்த போது முருக வேலுக்காக போராடியவரும் கலைஞர் தான்.

 

வரலாறு படித்து விட்டு வாருங்கள் முரளிதர் ராவ். 

 

நீங்கள் நினைக்கும் "ஷுப்ரமண்யா" அல்ல இவன். 

 

இவன் "தமிழன்" முருகன். 

 

நோட்டாவோடு போட்டி போட்டு 3% ஓட்டு வாங்கியது உங்கள்  பா.ஜ.க. தமிழகத்தில் இருக்கும் ஏனைய 97% மக்கள் பா.ஜ.கவை ஏற்கவில்லை. 

 

தமிழர்களை போல், முருகனும் பா.ஜ.கவை ஏற்கமாட்டார். முருகனை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால், சம்காரம் தான் நடக்கும்! இவ்வாறு கூறியுள்ளார். 


 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.