Skip to main content

பாஜகவின் வெறுப்பு அரசியலை முடிவுக்கு கொண்டுவருவோம்! 200 எழுத்தாளர்கள் பகிரங்க வேண்டுகோள்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

இந்தியாவில் தற்போது நிலவும் பாஜகவின் வெறுப்பரசியலுக்கு முடிவுகட்டி, சமத்துவமான, வேற்றுமையில் ஒற்றுமை என்ற பாரம்பரிய இந்தியாவை கட்டமைப்போம் என்று புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், அருந்ததி ராய் உள்ளிட்ட ஆங்கிலம், இந்தி, தமிழ், உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த 200 எழுத்தாளர்கள் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

200 writers

 

 

வெறுப்பு அரசியலைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, படைப்பாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ள அவர்களுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுத்தாளர்களும், கலைஞர்களும், திரைப்பட படைப்பாளிகளும், இசைக்கலைஞர்களும், இதர கலாச்சார ஆர்வலர்களும் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கத்தை கேள்வி கேட்பவர்களை துன்புறுத்துகிறார்கள். கைது செய்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குப் பதிவு செய்கிறார்கள். பலரை கொலையும் செய்கிறார்கள். இவை அனைத்தும் மாற வேண்டும். வெறுப்பரசியலுக்கு எதிராக வாக்களித்து நாம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். சமத்துவமான, வேற்றுமையில் ஒற்றுமை என்ற தத்துவத்தை பாதுகாக்கும் வகையில் இந்திய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
 

அவரவர் விரும்பிய உணவை உண்ணவும், விருப்பமான கடவுளை வணங்கவும், அவரவர் விருப்பப்படி வாழவும், கருத்துகளை சுதந்திரமாக வெளியிடவும், எல்லா குடிமக்களுக்கு சமஉரிமைகளை பெற்றுத்தரவும், எதிர்க்கருத்துகளை பேச அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமையை பாதுகாக்கவும், மக்களைப் பிளவுபடுத்தி தாக்குதல் நடத்துவதை தடுக்கவும் நாம் வாக்களிக்க வேண்டும் என்று அதில் கூறியிருக்கிறார்கள்.

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.