Skip to main content

பாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.!

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

சாமியார்கள் என்ற முகமூடி இருந்தால் போதும். சர்வசாதாரணமாக குண்டுவெடிப்புகளை நிகழ்த்தலாம். உயிர்களைப் பறித்து எளிதாக தப்பிவிடலாம் என்ற நிலை இந்தியாவில் உருவாகிக் கொண்டிருக்கிறதோ என்று சட்டத்துறை அறிஞர்களே பதற்றம் அடையும் நிலையை பாஜக ஏற்கெனவே செய்துகாட்டியது.
 

N I A BJP


ஏற்கெனவே, நீதித்துறையை பாஜக கைப்பற்றிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வரும் நிலையில், புதிதாக அச்சப்படும் நிலையில் அப்படி என்ன செய்தது என்றுதானே கேட்கிறீர்கள்? அதைப்பற்றி பிறகு பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து அந்த தாக்குதலை விசாரிக்க சிறப்பு அதிகாரங்களுடன் என்ஐஏ என்ற புதிய அமைப்பை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு உருவாக்கியது. அந்த அமைப்பு மும்பைத் தாக்குதலை மட்டுமின்றி, இந்தியாவுக்குள் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலையும் விசாரிக்கத் தொடங்கியது.

இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்று கருதி விசாரணை நடத்தப்பட்ட பல வழக்குகளில் இந்துச் சாமியார்கள்தான் சிக்கினார்கள். இதையடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களைப் பற்றிய விவரங்களை பிறகு பார்க்கலாம். அதற்கு முன் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரங்களை விரிவுபடுத்தி மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருக்கும் செய்தியை அறிந்து கொள்வோம்.

ஏற்கெனவே என்ஐஏ விசாரித்து முடித்த வழக்குகளில் இருந்து பல சாமியார்களை பாஜக அரசு விடுவித்திருக்கிறது. விடுதலையாகாத பிரக்யா என்ற பெண் சாமியாரை மக்களவை உறுப்பினராகவே ஆக்கியிருக்கிறது பாஜக. இப்படிப்பட்ட நிலையில் என்ஐஏவிற்கு ஏன் கூடுதல் அதிகாரம் கொடுக்கிறது பாஜக?
 

N I A BJP


பாஜகவின் நோக்கத்தை சந்தேகம் எழுப்பி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்ப்பை மீறி பாஜக இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மீதும், இந்திய சொத்துக்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதர்களை கடத்தும் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் இந்தச் சட்டத்திருத்தம் வகை செய்திருக்கிறது.

இந்தச் சட்டத்திருத்தம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மிரட்டும் வகையிலும் அரசுக்கு எதிரானவர்களை மிரட்டும் வகையிலும் செய்யப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் கூறியிருக்கிறது. இந்தியா முழுவதும் போலீஸ் ராஜ்ஜியம் நடத்தவும் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் இந்தச் சட்டத்திருத்தம் பாஜகவுக்கு உதவியாக அமைந்துவிடும் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்த மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். அவருடைய உறுதியை எந்தளவுக்கு நம்பலாம் என்பதை ஏற்கெனவே நாட்டு மக்கள் நன்றாக அறிந்தே வைத்திருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆட்சிக் காலத்தில் என்ஐஏவை எப்படி பாஜக அரசு தனது இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்தது என்பதற்கு சில உதாரணங்களை பார்க்கலாமா?

2007ம் ஆண்டு மே 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட, சாமியார் அசிமானந்தா உள்ளிட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்த இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர்.
  N I A BJP


இந்த நிகழ்வை விசாரித்த சிபிஐ, இஸ்லாமியர்கள் பலரை கைது செய்து பல மாதங்கள் காவலில் வைத்தது. முடிவில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகுதான் முந்தைய பல குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அசிமானந்தா என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியைச் சேர்ந்தவர் நப குமார் சர்க்கார். பாட்டனி படித்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சிபெற்றவர். தனது பெயரை அசிமானந்தா என்று மாற்றிக்கொண்டு, தன்னை ஒரு சாமியார் என்றும் அறிவித்துக் கொண்டார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் மலேகான் தர்கா, ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்கா, பாகிஸ்தான் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் இவர் முக்கியமானவர் என்று கருதப்படுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை பல இடங்களில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

குண்டுவெடிப்புகள் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது எழும் சந்தேகத்தின் அடிப்படையில் அதிரடிப்படையினர் இஸ்லாமியர்கள் சிலரை கைது செய்து விசாரணை நடத்தியது.
 

NIA BJP


2006 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, மகாராஸ்டிரா மாநிலம் மாலேகானில் பள்ளிவாசல் அருகே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது.

2007 பிப்ரவரி 18 ஆம் தேதி நள்ளிரவு டில்லியிலிருந்து லாகூர் செல்லும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 64 பேர் பலியாகினர்.

2007ம் ஆண்டு மே 18 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்து 9 பேர் உயிரிழந்தனர்.

2007ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அஜ்மீரில் உள்ள தர்காவில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 

2007 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பிரசாரக் சுனில் ஜோஷி மத்தியப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார். மாலேகான், சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான பெண் சாமியார் பிரக்யாவுக்கு வேண்டியவரான இவர், அவரிடம் தகாதமுறையில் நடக்க முயன்றதால் கொல்லப்பட்டதாக கண்டறியப்பட்டது.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி மீண்டும் மாலேகானில் 3 குண்டுகள் வெடித்து 7 பேர் பலியாகினர்.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய இரவு கோவா மாநிலத்தில் உள்ள பானாஜியில் குண்டுவெடித்து ஒருவர் பலியானார். நரகாசுரன் விழாவில் கூடியிருந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்பட்டது. தொடக்கத்தில் இஸ்லாமிய பயங்கவாதிகளை சந்தேகித்த போலீஸ், பின்னர், சனாதன் சன்ஸதா என்ற இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்தது.
  NIA BJP


2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக அரசு மத்தியில் அரசு அமைத்த பின்னர், என்ஐஏ இணையதளத்தில் இந்துப் பயங்கரவாதம் என்ற தலைப்பில் இருந்த வழக்குகள், இதர குழுக்கள் என்ற தலைப்புக்கு மாற்றப்பட்டன.

இதையடுத்து, இந்துப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மென்மையான போக்கை கையாளுமாறு தான் மிரட்டப்படுவதாக, சிறப்பு மத்திய அரசு வழக்கறிஞரான ரோஹினி சாலியன் பகிரங்கமாக தெரிவித்தார். இந்நிலையில்தான், பாஜக அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக என்ஐஏவை பயன்படுத்தி வழக்குகளை சீர்குலைக்கும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்தார்.

அவர் இப்படிக் கருத்துக் கூறி இரண்டே வாரங்களில், சுனில் ஜோஷி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்சாமியார் பிரக்யாவை தேவாஸ் நீதிமன்றம் விடுவித்தது. அதைத்தொடர்ந்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்தும் பிரக்யா மற்றும் 5 இந்து பயங்கரவாதிகளை என்ஐஏ விடுவித்தது. அதுபோல, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு, சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளிலும் பல சாட்சிகள் மிரட்டப்பட்டு பிறழ்சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

அதாவது 9 வழக்குகளில் 4 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு, மூவர் தவிர அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். ஒரு வழக்கில் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் முடித்து வைக்கப்பட்டது. நிலுவையில் உள்ள 4 வழக்குகளின் கதி என்னவென்று யூகிக்க முடியாதா என்ன?

 

 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.