Skip to main content

எடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் உடன்பாடில்லாத நிலையில் அதனை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில், தேர்தல் குறித்து எடப்பாடி எடுத்த அஸ்திரத்தை முறியடித்துள்ளது டெல்லி என்கிறார்கள் பா.ஜ.க.வினர். தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் நீதிமன்றங்களில் கால அவகாசம் கேட்டு இழுத்தடித்து வருகிறது எடப்பாடி அரசு. தி.மு.க. தொடர்ந்த வழக்கை காரணமாக காட்டி தப்பிக்க முயற்சிப்பதிலேயே காலம் கடத்தியது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களின் எதிர்பார்ப்புகள் முடங்கிக்கிடப்பதோடு ஊழல்கள் பெருத்துக் கிடக்கின்றன. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களை புறந்தள்ள முடியாமல் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது எடப்பாடி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையம்.
 

eps



தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆணையத்தின் கமிஷனர் பழனிச்சாமி எடுத்துவரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்கான பரபரப்பு தமிழக அரசியல் கட்சிகளை தொற்றிக்கொண்டிருக்கிறது. அதன் முதல் கட்டமாக, தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்களது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை பெறத் துவங்கியுள்ளன அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள்.
 

admk



தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அக்டோபர் 31 ந்தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை கமிஷனர் பழனிச்சாமி அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு கொடுத்த யோசனையை ஏற்க வேண்டிய நிலையில் இருந்தார் அவர். அதற் கேற்ப, தேர்தலில் பயன் படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்கும் பணியை பெங்களூரிலுள்ள பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், ஹரியானா, மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக தொழில்நுட்ப பணியாளர்கள் பிசியாக இருப்பதால் தமிழக பணிகளை நவம்பர் மூன்றாவது வாரத்தில்தான் முடிக்க முடியும் என பெல் நிறுவனம் அறிவுறுத்தியதை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி மேலும் 4 வாரத்துக்கு அவகாசம் வாங்கியிருக்கிறார் ஆணையர் பழனிச்சாமி. அதனால், அக்டோபர் 31-ந்தேதி வெளியிட வேண்டிய நோட்டிஃபிகேசன் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் முதல்வாரத்தில், தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் அரசு தரப்பில் எந்த ரகசிய முடிவையும் எடுக்காமலிருந்தால் பொங்கலுக்கு முன்பாக தேர்தல் நடத்தி முடிக்கப்படும்'' என்கின்றனர்.
 

admk



தேர்தலை எதிர்கொள்ள வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க. தயாராகியிருக்கும் நிலையில், அது தொடர்பாக கட்சியின் சீனியர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த விவாதங்களில் தோழமைக்கட்சிகளுக்கு செக் வைக்கும் சில திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டதாக அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடமிருந்து செய்திகள் கசிகின்றன.
 

vck



சீனியர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, தமிழகத்தில் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இதில் சென்னை உள்பட 5 மாநகராட்சிகளை கேட்கிறது பா.ஜ.க. 5 கேட்டால் 3 கிடைக்கும் என பா.ஜ.க. கணக்குப் போட்டுள்ளது. அதற்கான அழுத்தத்தை கடந்த 2 மாதங்களாகவே எடப்பாடிக்கு கொடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. அதே போல கூட்டணியிலுள்ள பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளும் தலா 3 மாநகராட்சிகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. பேச்சுவார்த்தையில் 2 மாநகராட்சிகளுக்கு பிடிவாதம் காட்டுவார்கள். மேலும், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் சீட் கேட்டுள்ளனர். தவிர, அனைத்து நிலைகளிலுமுள்ள வார்டுகளில் பாஜக 35 சதவீதம், பா.ம.க. 20 சதவீதம், தே.மு.தி.க. 25 சதவீதம் இடங்களை எதிர்பார்க்கின்றன. இது தவிர கூட்டணியிலுள்ள மற்ற கட்சிகளும் இதே கணக்குகளை போட்டு எடப்பாடியை நெருக்கியிருக்கின்றன.
 

bjp



தோழமைக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளில் குறைந்தபட்சத்தை நிறைவேற்றினாலும் அ.தி.மு.க. விரும்பிய இடங்களில் போட்டியிட முடியாத சூழல் உருவாகும். மேலும், தோழமைக் கட்சிகளுக்கு மேயர் பதவிகளை தாரை வார்ப்பதால் அந்த மாநகராட்சிகளில் அவர்கள் வெற்றிபெறும்பட்சத்தில் அந்த வெற்றி அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே மிரட்டலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என எடப்பாடி நினைக்கிறார்.

இதனையடுத்துதான் மூத்த,  முக்கிய அமைச் சர்களிடம் ஆலோசித்தார் எடப்பாடி . அப்போது, "இந்த கவலை எங்களுக்கும் உண்டு. கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் அ.தி.மு.க.வுக்கு போட்டியிட 7 மாநகராட்சிதான் கிடைக்கும். இது அ.தி.மு.க.வின் வலிமையை குறைக்கும். அ.தி.மு.க. கட்டாயம் 12 மாநகராட்சிகளில் போட்டியிட்டால்தான் நமது வலிமை நிரூபிக்கப்படுவதோடு கட்சியினரையும் திருப்திப் படுத்த முடியும். மேலும், மாநகராட்சி மேயர் பதவிகளை விட்டுக்கொடுக்க முடியாது. மற்றவைகளை ஒதுக்குகிறோம் என சொல்லி கூட்டணி கட்சியினரை சம்மதிக்க வைப்பதுதான் சரியாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு மேயர் பதவி களை ஒதுக்கினால் அங்கெல்லாம் தி.மு.க. ஈசியாக ஜெயித்துவிடும். அதனால் மேயர் பதவிகள் ஒதுக்குவதில் கறாராக இருப்பதுதான் நமக்கு நல்லது என சொல்லியிருக்கிறார்கள் அமைச்சர்கள்.


இதை ஆமோதித்த எடப்பாடி, இந்த யோசனை சரியானதுதான். ஆனால், நாடாளுமன்ற தேர்தலின் போது நாம் எடுத்த அதிரடிகளை இந்த முறை பா.ஜ.க. ரசிக்காது. மேயர் பதவி தரப்படாவிட்டால் எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராவார்கள். அதனால், மக்கள் வாக்களித்து மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நேரடி முறையை மாற்றி கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் மறைமுக தேர்தலை நடத்தினால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேயர் மற்றும் தலைவர் பதவிகளை நம் சக்தியைப் பயன்படுத்தி கவுன்சிலர்களை பார்த்து பிடித்துவிடலாம். இதன் மூலம் தோழமைக் கட்சிகளின் எதிர் பார்ப்புகளை தடுத்துவிட முடியும்' என எடப்பாடி சொல்ல, அந்த யோசனையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். மேலும், 70 சதவீத இடங்களில் அ.தி.மு.க. போட்டியிட்டால்தான் 50 சதவீத இடங்களையாவது நாம் கைப்பற்றமுடியும் எனவும் விவாதித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலும் இவை குறித்து விவாதிக்கப்பட்டன. ஆனால், பா.ஜ.க. உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கு செக் வைக்க இப்படியெல்லாம் எடப்பாடி போட்ட திட்டத்தையறிந்து டென்சனானது பா.ஜ.க. தலைமை. உடனே டெல்லியிலிருந்து, "தற்போது நடைமுறையில் இருக்கும் நேரடி தேர்தலில் ஏதேனும் மாற்றம் செய்தால், நீங்கள் எதிர்பார்க்காத பல விசயங்கள் நடக்கும்' என எச்சரிக்கை செய்தது பா.ஜ.க. அதன்பிறகே தனது திட்டத்தை கைவிட்டார் எடப்பாடி''’ என விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.


இதுகுறித்து டெல்லியோடு தொடர்புடைய பா.ஜ.க. தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் எடப்பாடிக்கு இப்போதும் விருப்பம் கிடையாது. ஆனால், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. கொடுத்த அழுத்தம்தான் தேர்தலை நடத்த அவரை ஒப்புக்கொள்ள வைத்தது. கடந்த மாதம் டெல்லியில், தன்னை சந்தித்த தமிழக அமைச்சர் தங்க மணியிடம் இதனை அழுத்தமாகவே வலியுறுத்தினார் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல். எடப்பாடியை தொடர்புகொண்டும் அவர் பேசினார்.

உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் தொடங்கி கவுன்சிலர்கள் வரை அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க.வினர் இருந்தால்தான் மக்களோடு நெருங்கிப் பழக முடியும். மக்களின் நெருக்கமும் அவர்களின் தேவைகளும் நிறைவேறுவதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியும். இது, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியாக இருக்கும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்சாவுக்கு கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எடப்பாடி அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. தற்போது, தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டிருக்கும் எடப்பாடி, நாடாளுமன்ற தேர்தலைப் போல பா.ஜ.க.வை ஈசியாக ஹேண்டில் பண்ண நினைக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் அது நடக்காது. பா.ஜ.க.வின் விருப்பப்படிதான் சீட் ஷேரிங் நடக்கும். இதனை தடுப்பதற்காகத்தான் மறைமுக தேர்தலை நடத்தும் அஸ்திரத்தை எடுத்தார் எடப்பாடி. அமைச்சரவையில் இதனை விவாதித்து, அதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்வதற்காக சட்டமன்றத்தின் அவசர கூட்டத்தை கூட்டவும் ரகசியமாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், இதனை அறிந்து எங்கள் தலைமை கொடுத்த டோஸில் அந்த ரகசிய திட்டம் கைவிடப்பட்டிருக்கிறது'' என்கின்றனர்.

நீதிமன்றத்தின் கண்டனம், பா.ஜ.க. தலைமையின் அழுத்தம் ஆகியவற்றை எதிர் கொள்ள முடியாமல் தேர்தலை நடத்துவதற்கான சூழலை எடப்பாடி அரசு உருவாக்கி வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வரையறை குளறுபடிகள், இடஒதுக்கீட்டில் மகளிருக்கான இடங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட முரண்பாடுகளை சுட்டிக்காட்டி தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் பொதுநல வழக்கு தொடர்ந்து தேர்தலுக்கு தடை கேட்கும் முயற்சியிலும் அ.தி.மு.க. தலைமை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் எதிரொலிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. தொண்டர்களிடம் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், "சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சி மேயருக்கு 15 கோடியும், மற்ற மாநகராட்சிகளுக்கு 10 கோடியும் செலவு செய்ய தகுதியுடையவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றும், சென்னை வார்டு கவுன்சிலர்களுக்கு 7 கோடியும் மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கு 5 கோடியும் செலவிட தகுதியுள்ளவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, உள்ளாட்சி அமைப்புகளின் ஒவ்வொரு பதவியின் தன்மைக்கேற்ப கோடிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தினர்.

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.